articles

img

தீங்கு எங்களை அண்டா! - * கோவி.பால.முருகு

அண்டை வீட்டுக் குழந்தை களோடே
ஆடிப் பாடப் பிடிக்கும்-அது
சண்டை சச்சர வின்றி மனத்தில்
சகிப்புத் தன்மை வளர்க்கும்!

ஆண்பெண் என்ற பேத மில்லா 
ஆட்டம் இங்கே செல்லும்!-அதில்
வேண்டும் பாலின சமத்துவ மோங்கி
வெற்றி மிகவும் கொள்ளும்!

கூட்ட மாகப் பள்ளிக் கூடம் 
கூடிச் செல்லப் பிடிக்கும்-அதால்
வாட்ட மின்றி தூரம் செல்ல 
வாய்க்கும் மகிழ்ச்சி கிடைக்கும்! 

மதிய வேளை கூடி உண்ண
மனத்தில் மகிழ்ச்சிப் பிறக்கும்-பலரின்
புதிய புதிய உணவைப் பகிர்ந்து
புசிக்கச் சுவையைப் பெருக்கும்! 

படிக்கும் போது கூடிப் படிக்கும்
பழக்கம் எனக்குப் பிடிக்கும்-அதில்
பிடிக்கும் அறிவு ஆற்ற லெல்லாம்
பின்னி மனத்தில் நிலைக்கும்!

சாதி மதங்கள் பார்க்கா நட்பில்
சண்டை மோதல் உண்டா?-நாங்கள்
தீதில் மனத்தைக் கொண்ட தாலே
தீங்கு எங்களை அண்டா!