articles

img

தடம் மாறி வீடுகளுக்குள் புகுந்த தென் பெண்ணை ஆறு உடமைகளை பறிகொடுத்து பரிதவிக்கும் கடலூர் மக்கள்

வ  ங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த‘ தாழ்வு மண்டலமாக உருமாறிய பின்னர் புயலாக உருவாகும் என்று கூறப்பட்டு ஒரு வழியாக பெஞ்சால் புயலாக உரு வெடுத்தது. நவம்பர் 30 தேதி மாலை  புதுவை அருகே கரையை கடந்தது புயல்.  இதனால் கடலூர் மாவட்டத்தில் டிசம்பர் 1ஆம் தேதி மதியம் வரை யில் பலத்த காற்றும் கனமழையும் கொட்டி தீர்த்தது. சாலையில் மரங்கள் விழுந்து சில இடங்களில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. பல இடங்க ளில் தாழ்வான பகுதியில் மழை நீர் வீட்டுக்குள் புகுந்தது.  சிறிய அளவான பாதிப்போடு தப்பித்தோம் என்று கடலூர் மக்கள் பெருமூச்சு விட்டு தூங்கச் சென்றனர்.

தூங்காத இரவு

நள்ளிரவு நேரத்தில் தென் பெண்ணை ஆற்று தண்ணீர் தடம் மாறி  கரையோரம் உள்ள நகர்கள் மற்றும் கிராமங்களுக்குள் சீறிப்பாயத் தொடங்கியது.  விழித்துக் கொண்ட மக்கள் உடனடியாக தங்களுடைய நான்கு சக்கரம் மற்றும் இரு சக்கர வாகனங்களை மேடான இடங்களுக்கு  கொண்டு விட்டும், கால்நடைகளை அப்புறப்படுத்தியும், வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பாக அகற்று வதற்குள் தண்ணீர் முழுவதுமாக வீட்டிற்குள் புகுந்தது. உயிர் பிழைத் தால் போதும் என்று வீட்டை விட்டு வெளியேறி இரவு முழுவதும் தூங்கா மல் தவித்தனர். 

அரசு நிர்வாகத்தின் அலட்சியம்

அதிகாலையில் தான் மாவட்ட நிர்வாகத்திற்கு தென்பெண்ணை யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நகர்களுக்குள் தண்ணீர் புகுந்தது தெரிந்திருக்கிறது.  அப்பொழுதுதான் திருவண்ணாமலை மாவட்டத்தி லுள்ள சாத்தனூர் அணையில் நீர் நிரம்பி படிப்படியாக திறக்கப்பட்டு பின்னர் ஒரேஅடியாக ஒரு லட்சத்து 40 ஆயிரம் கன அடி திறந்துவிடப் பட்டுள்ளது என்று தெரியவந்தது, பின்னர் அன்று மாலை வினாடிக்கு இரண்டு லட்சத்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட அறிவிப்பும் வந்தது. அரசு நிர்வாகத்திற்குள் ஒருங்கிணைப்பு இல்லாத காரணத் தால், பாதிப்பு குறித்த  போதிய முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இதனால் கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் முழுமையாக பாதிக்கப்பட்ட பிறகு வந்த இந்த அறி விப்புகள் பயனற்று போயின. 

தென்பெண்ணையாற்றின் கறைகள் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தென்பெண்ணையாறு நகர்களை நோக்கியும், கிராமங்களை நோக்கியும் பாய்ந்து வீடுகளுக்குள் புகுந்தது. 

ஆண்டு கணக்கில் சேமித்தது  ஒரே நாளில் வீணாயின

பல ஆண்டுகளாக சிறுக, சிறுகச் சேமித்த பொருட்கள், உடைமைகள் பறிகொடுத்துவிட்டு தவிக்கின்றனர். ஆற்று மணலும், சேரும் சகதியும் கலந்து ஆக்ரோஷமாக பாய்ந்த வெள்ள நீர் வீடுகளுக்குள் இரண்டு நாள் தேங்கி வீட்டை சகதியாக்கியும்,  வயல்வெளி போல் சேர் ஆக்கியும் சென்று விட்டது. பொருட்கள் இழப்பு ஒருபுறம் என்றாலும் வீடுகளை சுத்தம் செய்வதே பெரிய போர்க்களம் போல் மாறிவிட்டது.  ஒரு வாரம் கடந்துவிட்ட பிறகும் முழுமையாக வீட்டை சுத்தம் செய்ய முடியாமல் அல்லல் பட்டு கொண்டிருக்கின்றனர்.  பல வீடுகளில் ஈரம் காயாமல் துர்நாற்றம் வீசிக் கொண்டிருக்கிறது. 

வார்த்தைகளால் சொல்ல  முடியாத வேதனைகள்

 புயல் வெள்ள பாதிப்பால் கடலூர் அனைத்து குடியிருப்போர் சங்கத்தின் இணை பொதுச்செயலாளரும் எம்.கே.ஜே. நகரைச் சேர்ந்தவருமான எஸ்.தேவ நாதன் கூறும்போது, ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 2 மணி அளவில் தென் பெண்ணை ஆற்று நீர் நக ருக்குள் வருவதை கண்டவுடன் உடன டியாக மாவட்ட ஆட்சியரிடம் தொலை பேசி வாயிலாக தகவல் தெரிவித்தேன். 3:30 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் வந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை தொடங்கினார். குடியிருப்போர் சங்க நிர்வாகி தேவநாதன் சொன்ன பிறகு தான் ஆற்றில் தண்ணீர் வருவதே தெரி யும் என்று ஆட்சியர் தெரிவித்தார். 

50 நகர்கள் மூழ்கின

அதற்குள் கடலூர் நகரில் உள்ள குமரப்பன் நகர், நடேசன் நகர், வி.எஸ்.எல் நகர், சண்முகம் நகர், கணபதி நகர், பொன் ஜோதி நகர், எம். கே.ஜே. நகர், குறிஞ்சி நகர், வெளிசெம்மண்ட லம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, நத்தப்பட்டு வீட்டு வசதி வாரிய குடி யிருப்பு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதியில் 10அடி அள விற்கு தென் பண்ணையாற்று நீர் வந்ததால் உடைமைகளை விட்டு விட்டு உயிர் பிழைத்தால் போதும் என்று மக்கள் வெளியேறத் தொடங்கினர். 

என்னுடைய வீட்டிலிருந்த ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், கிரை ண்டர், சிலிண்டர், மிக்ஸி, உள்ளிட்ட அனைத்து மின்சாதன பொருட்களும் சேதமடைந்துவிட்டது. என்னுடைய மகன் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான். மகனின் புத்த கங்கள் முழுவதுமாக சேதமடைந்து விட்டது. வீட்டில் சில்வர் பாத்திரங் களை தவிர மற்ற பொருட்களை மீண்டும் உபயோகப்படுத்த முடியாத அளவிற்கு சேதம் அடைந்துவிட்டது. கட்டில் மெத்தை, சோபா, ஆகியவை தண்ணீரில் மிதந்து சேதமடைந்தது. புயல் எச்சரிக்கைக்காக மின்சாரம் நிறுத்தப்பட்டிருந்ததால் எங்களால் எதுவுமே செய்ய முடியவில்லை. எந்த பொருட்களையும் எடுத்து பத்திரப்படு த்தவும் முடியவில்லை. இரண்டு லட்ச ரூபாய் அளவிற்கு என்னுடைய வீட்டில் மட்டுமே சேதம் அடைந்திருக்கும் என்று தெரிவித்தார். 

காலத்தால் அழியாத ஓவியங்கள்  வெள்ளத்தால் அழிந்தது

குமரப்பன் நகரைச் சேர்ந்த தனி யார் பள்ளி ஆசிரியை எம்.கலைச் செல்வி கூறும் போது, என்னுடைய கணவர் எம்.மனோகரன், அரசு இசைப்பள்ளியில் ஓவிய ஆசிரியராக உள்ளார். கடந்த 50 ஆண்டுகளாக பல்வேறு வகையான ஏராளமான ஓவி யங்களை வரைந்து பாதுகாத்து வந்தார். காலத்தால் அழிக்க முடியாத இந்த ஓவியத்தை தென்பெண்ணை ஆற்று வெள்ள நீர் அழித்துச் சென்று விட்டது.

தண்ணீர் வந்தவுடன் உடனடியாக எங்களுடைய சர்டிபிகேட், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, எஸ்.ஆர்.புக் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு வெளியேறி விட்டோம். வீட்டில் 10  அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கிய தால் பீரோவில் இருந்த புத்தகம், ஓவியங்கள், நான் மாணவர்களுக்கு பாடம் நடத்த சேகரித்து வைத்திருந்த பல ஆண்டு காலமான புத்தகங்கள் அனைத்தும் நாசமாகிவிட்டன.

கடலூரில் நடந்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 16ஆவது அகில இந்திய மாநாட்டில் என்னுடைய கணவர் வரைந்த ஓவியத்தை வைத்து தான் கண்காட்சி அமைத்தோம். அதே போல் மாவட்ட நூலகம், இசைப்பள்ளி  ஆகியவற்றிலும் ஓவிய கண்காட்சி வைத்திருந்தோம். அதில் வைக்கப்பட் டிருந்த 2000க்கும் மேற்பட்ட ஓவி யங்கள் தண்ணீரில் நனைந்து சேதம் அடைந்து விட்டது. என்னுடைய மகன் கே.எம்.அனு நிதிஷ் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அவரும் சிறந்த ஓவியங்கள் வரைந்து ஆவணப்படுத்தி வைத்துள்ளார்.

 கடந்த 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய தலைவர்கள் 75 பேரின் ஓவியத்தை வரைந்து அவர் படிக்கும் கிருஷ்ணசாமி பள்ளியில் கண்காட்சியாக அமைத்திருந்தார். இப்படி எங்கள் வீட்டில் ஏராளமான பொருட்கள் டிவி, வாஷிங் மெஷின், பிரிட்ஜ், இருசக்கர வாகனங்கள்,  உள்ளிட்டவை சேதமடைந்து இருந்தா லும், பல ஆண்டுகாலம் உழைப்பின் மூலம் வரைந்த ஓவியங்களை தொலைத்து விட்டு நிற்கிறோம். எவ்வளவு பணம் கொடுத்தாலும் இதை  மட்டும் எங்களால் வாங்கவே முடியாது என்று கண்ணீர் மல்க வேதனையுடன் தெரிவித்தார். மூன்று நாட்களாக ஆட்களை வைத்து வீடுகளை சுத்தம் செய்ததே 21,000 செலவு செய்து உள்ளோம் என்றும் தெரிவித்த அவர்,  அரசு வழங்கும் நிவாரணம் எதற்கும் ஈடு செய்யாது என்றார்.

நிரந்தர தீர்வு 
​​​​​​​

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில துணைத்தலைவர் டி.புருஷோத்தமன் கூறும் போது இந்த வெள்ள பாதிப்பு 2015 ஆம் ஆண்டு, 2021 ஆம் ஆண்டு ஏற்பட்டது. அதை விட அதிகமாக இந்த ஆண்டு சேதம் ஏற்பட்டுள்ளது.

அப்பொழுதும் களத்தில் நின்று வெள்ள தடுப்பு பணிகளை மேற் கொண்டு, அதிகாரிகளிடத்தில் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வலியுறு த்தியும், அதற்கான நடவடிக்கையை அரசு எடுக்காத காரணத்தால் மீண்டும் வெள்ளப் பாதிப்பிற்கு ஆளாகியுள் ளோம். 

இனியும் காலம் கடத்தாமல் நிரந்தர தீர்வை அரசு செய்ய வேண்டும். அப்போதுதான் இந்த மக்களை பாது காக்க முடியும். தென் பண்ணையாறு வங்க கடலில் கலக்கும் இடமான தாழங்குடா கிராமத்திலிருந்து நத்தப் பட்டு வரை 15 கிலோ மீட்டர் நீள முள்ள  ஆற்றின் கரையினை பலப்ப டுத்துவதுடன் இருபுறமும்   கான்கிரீட் டாலான  தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என்றார்.

 மேலும் நகரப் பகுதியில் மழை நீர் வடிகால் தென்பெண்ணை ஆற்றில் நேரடியாக கலக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.  இதனை மாற்றி நத்தப் பட்டு முதல் ஆல் பேட்டை வரை ஐந்து மீட்டர் அகலம் உள்ள ஒருங்கிணைந்த மழை நீர் வடிகால் அமைத்து தென் பெண்ணை ஆற்றில் கலக்கும் இடத்தில்ஷட்டர் அமைக்க வேண்டும். ஆற்றின் கரையோரமாக செல்லும் சுங்கச் சாலையின் உயரத்தை அதிகப் படுத்த வேண்டும். அப்போதுதான் அடுத்த வெள்ளத்திலாவது மக்களை பாதுகாக்க முடியும் என்றும் அவர்  தெரிவித்தார். 

வெளி மாவட்ட மழையால் பாதிப்பு

கடலூரில் பெய்யும் மழை பாதிப்பு, இயற்கை சீற்றங்கள் மற்றும் புயல் பாதிப்பையும் மக்கள் எதிர்கொள்ள தயாராக உள்ளனர்.  ஆனால் சம்பந் தமே இல்லாமல் வேறு மாவட்டங் களில் பெய்த மழை, அணை திறப்பால் ஆற்றில் ஏற்படும் வெள்ளப் பெருக்கால்  பெரும் பாதிப்பை ஆண்டு தோறும் சந்திக்கும் கடலூர் மக்க ளுக்கு நிரந்தர தீர்வினை ஒன்றிய, மாநில அரசுகள் செய்யுமா?.

யானை பசிக்கு சோள பொறி போன்றும், கடலில் கரைத்த பெருங்கா யம் போன்ற பழமொழிகளுக்கு ஏற்ப  அரசின் நிவாரணத் தொகை இந்த மக்க ளுக்கு எந்த வகையிலும் பயன்படாது. இழப்புக்கு ஏற்ப நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர் பார்ப்பாக உள்ளது.

ரூ 9000 சம்பளத்தில் குடும்பம்,  இழந்த உடமையை எப்படி மீட்பது

குமரப்பன் நகரைச் சேர்ந்த கே.பக்தவச்சலம் கூறும்பொழுது.  முதலில்என்னுடைய வீட்டு வழியா கத்தான் வெள்ள நீர் பாய்ந்தது.மழைநீர் வடிகால் ஷட்டரின் சாவி என்னிடம் இருந்தது. உடனடியாக ஒருவரை துணைக்கு அழைத்துச் சென்று ஷட்டரை மூடுவதற்குள் தண்ணீர் வேகமாக ஏறிவிட்டது. மாதம் ஒன்பதாயிரம் சம்பளத்தில் குடும்பம் நடத்தும் என்னுடைய சிரிய வீட்டில் மிக அத்தியா வசிய தேவையான மிக்சி, பீரோ, பிரிட்ஜ், மோட்டார், மின் மீட்டர் உள்ளிட்டவைகள் பழுது ஆகிவிட்டன. என் வீட்டில் மட்டுமல்லாமல் இந்த பகுதியில்  அனைத்து வீடுகளிலும் செப்டிக் டேங்க் நிரம்பி விட்டது. நாங்கள் வைத்திருந்த அனைத்தும் சேதம் அடைந்து விட்டது. மேலும் இருந்த துணிமணிகள் அனைத்தும் சகதி ஆகிவிட்டது. குறைந்த பட்சம் 70 ஆயிரம் வரை எனக்கே இழப்பு ஏற்பட்டுள்ளது.

 கடந்த இரண்டு வெள்ளத்தின் போதும் இப்படியாக வீட்டை விட்டு ஓடி வெளியில் தஞ்சம் அடைந்து பின்னர் தண்ணீர் வடிந்த பிறகு வீட்டிற்கு வருவது வாடிக்கையாக உள்ளது. அவ்வப்போதும் என்னுடைய உடமை கள் பறிகொடுத்து மீண்டும் பழைய நிலைக்கு வருவதற்கு பல ஆண்டு காலம் பிடிக்கிறது. எனவே நிரந்தர தீர்விற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
 

 

​​​​​​​ - வ.சிவபாலன்