நாட்டில் வறுமை நிலை கணிசமாக குறைந்து இருப்பதாக நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர்.சுப்ரமணியம் அண்மையில் தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் வறுமைக்கோடு நிர்ணயிப்பதில் இருந்து வரும் குளறுபடிகள் தீர்ந்தபாடில்லை. இந்நிலையில் இந்த பிரிவில் 5 சதவீதம் பேர் மட்டுமே இருப்பதாக கூறப்படுவது எவ்வளவு அபத்தமானது என்பது தெளிவாகும். அதாவது ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் தலைமையிலான குழு வறுமைக் கோட்டில் உள்ள மாதாந்திர தனிநபர் செலவினத்தை நகர்ப்புறங்களில் ரூ.1407 -ஆகவும், கிராமப்புறங்க ளில் ரூ.972- ஆகவும் நிர்ணயித்திருந்தது. அவ்வாறெனில் நகர்ப்புறத்தில் நாள் ஒன்றுக்கு ரூ. 47க்கும், கிராமப்புறத்தில் நாளொன்றுக்கு ரூ.32 க்கும் மேல் செலவு செய்யக் கூடிய வர்கள்வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவராகக் கருதப்படுவர்.
74 சதவீதம் பேர்...
2023 டிசம்பரில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஐ.நா.மதிப்பீட்டு அறிக்கையில் உணவு தேவைகள் தொடர்பான இந்திய அரசாங்கத்தின் புள்ளி விவ ரங்களை குறிப்பிட்டுள்ளது. ஐ.நா.வின் ஐந்து அமைப்புகளால் தொகுக்கப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து பற்றிய 2021 ஆம் ஆண்டு அறிக்கையின்படி 100 கோடியே 43 லட்சம் இந்திய மக்கள், அதாவது தோராயமாக 74.1 சதவிகித இந்தியர்கள் ஆரோக்கியமான உணவை வாங்க முடிவதில்லை என்று அந்த அறிக்கை தெரி வித்துள்ளது. இந்நிலையில் நாட்டில் 144 கோடிக்கு மேல் உள்ள மக்கள் தொகையில் வெறும் ஐந்து சதவீதம் (ஏழு கோடி) மக்களே வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளதாக நிதி ஆயோக் தெரிவித்திருப்பது உண்மைக்குப் புறம்பானது என்பது வெளிப்படை.
விலைவாசி கடும் உயர்வு
நாடு முழுவதும் அரிசியின் விலை 15 முதல் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. அரிசியைத் தொடர்ந்து கோதுமை, பருப்பு, வெங்காயம் ,பூண்டு, மஞ்சள் என அனைத்து பொருட்களின் விலையும் ஏறுமுகமாக உள்ளது. துவரம் பருப்பு விலை முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் கிலோவிற்கு ரூ. 60 அதிகரித்துள்ளது. விலை உயர்வை கட்டுப்படுத்த இந்திய உணவுக் கழகத்தின் சேமிப்பில் உள்ள அரிசியினை மின் ஏலத்தின் மூலம் விலை நிர்ணயம் செய்து அதன் மூலம் தனியார்களுக்கு வழங்கி விலையை கட்டுப்படுத்த லாம் என்று கருதிய ஒன்றிய உணவு அமைச்சகத்தின் முயற்சி பலன் அளிக்கவில்லை. எனவே தற்போது ஐந்து லட்சம் டன் அரிசியை விடுவித்து நுகர்வோருக்கு ரூ.29 க்கு “பாரத் அரிசி”என்ற பெயரில் விற்பனை செய்ய மோடி அரசு முடிவெடுத்து அறிவித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மாதாந்திர குடும்பச் செலவு இரு மடங்காக உயர்ந்து இருப்பதாக தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் குடும்ப நுகர்வோர் செலவின ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய உற்பத்தி வீழ்ச்சி
கடந்த 10 ஆண்டுகளாக மோடி ஆட்சியின் கொள்கைகளின் விளைவாக விலைவாசி செங்குத் தாக உயர்ந்து வருகிற நிலையில், அரிசி தட்டுப்பா டும் அதிகரித்துள்ளது.உலக அளவில் அரிசி ஏற்று மதியில் இந்தியாவின் பங்கு 40 சதவீதம். ஆனால் தற்பொழுது பல்வகையான அரிசிக்கு கட்டுப்பாடுக ளும், பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசிக்கு ஏற்றுமதி க்கு தடையும் விதித்து உள்ளது மோடி அரசு. 2022-23-இல் விவசாய வளர்ச்சி விகிதம் 4 சதவீத மாக இருந்தது. 2023-24-இல் இது 1.8 சதவீதமாக குறைந் துள்ளது. நெல் உற்பத்தி என்பது 0.9 சதவீதத்திலிருந்து -5.4 (மைனஸ்) சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ள நிலை யில் அரிசி விலை தொடர்ந்து ஏறுமுகமாகவேஉள்ளது. இந்த நிலையில், மாநிலங்களுக்கு ஏற்கனவே வழங்கி வந்த அரிசியின் அளவுகளை குறைத்து மிக மோசமான வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைகளுக்கு மட்டும் அரிசி ஒதுக்கீடு செய்து மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது. இந்திய உணவுக் கழகம் தனது இருப்பில் உள்ள அரிசியை ஏலம் விடு வதில் மாநில அரசுகள் பங்கேற்கக் கூடாது என்ற நிபந்தனையும் விதித்துள்ளது. மானிய விலையில் அரிசி மாநிலங்களுக்கு வழங்குவதையும் தற்போது நிறுத்திவிட்டது.
தனியாரிடம் ‘நியாய விலைக் கடைகள்’
பொது விநியோகத் திட்டத்தை சீரழிக்கும் வகை யில் தனியார் பங்களிப்புக்கு வாய்ப்பளிக்கும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 75 நியாய விலை கடைகளை திறக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. மாநில அரசுகள் மாவட்டந்தோறும் 75 கடைகள் திறக்க தேவையான இட வசதி செய்து தர வேண்டும். தனியார் டீலர் என்ற அடிப்படையில் அமைக்கப்படும் ரேஷன் கடைகளில் பொதுமக்கள் காத்திருப்பதற்கான அறைகள், சிசிடிவி, கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, பாதுகாப்பு அம்சங்கள் உட்பட உள்கட்டமைப்புகள் கொண்டதாக இருக்கும் எனவும் இத்தகைய தனியார் நியாய விலைக்கடை உரிமை யாளர்கள் நியாய விலைக்கடை டீலர்கள் (Fair Price Shop Dealer)என்ற பெயரில் அழைக்கப்படுபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நாடு முழு வதும் உள்ள 4.99லட்சம் நியாய விலை கடைகளில் 3.5 லட்சம் நியாய விலை கடைகள் தனியாருக்கு வழங்கப்பட்டு விட்டது.
‘பாரத் அரிசி’ மோசடித் திட்டம்
மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய முடி யாத மோடி அரசு தற்பொழுது பாரத் அரிசி என்ற பெயரில் விற்பனை செய்வதற்கான மோசடி திட்டத்தை அறி வித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைகளுக்கான அரிசி ஒதுக்கீட்டை மோடி அரசு பெருமளவு குறைத் துள்ள போதும் தமிழ்நாடு அரசு இலவச அரிசி திட்டத்தை தொடர்ந்து அமல்படுத்தி வருகிறது. தற்போது கூடுத லாகும் மானியச் செலவினையும் தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகள், அவரவர் நிதிச்சுமையுடன் இதற்கும் மானியம் அறிவித்து செயல்படுத்தவுள்ளன. ஆனால் மோடி அரசோ, ஏழைகளின் உணவு பாது காப்புக்கு உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளது என்று படாடோபமாக விளம்பரம் செய்து வருகிறது. மாநில அரசுகளை வஞ்சித்து, ஒதுக்கீடுகளை குறைத்து பொது விநியோக திட்டத்தை தனியார் மயப்படுத்தி மக்களை வறுமை நிலைக்கு தள்ளும் திட்டமே “பாரத் அரிசி” திட்டம். மக்களின் உணவுப் பாதுகாப்பிற்கு வேட்டு வைக்கும் மோடி அரசுக்கு நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
கட்டுரையாளர் : தலைவர்,
தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனம் (சிஐடியு)