‘ஹிண்டன்பர்க் அறிக்கை, அதானி குழுமம், செபி: தேவை ஒரு சுயேச்சையான விசாரணை’ எனும் மையப் பொருளில் சென்னையில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23)
இந்திய சமூக விஞ்ஞானக் கழகம் ஏற்பாடு செய்திருந்த சிறப்புக் கருத்தரங்கில் தலைவர்கள் ஆற்றிய உரைகளின் அம்சங்கள்:
கருத்தரங்கிற்குத் தலைமைப் பொறுப்பு ஏற்ற மூத்த வழக்கறிஞர் ஆர் வைகை, “அதானி குழும விவகாரங்கள் மீது ஒரு மூடு திரை உள்ளது என்பதும், அரசின் முழுப் பாதுகாப்பும், அரவணைப்பும் அந்த நிறுவனத்திற்கு எல்லை கடந்து கிடைக்கிறது என்பதும் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது” என்று குறிப்பிட்டார். “சாதாரண மக்கள் பங்குச் சந்தையில் நடப்பது தங்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று ஒதுங்கி விட முடியாது. வங்கிகளில் வட்டி விகிதம் மிகவும் குறைக்கப்பட்டு விட்ட நிலையில், சிறு சேமிப்பு பழக்கம் இளம் தலைமுறையினருக்கு இல்லாது போய்விட்ட சூழலில், முதலீட்டுக்குக் குறுகிய காலத்தில் அதிக லாபம் பார்க்க விரும்புவோர் பரஸ்பர நிதிகளிலும், பங்குகளிலும் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது.
மக்களின் சேமிப்புகள் மீதான தாக்குதல்!
பங்குச் சந்தையில் ஏற்படும் மோசடிகள், அவர்களது அரிய சேமிப்புத் தொகையின் மீதான தாக்குதல் என்பதை உணர்த்தியாக வேண்டும்” என்றார். “புதிய ஓய்வூதிய திட்டத்தை ஏன் அரசு ஊழியர்கள் எதிர்க்கின்றனர் என்றால், பழைய ஓய்வூதிய திட்டத்தில் இருந்த பாதுகாப்பு இதில் இல்லை, இந்த நிதியைக் கொண்டுபோய் பரஸ்பர நிதியில் சந்தையில் முதலீடு செய்வதால் எதிர்காலத்தில் தங்களது பென்ஷனுக்கு இப்படியான ஆபத்துகள் நேரும் என்ற அச்சத்தில் தான் பழைய திட்டத்தையே கேட்டுப் போராடுகின்றனர்” என்றார்.
“ஹிண்டன்பர்க் அறிக்கை மீதான விசாரணையை ‘செபி’யைக் கொண்டே நடத்தியது, ‘அவர்கள் 24 விசாரணைகளில் 22 முடிந்து விட்டது என்றும் தற்போது 23-ஆவது விசாரணையும் முடிந்துவிட்டது’, என்கிறார்கள். ஆனால், ‘எதுவும் தவறாக வரவில்லை’ என்று உச்சநீதி மன்றம் சொன்னது, இப்போது ‘செபி’ யின் தலைவர் மாதவி புச், அவரது கணவர் ஆகிய இருவரும் அதானி குழுமத்தின் அயல் நாட்டு முதலீடுகள் உள்ள இரண்டு நிறுவனங்களில் பங்குகள் வாங்கியிருப்பது அம்பலமாகி இருக்கிறது. அதை இவர்கள் அரசுக்கு தெரிவித்தார்களா? என்ற கேள்விக்கான விடை இதுவரை கிடைக்கவில்லை.
தன்னாட்சி அமைப்புக்கு நேர்மை முக்கியம்!
‘செபி’ என்பது தன்னாட்சி நிறுவனம். சிபிஐ, தேர்தல் ஆணையம், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் போன்ற ஓர் அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரது நேர்மை முக்கியமானது. இதுவரை அதன் தலைமைப் பொறுப்பில் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களோடு தொடர்பு இருப்போர் யாரும் நியமிக்கப்பட்டது இல்லை. 2017-இல் மாதவி ‘செபி’ உறுப்பினராக இணைக்கப்பட்டு, பின்னர் தலைவராகவும் உயர்த்தப்பட்டிருப்பது, இப்போது கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டியதாகிறது. குறிப்பிட்ட தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களின் வர்த்தக ஆதிக்கம், பங்குச் சந்தையில் அதானி குழுமம் தில்லு முல்லுகளில் ஈடுபட்டது தொடர்பான குற்றச்சாட்டுகள் தேசத்தின் பொருளாதாரத்தை எப்படி பாதிக்கிறது, எளிய முதலீட்டாளர்கள் நலன்கள் எத்தனை அபாயத்திற்கு உள்ளாகின்றன என்பதெல்லாம் விரிவாக பேசப்பட வேண்டிய நேரம் இது” என்றும் வைகை குறிப்பிட்டார்.
ஜி. ராமகிருஷ்ணன்
அறிமுக உரை நிகழ்த்திய மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், “கடந்த காலங்களில் இப்படிப்பட்ட முக்கிய விஷயங்களில் இந்திய சமூக விஞ்ஞானக் கழகம் சிறப்பான கூட்டங்களை நடத்தி வந்துள்ளது, இப்போது அதன் தேவை அதிகரித்துள்ளது” என்று குறிப்பிட்டார். “செபி’ விவகாரத்தில் நடந்திருப்பதைப் பரந்த விவாதத்திற்கு எடுத்துச் செல்லவேண்டும்” என்று நடுத்தர வர்க்கத்தினருக்கு வேண்டுகோள் வைத்த அவர், “நடந்திருப்பது மிகப் பெரிய மோசடி” என்று வருணித்தார். ‘கயிறு காணோம்’ என்று தேடிய பழைய கதையை நினைவு கூர்ந்த அவர், “எந்தக் கயிறு காணவில்லை என்று கேட்டவர்களுக்கு அதைத் தேடியவன், அந்தக் கயிற்றின் அடுத்த நுனி எருமையின் கழுத்தில் கட்டப்பட்டு இருக்கும், அந்த எருமையைத் தான் தேடுகிறேன் என்று சொல்வானாம், ‘செபி’ தலைவர் மீது இப்போது வெடித்திருக்கும் குற்றச்சாட்டு தான் அந்தக் கயிறு, அதன் நுனி அதானி குழுமத்தோடு கட்டப்பட்டு இருக்கிறது” என்று சுட்டிக் காட்டினார்.
“செல்வத்தை உருவாக்குபவர்கள் பெருந்தொழில் நிறுவனங்கள் என்று நிதியமைச்சரும் பிரதமரும் வருணிக்கிறார்கள், ஆனால், அதானி குழுமம் போன்றோர் செல்வத்தை உருவாக்கவில்லை, பொதுச் செல்வத்தைத் தங்களுக்கு மடைமாற்றிக் கொண்டு இன்று மிகப் பெரிய கார்ப்பரேட்களாக வளர்ந்து நிற்கிறார்கள்” என்றார் ராமகிருஷ்ணன்.
திட்டமிட்டு திசைத் திருப்பிய மோடி!
“விவசாயக் கடன் கொடுப்பதில் ‘ஸ்டேட் பாங்க் இந்தியா’ வங்கியும் அதானி குழுமமும் இணைந்திருப்பத்தாக தகவல் வந்துள்ளது. இதில் அதானி நிறுவனத்தின் பங்கு என்ன, அவர்களுக்கு இங்கு என்ன வேலை?” என்ற கேள்வியை எழுப்பிய அவர், “மிகப்பெரிய செல்வந்தர்களின் சொத்துக்களை மறு பகிர்மானம் செய்து, தேசத்தில் பொருளாதார இடைவெளியைக் குறைக்க வேண்டும் என்று தேர்தல் நேரத்தில் விவாதம் எழுந்தபோது ‘சாதாரண மக்களிடம் இருக்கும் எளிய சொத்துகளுக்கு ஆபத்து’ என்று பிரதமர் மோடி அந்த விவாதத்தைத் திசைத் திருப்பி கார்ப்பரேட்டுகளின் நலனை பாதுகாக்க முனைந்தார்” என்றார்.
கியூபப் புரட்சிக்குப் பிறகு பிடல் காஸ்ட்ரோ ஆற்றிய உரையில், “’கரும்புத் தோட்டங்களை, சர்க்கரை ஆலைகளை, மருத்துவ மனைகளை, கல்விச் சாலைகளை தேச உடைமை ஆக்கலாமா?’ என்ற கேள்விக்கு, மக்கள் ‘உடனே செய்து முடியுங்கள்’ என்று பதில் அளித்தனர். ‘சோசலிசத்தை நடைமுறைப்படுத்தலாமா என்றால், அய்யய்யோ வேண்டாம்’ என்று கூறினர், அந்த அளவுக்கு அந்தச் சொல்லை முதலாளித்துவ அறிவுஜீவிகள் எளிய மக்களிடம் ஆபத்தான சொல்லாக பதிய வைத்துள்ளனர். தங்கள் சொத்துகளை யாரோ பறித்துக் கொள்வார்கள் என்கிற பொருளில் தவறாகப் பரப்பி இருந்தனர்” என்று மாவீரன் பிடல் காஸ்ட்ரோ தனக்கேயுரிய எள்ளல் பாணி யில் பேசியதை மேற்கோள் காட்டிய ராமகிரு ஷ்ணன், “கார்ப்பரேட் நலன்களை பாதுகாக்கும் இந்த அரசின் அபாயகரமான பொருளாதார நடவடிக்கைகள் குறித்து மக்கள் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்” என்றார்.
“1981-இல் இந்திய அரசு, உலக வங்கியிடம் கடன் வாங்கியபோது ஆட்சியாளர்கள் மறைத்த அதன் நிபந்தனைகளைப் புலனாய்வு செய்து அம்பலப்படுத்தியவர் என். ராம், பிறகு புகழ்பெற்ற போஃபர்ஸ் பீரங்கி ஊழல், அண்மையில் ரபேல் விமான பேர ஊழல் இவற்றை மக்கள் மன்றத்தில் தனது திறமையான புலனாய்வு மூலம் அம்பலப்படுத்திய என். ராம், இப்போது செபி - அதானி விஷயத்திலும் புலனாய்வு மேற்கொண்டு உண்மைகளை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார் ராமகிருஷ்ணன்.
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா
‘அதானி குழுமத்தின் எழுச்சி தற்செயலானது அல்ல’ என்று குறிப்பிட்ட பொருளாதார நிபுணர் டாக்டர் வெங்கடேஷ் ஆத்ரேயா, “2002-இல் நரேந்திர மோடியின் ஆட்சியில் குஜராத் மாநிலத்தில் வகுப்புவாத கலவரங்களைத் தூண்டிவிட்டு ஏற்பட்ட மோசமான விளைவுகளை அடுத்து சர்வதேச அளவில் அவருக்கு எதிராகக் குரல்கள் எழுந்தன. இதனால் அவர் அயல் நாடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்ட போது, அதில் இருந்து நாட்டு மக்களை திசைத்திருப்ப ‘துடிப்பான குஜராத்’ என்ற பெயரில் சர்வதேச முதலீட்டு மாநாட்டை அதானி குழுமத்தின் துணையோடு நடத்தினார்” என்பதை நினைவு கூர்ந்தார்.
“ஹிண்டன்பர்க் அறிக்கையை ஒட்டி இணையத்தில் ஏராளமான தகவல்கள் குவிகின்றன” என்பதைச் சுட்டிக் காட்டிய ஆத்ரேயா, “’பைனான்சி யல் டைம்ஸ்’ போன்ற ஏடுகள், இன்னும் ஆழமான விஷயங்களை ஆய்வு செய்து அம்பலப்படுத்தி உள்ளன” என்றார். “’பிளாக்ஸ்டோன்’ ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் ஆலோசகராக உள்ள தனது கணவரின் நலன்களை முன்னெடுக்கும் விதத்தில் ‘செபி’ தலைவர் மாதவி புச், “தனது கூட்டங்களில் எல்லாம் ரியல் எஸ்டேட் பங்குகளில் முதலீடு செய்வதை ஊக்கப்படுத்தி உரையை நிகழ்த்தியிருக்கிறார். அந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கும் அதானி குழுமத்திற்கும் உள்ள முதலீட்டுத் தொடர்பு போன்ற விஷயங்கள் சாதாரண மானவை அல்ல!” என்றும் சுட்டிக்காட்டினார்.
“இப்போது கூட, குறிப்பிட்ட சில கார்ப்பரேட் குழுமங்கள் தேசப் பொருளாதாரத்தை ஆட்டிப் படைப்பதை கேள்விக்கு உள்ளாக்கும்போது, ‘தேசத்தின் பொருளாதாரத்திற்கு ஆபத்து’ என்று பிரதமர் கூப்பாடு போடுவதுதான் அபாயகரமானது. உண்மை என்ன என்பதை மக்கள் கவனத்திற்கு நாம் எடுத்துச் செல்லவேண்டும்” என்ற ஆத்ரேயா, “வழக்கம்போல் ஆட்சியாளர்கள் உண்மைகளை மூடி மறைக்க முயல்வார்கள். அதனால் தான் ‘செபி’ விஷயத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்று நாம் கேட்கிறோம்” என்றும் கூறினார்.