articles

img

கல்லணை கால்வாய் : பத்தாண்டுகளாக தூங்கிவிட்டு பகட்டாக விழா நடத்துவதா?

கல்லணை கால்வாய் வெட்டப்பட்டு 86 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் வானம் பார்த்த பூமியாக இருந்த தஞ்சையின் தென் பகுதியில் இருக்கக்கூடிய ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி தாலுகாக்கள். இங்குள்ள விவசாய நிலப்பரப்பு சுமார் 3 லட்சம் ஏக்கர். மேடான பகுதி இது. ஆறு என்பது பள்ளத்தை நோக்கித் தான் போகும். இது முழுக்க முழுக்க மேட்டுப்பகுதியாக இருக்கக்கூடிய பகுதிகளில் பாசனத்திற்காக வெட்டப்பட்ட ஒரு கால்வாய்.

கல்லணையில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, நாகுடி வரை 149 கி.மீ. நீளம் கல்லணைக் கால்வாய் செல்கிறது. பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் 109 கிலோமீட்டர் வெட்டப்பட்டது. அதன் பிறகு இந்திய நாடு விடுதலை பெற்ற பிறகு 41 கிலோமீட்டர் வெட்டப்பட்டு, கிட்டத்தட்ட 149 கி.மீ. நீளம் ஆக்கப்பட்டது. 

                                                          ***********************

கல்லணை கால்வாயில் 149 கிலோ மீட்டரும் மேடான பகுதி ஆகும். இவற்றின் அமைப்பு பொறியியல் துறையின் உச்சம் என்றே சொல்லலாம். பல இடங்களில் இந்தப் பாசன ஆறு மேலே செல்லும், கீழே காட்டாறு செல்லும். ஓரிடத்தில் காட்டாறு மேலே செல்லும் பாசன ஆறு பூமிக்கு அடியில் கீழே செல்லும். இந்த அமைப்பு சூரக்கோட்டை வடக்கே உள்ளது. பாசன ஆறு பூமிக்கு கீழே தண்ணீர் சென்று 200 மீட்டர் தூரத்தில் வெளியே வரும். அந்த 200 மீட்டருக்கு இடையே காட்டாறு. வெட்டிக்காட்டுக்கு தெற்கே கல்லணைக் கால்வாய் மேலே செல்லும். கீழே மகாராஜா சமுத்திரம் என்ற காட்டாறு செல்லும் இது 86 ஆண்டுகளுக்கு முன்பே பொறியியல் துறை செய்து காட்டியுள்ள மாபெரும் சாதனையாகும். இங்கிலாந்தில் இருக்கக்கூடிய தேம்ஸ் நதியை மாதிரியாக வைத்து கட்டப்பட்ட ஆறு இது. 

                                                          ***********************

கல்லணையிலிருந்து நாகுடி வரை போகக்கூடிய 149 கிலோமீட்டர் வழியில் 27 சிறிய கிளை ஆறுகள் உள்ளன. கல்லணை கால்வாய் என்பது பிரதான கால்வாய் (மெயின் சேனல்) ஆகும். அதிலிருந்து கல்யாண ஓடை வாய்க்கால் ராஜாமடம் வாய்க்கால், தம்பிக்கோட்டை வடகாடு வாய்க்கால் நெய்வாசல், தென்பாதி, வடுவூர், இப்படி செல்லக்கூடிய 27 கிளை வாய்க்கால்கள் உள்ளன. 

                                                          ***********************

இதல்லாமல் 337 ஏ சேனல், பி சேனல் வாய்க்கால்கள் உள்ளன. ஒட்டுமொத்த 337 வாய்க்கால்களின் நீளம் 1232 ஆகும். இது கிட்டத்தட்ட 85 ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இல்லாமல் இருந்தது. இதன் முழு கொள்ளளவு 4,400 கன அடி ஆகும். இந்த 4,400 கன அடி தண்ணீரை எடுத்தால், ஒரு சொட்டு தண்ணீர்கூட வீணாகாமல் முழுக்க முழுக்க பாசனத்திற்கு பயன்பட்டது. தற்பொழுது ஆற்றின் பராமரிப்பு ஒழுங்காக இல்லாத காரணத்தினால் 3 ஆயிரம் கன அடி கூட எடுக்க முடியாமல் கடந்த 10 ஆண்டுகளாக நிலைமை மோசமாக உள்ளது.

                                                          ***********************

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இந்த கல்லணை கால்வாய் அமைப்பை சீர்படுத்த வேண்டும், நவீனப்படுத்த வேண்டும் என பலகட்ட போராட்டங்களை கடந்த காலங்களில் நடத்தி வந்துள்ளோம். அதன் விளைவாக முதல் கட்டமாக ஐக்கிய முற்போக்கு அரசு ஆட்சியில் இருந்தபோது, தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அன்றைய மத்திய நிதித்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் முன்முயற்சியில் கல்லணை கால்வாயை சீரமைக்க முயற்சி எடுக்கப்பட்டு அன்றைய திட்ட மதிப்பீடு சுமார் ரூ.450 கோடியில் திட்டமிடப்பட்டது. முதல் கட்டமாக ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டு ரூ.140 கோடிகளுக்கு பணிகள் நடைபெற்றது. 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற பணிகள் கடந்த 12 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. தற்போது 11 ஆண்டுகள் கடந்த நிலையில் எந்த பணிகளும் நிறைவேற்றப்படவில்லை. 

                                                          ***********************

இந்தச் சூழலில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பல போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், மாநில அரசு ஏற்கனவே ஒரு திட்ட மதிப்பீடு போடப்பட்டதன் அடிப்படையில், ரூ.2,639.15 கோடி மதிப்பில், ஆசிய உள்கட்டமைப்பு வளர்ச்சி வங்கியின் கடன் கேட்டு, கடன் பெற அனுமதி பெற்று முதல்கட்டமாக பணிகளை துவங்குவதற்கு 1036.07 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மாநில அரசின் பங்கு இன்னும் சேர்க்கப்படவில்லை. ஆசிய உள்கட்டமைப்பு வங்கியில் கடன் வாங்கித்தான் இந்த பணிகள் நடைபெற உள்ளன. 

                                                          ***********************

இது புதிய கால்வாயோ, புதிய திட்டப் பணியோ கிடையாது. இந்த திட்டப்பணிகளை தற்போதைய பிரதமர் மோடியோ தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ அறிவிக்கவில்லை. ஆனால் தற்போது பணிகள் புதிதாக துவக்கப் படுவது போலவும் எடப்பாடி அரசு தான் தொடங்கியது போலவும் பொய்யாக விளம்பரப்படுத்தப்படுகிறது. இந்த மறுசீரமைப்பு திட்டம் 2009இல் துவங்கப்பட்ட பணியாகும். ஏற்கனவே கொண்டு வரப்பட்ட திட்டம் நின்றுபோய் தற்போது மீண்டும் கொண்டுவரப்படுகிறது என்பதுதான் உண்மையாகும். இது அன்றைக்கே தொடங்கியிருந்தால் அடுத்தடுத்த ஆண்டுகளில் 400 முதல் 500 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் முடிந்து இருக்கும். பத்தாண்டுகள் அதிமுக ஆட்சிதான் நடந்தது. இந்த ஆட்சி இதைப் பற்றி துளியும் கவலைப்படவில்லை. 10 ஆண்டு கடந்த நிலையில் பணிகள் துவங்குவதால் 10 மடங்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. 

                                                          ***********************

இந்த நிதியில் வேலை என்னவென்றால், முழுக்க முழுக்க இதில் இருக்கக்கூடிய 27 கிளை ஆறுகள் (அதன் நீளம் 760 கிலோமீட்டர்). அதன் 2 கரைகளிலும் சிமெண்ட் பிளாக் பதித்து அதனை சரி செய்வது அதிலுள்ள 505 மதகுகளை சீரமைப்பது; 20 பாலங்கள் மற்றும் தஞ்சைக்கு மேலே உள்ள குருவாடிப்பட்டியில் ஒரு ரெகுலேட்டர் அமைப்பது என திட்டமிடப்பட்டது. இதில் கல்யாண ஓடை, ராஜாமடம் வாய்க்காலில் இருபக்கமும் கரைகளை பலப்படுத்த வேண்டும். இந்த கல்லணை கால்வாய் கட்டுப்பாட்டில் பாசன வாய்க்கால்கள் நிறைய உள்ளன. அந்த ஏரிகளையும் மராமத்து செய்ய வேண்டும்.

                                                          ***********************

கல்லணை கால்வாயின் சிறப்பு என்னவென்றால் நேரடியாக பாசனம் செய்யாமல் அங்குள்ள ஏரி, குளங்களை நிரப்பி அதன் மூலம் பாசனம் நடைபெறுகிறது. எனவே சம்பந்தப்பட்ட ஏரி, குளங்களையும் இதனுடன் இணைத்து பராமரிப்பு செய்து அந்த திட்டத்தில் அனைத்தையும் முழுமை பெற வைக்க வேண்டும். கல்லணை கால்வாய் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பாசன ஏரி, குளங்களையும் இந்த திட்டத்துக்குள் உட்படுத்தி ஏக காலத்தில் செய்து முடித்தால்தான் இந்த திட்டம் உண்மையிலேயே விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமையும்.

                                                          ***********************

உண்மை இப்படி இருக்க, முதல் கட்டமாக 1,036.07 கோடி ஒதுக்கப்பட்டு 5 கட்டமாக பணிகள் நடக்கும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 5 கட்டங்களாக நடைபெற உள்ள இப்பணிகளையும் திட்ட மதிப்பீட்டின் அடிப்படையில் தரமாகவும் பணிகளைச் செய்ய வேண்டும். பணிகள் நடைபெறக்கூடிய இடங்களில் அப்பகுதி விவசாயிகளை கொண்ட கண்காணிப்பு குழுக்களை அமைத்து அந்தக் குழு குறைகள் ஏதும் சுட்டிக்காட்டி இருப்பின் அவற்றை நிவர்த்தி செய்து கண்காணிப்பு குழு மேற்பார்வையில் நடைபெற வேண்டும். அதிகாரிகள் மட்டுமில்லாமல் விவசாயிகளைக் கொண்டு அப்பணிகள் நடைபெற்றால் மட்டுமே பணிகள் தரமானதாகவும் முறையாகவும் இருக்கும்.

கட்டுரையாளர் : சாமி.நடராஜன், மாநிலச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

;