மலை முகடெங்கும் சிவப்புக் கொடி தங்கும்!
சந்தம் இசைக்கும் குயில் கூடுகளிலே!
சந்தனம் மணக்கும் மலைக் காடுகளிலே!
-அதை
தாங்கி வரும் தென்றல் தினம்
தங்கி விளையாட வரும்
வாச்சாத்தி கிராமத்தின் வீடுகளிலே!
புல்லாங்குழல் இசைத்த ராகத்திலே
பூ விரியும் சாரல் அடி வாரத்திலே!
பூக்கள் மலர்ந்தாலும்
தென்றல் தவழ்ந்தாலும்
மலை மக்கள் வாழ்க்கை தெரு ஓரத்திலே!
மஞ்சு முகில் இனங்கள் உருகி வரும்!
மலை அழுத கண்ணீராய் அருவி வரும்!
-அந்த
மலை வாழும் மக்களது
சோகமும் அதில் கலந்து
மண் மீது ஆறாகப் பெருகி வரும்!
ஆதி மனித நிலை மாறவில்லை!
அச்சம் தயக்கம் இன்னும் தீரவில்லை!
பாதி மனித நிலை
ஆனாலும் மலை மகன்
பண்புக்கும் அன்புக்கும் பிறந்த பிள்ளை!
மலையின் தினை புனத்தைப் போல எளிமை!
மனதில் வளம் இருந்தும் வீடு வெறுமை!
-அந்த
நிலை பெற்ற மலையில்
நிலையற்ற வாழ்க்கை!
இதுதான் வாச்சாத்தி கிராம நிலைமை!
சாக்கடை நாற்றத்தை மறைப்பதற்கு
சந்தனம் பூசுகிற மாளிகைக்கு
வண்டி வண்டியாய்
கட்டைகள் போகும்
வாச்சாத்தி யிலிருந்து பட்டணத்துக்கு
மலையே இவர்களின் தாய் வீடு!
மலைதரும் செல்வம் இவர்க்கேது?
வீட்டுக்குள் இருந்தும்
வெளியாள் போல
வாழ்வது மலை மகன் வரலாறு!
சந்தனத் திருட்டுக்குத் தடையாக,
சத்தியம் ஏந்திய சுடராக,
வாச்சாத்தி மக்கள்
நின்றத னால் அங்கு
வந்தது போலீஸ் படையாக!
பதினெட்டு பெண்கள் வல்லுறவு
கேட்க ஆளில்லை பரிதவிப்பு!
மகளின் அழுகைக்கு அன்னை அழுதல் போல்
மலையின் முகடுகளில் எதிரொலிப்பு
வேதனைகளுக்கொரு விடையாக,
வெற்றி இசைக்கின்ற படையாக,
இந்த மனிதர்களின்
இருளை வெளியேற்ற
வந்தது செங்கொடி துணையாக!
சித்தேரி மலையில் செங்கீதம்!
ரத்தத்தில் பிறந்தது நம் கீதம்!
மலையின் முகடெங்கும்
சிவப்புக் கொடி தங்கும்!
கேளுங்கள் மார்க்சிய மணிநாதம்!
(1992 டிசம்பர்)