articles

img

சங்கரய்யா ஒரு கலங்கரை விளக்கம்....

“மதுரையின் வரலாறு” பல்வேறுநூல்களில் பதிவு செய்யப்பட்டுள் ளது. அரசியல் நடவடிக்கைகளும் பல பக்கங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரைக்கு என வீரஞ் செறிந்த வரலாறு உள்ளது. மதுரையின் வரலாற்றுப் பக்கங்களில் தோழர் என்.சங்கரய்யாவின் போராட்ட குணம் நிறைந்த நடவடிக்கைகள், இந்தி எதிர்ப்புக்கு எதிரான போராட்டம், வெள்ளையனே வெளியேறு போராட்டம், மாணவர்கள் நலன் சார்ந்த போராட்டம் ஆகியவற்றையும் பதிவு செய்துள்ளது.

தோழர் என்.சங்கரய்யா மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது அவர் பங்கேற்ற போராட்டங்களில் முக்கியமானது இந்தி எதிர்ப்புப் போராட்டம். அன்றைக்கு முதல்வராக இருந்த ராஜாஜி இந்தியைத் திணிக்க முயற்சித்தபோது மதுரை நகரில் அதற்கெதிரான போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களில் சங்கரய்யாவும் ஒருவர்.மார்க்சிய இயக்கம் தடை செய்யப்பட்டிருந்த காலத்தில்,அதன் கொள்கைகளை மறைமுகமாகப் பிரச்சாரம் செய்தவர்சங்கரய்யா.
கம்யூனிச இயக்கத்தின் வளர்ச்சிக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வளர்ச்சிக்கும் 100 ஆண்டுகள் உழைத்த  முது பெரும்தலைவர் என்.சங்கரய்யாவின் உழைப்பும், அர்ப்பணிப்பானபணியும் எதிர்கால சந்ததியினருக்கு வழிகாட்டியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.கம்யூனிச சித்தாந்தம் இந்தியா முழுவதும் பரவ  வேண்டும்எனப் பல தலைவர்கள்  பாடுபட்டனர். தமிழகத்தில் சிங்காரவேலர், பி.ஜீவா ஆகியோரின் பங்களிப்பு மகத்தானது.மதுரை மேற்குத் தொகுதியில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அவர்போட்டியிட்ட தொகுதியில் நானும் போட்டியிட்டு இரண்டு முறை வெற்றிபெற்றுள்ளேன்.

 அவர் போட்டியிட்ட தொகுதியில் நானும் போட்டியிட்டதைப் பெருமையாகக் கருதுகிறேன்.மதுரையில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சிக்கும் அதை வேரூன்றச் செய்வதற்கும் மறைந்த தோழர்கள் பி.ராமமூர்த்தி, ஏ.பாலசுப்பிரமணியம், தூக்கு மேடை தியாகி பாலு,மாரி-மணவாளன் ஆகியோரோடு சங்கரய்யாவும் உயிரைத்துச்சமென மதித்து களத்தில் நின்றார்.சங்கரய்யாவின் கம்பீரக் குரலும் உணர்ச்சிமிகு உரையும்என் காதுகளில் இன்றும் ஒலிக்கிறது. சங்கரய்யா தனது மனதில் பட்ட கருத்துக்களைத் துணிச்சலாக, யாரைப் பற்றியும்கவலைப்படாமல் எடுத்துச் சொல்லக் கூடிய சித்தாந்தவாதி.கே.பி.ஜானகியம்மாள் அவர்களுடன் இணைந்து இயக்கப் பணி ஆற்றியுள்ளார். அவர் பல்லாண்டு வாழ வேண்டும். அவர் ஒரு கலங்கரை விளக்கம். மார்க்சிய கருத்துக்களை உயர்த்திப்பிடிக்கும் அந்த கலங்கரை விளக்கம் பலருக்கு முன்னுதாரணமாக  விளங்கிக்கொண்டிருக்கிறது.

சமதர்மம், சகோதரத்துவம், சமூகநீதிக் கோட்பாடுகளுக்கு ஒரு சிறு சேதாரம் ஏற்படாமல் டாக்டர் கலைஞர்பாதுகாத்தார். தோழர் சங்கரய்யாவும் சமதர்மம், சகோதரத்துவம், சமூகநீதிக்கோட்பாட்டின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டவர்.தமிழகத்தின்  முதல்வர் மு.க.ஸ்டாலின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா மீது அளப்பரிய மரியாதை வைத் துள்ளார்.தோழர் சங்கரய்யா பல்லாண்டுகள் வாழ வேண்டுமென என் சார்பிலும் திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பிலும் வாழ்த்துகிறேன்.

கட்டுரையாளர் :  பொன்.முத்துராமலிங்கம், திமுக மூத்த தலைவர்

;