இது தேர்தல் கூட்டணி அல்ல. கொள்கைக் கூட்டணி என்பதை 2019, 2021 தேர்தல்களில் நிரூபித்தோம். அதே கூட்டணி இப்போதும் தொடர்கிறது. தோழமைக் கட்சிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தொகுதிப்பங்கீடும் எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது என்பதும் முடிவெடுக்கப் பட்டுள்ளது. இது ஓர் ஆரோக்கியமான கூட்டணியின் தொடர் செயல்பாடு. புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் முழுமையான வெற்றி என்பதுதான் எங்கள் இலக்கு.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் DT Next ஆங்கில இதழுக்கு சிறப்புப் பேட்டி அளித்துள்ளார். அப்பேட்டியில் மாநில உரிமைகள் பறிப்பு, பாஜகவின் முகத்திரையைக் கிழித்துள்ள தேர்தல் பத்திர ஊழல், அதிமுக - பாஜக அரசியல் நாடகம், இந்தியா கூட்டணியின் எழுச்சி, தமிழகத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள தொகுதிப் பங்கீடு, தேர்தல் களத்தில் அம்பலமாகும் பாஜகவின் பொய் முகங்கள் என பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவான முறையில் பதிலளித்துள்ளார். அந்த நேர்காணலின் பகுதிகள்:
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள், வெள்ள நிவாரணப் பணிகளுக்கு நிதி ஒதுக்காதது மாநில அரசுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய அரசின் இந்த அணுகுமுறை பற்றி...?
மத்தியில் பா.ஜ.க. ஆட்சி செய்யும் கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களின் அடிப்படை உரிமைகளும், நிதி ஆதாரங்களும் பறிக்கப்பட்டிருக்கின்றன. முந்தைய அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக உதய் மின் திட்டம், நீட் தேர்வு நுழைவு என ஒன்றிய பா.ஜ.க. அரசின் மேலாதிக்கப் போக்கிற்கு அடிபணிந்துவிட்டார்கள். இதன் காரணமாக மாநிலத்தின் நிதி நிலைமையும் கடும் பாதிப்புக்குள்ளானது. ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு அதனைச் சீர்ப்படுத்தி வருகிறோம். மெட்ரோ ரயில் திட்டம், வெள்ளப் பேரிடர் உள்ளிட்ட எதற்கும் ஒன்றிய அரசு உரிய நிதி ஒதுக்குவதில்லை. எனினும், தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாக்கவும் அவர்களுக்கு உரிய கட்டமைப்புகளை உருவாக்கித் தரவும் உரிய நடவடிக்கைகளை எடுத்து, அதற்கான நிதிஆதாரங்களைத் திரட்டி, திட்டங்களைச் செயல்படுத்துவது தொடரும்.
அண்மைக்காலமாக அடிக்கடி பிரதமர் மோடி தமிழ்நாட்டின் பக்கம் தலைகாட்டுகிறார். கடந்த பத்தாண்டுகளில் அவர் இத்தனை குறுகிய இடைவெளிகளில் தமிழ்நாட்டுக்கு வந்ததே இல்லை. 2014, 2019 தேர்தல் காலத்தில் கூட இதே நிலைதான். தற்போது அவர் அடிக்கடி வரக் காரணம் இங்கு பா.ஜ.க.வுக்கு வாய்ப்புள்ளது என நினைப்பதாலா அல்லது வடக்கில் அவர்கள் வலிமையாக உள்ள மாநிலங்களில் இம்முறை வெற்றி சந்தேகம் என நினைப்பதாலா?
இந்தியா முழுவதும் மோடி தலைமையிலான அரசின் பத்தாண்டுகால ஆட்சியின் அவலங்களும் அதனால் அதிருப்திகளும் வெளிப்பட்டு வருகின்றன. அது தேர்தல் களத்தில் நிச்சயம் எதிரொலிக்கும். அதைக் கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே தமிழ்நாடும் தென்மாநிலங்களும் எதிரொலித்தன. தமிழ்நாட்டிற்கு என்னென்ன நன்மைகள் செய்தார் என்று மக்களிடம் உண்மையைச் சொல்ல முடியுமா? அவர் வருகிற ஒவ்வொரு முறையும் அவரே தனது ஆட்சியின் அவலங்களை நினைவுபடுத்திவிட்டுச் செல்வார்.
போதைப் பொருள் வழக்கில் கைதான தி.மு.க.வின் முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கை முன்வைத்து பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும் தி.மு.க.வை விமர்சித்து வருகின்றனர். முதலமைச்சராக இவ்விவகாரம் குறித்து நீங்கள் பதில் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வலியுறுத்தியிருக்கிறார். உங்கள் ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் இருப்பதாகக் கூறி மனிதச் சங்கிலிப் போராட்டமும் நடத்தியிருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு உங்கள் பதில் என்ன?
குட்கா ஊழலில் தனது அமைச்சர் மீதும், காவல்துறை தலைவர் மீதும் நேரடியாக குற்றம்சாட்டப்படும் அளவில் ஆட்சி நடத்தியவர் தான் பழனிசாமி. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கமும் அவரது ஆட்சியில்தான் அதிகமாகின. அம்மையார் ஜெயலலிதா ஆட்சியிலேயே கஞ்சா –-ஹெராயின் வழக்குகள் போடப்பட்டதையும், அவை எப்படிப்பட்டவை என்பதையும் நாடறியும். அதனால், எடப்பாடி பழனிசாமியின் கட்சியினர் நடத்திய மனிதச்சங்கிலி போராட்டம் என்பது தேர்தல் நேர ஸ்டண்ட். பா.ஜ.க. ஆட்சி செய்யும் குஜராத் மாநிலம் தான் போதை மருந்துகளின் தலைநகரமாக உள்ளது என்பதைப் பல புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. அண்மையில், பழனிசாமியும் அதே குற்றச்சாட்டை சொல்லியிருக்கிறார். ஆக, இந்த இரண்டு கட்சிகளும்தான் போதைப் பொருள்களுக்கு வித்திட்ட கட்சிகள். ஜாபர் சாதிக் விவகாரத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தி.மு.க. மீது அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்.
2021-இல் இருந்து தமிழ்நாட்டில் பா.ஜ.க. பெரிதும் வளர்ந்துள்ளதாக அவர்கள் கூறிக்கொள்கிறார்கள். தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணிதான் முழுவெற்றி பெறும் என்று அறிவிக்கும் சில கருத்துக்கணிப்புகளும் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி 20% வரை வாக்குகளைப் பெறும் என்கின்றன. அப்படியானால் தமிழ்நாட்டில் தாமரை நிலைபெற்றுவிட்டதா?
மாய பிம்பத்தைக் கட்டமைக்க நினைக்கிறார்கள். (தாமரை) மலருமா கவிழுமா என்ற உண்மையைத் தேர்தல் முடிவுகள் காட்டிவிடும்.
2019இல் பா.ஜ.க. வெற்றிபெற்ற இந்தி பேசும் மாநிலங்களில் ‘இந்தியா’ கூட்டணியின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? நிதிஷ் குமார், ஜெயந்த் சவுத்ரி ஆகியோர் இந்தியா கூட்டணியை விட்டு வெளியேறி விட்டார்களே?
2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போதும் இதேபோல ‘இந்தியா ஒளிர்கிறது’ என்று ஆளும் பா.ஜ.க. தன் பிரச்சாரத்தை முன்னெடுத்தது. கருத்துக் கணிப்புகளும் அதனையொட்டியே இருந்தன. குறிப்பாக, வட மாநிலங்களில் பா.ஜ.க. ஆதரவு அலை என்று தெரிவித்தன. எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமையில்லை என விமர்சிக்கப்பட்டது. ஆனால், தேர்தல் முடிவுகள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கே சாதகமாக அமைந்தன. அடுத்த பத்தாண்டுகள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிதான் நடைபெற்றது. 2004 போலத்தான் 2024 தேர்தல் முடிவுகளும் அமையும். வரலாறு திரும்பும்.
உ.பி., மகாராஷ்டிரா, தில்லி, குஜராத், மத்தியப் பிரதேசம், ஹரியானா, கோவா ஆகிய வட மாநிலங்களில் ‘இந்தியா’ கூட்டணி தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்திருப்பது நம்பிக்கை அளிக்கிறது. ஆனால், மத அரசியல் தாக்கம் செலுத்தும் பா.ஜ.க. வலிமையாக உள்ள மாநிலங்களில் அவர்களை எதிர்க்கப் போதுமான நடவடிக்கைகளை ‘இந்தியா’ கூட்டணி மேற்கொண்டுள்ளதா? குறிப்பாக ராமர் கோயில் திறப்புக்குப் பிறகு…
‘இந்தியா’ கூட்டணியை முற்றிலுமாகத் தகர்த்துவிடலாம் என்ற பா.ஜ.க.வின் எண்ணம் நிறைவேறவில்லை என்பதைத்தான் தங்களின் கேள்வி வெளிப்படுத்துகிறது. மதவாத அரசியல் என்பது பா.ஜ.க.வின் அடிப்படைக் கொள்கை. மக்களின் பக்தியுணர்வை வாக்குகளாக மாற்ற நினைப்பது அதன் தேர்தல் உத்தியாக இருக்கலாம். மதச்சார்பின்மை – பன்முகத்தன்மை – மாநில உரிமைகளை எந்தளவு பா.ஜ.க. சிதைத்துள்ளது என்பதும் மக்களுக்குத் தெரியும். அதை உரிய வகையில் தேர்தல் களத்தில் எடுத்துரைக்கும் பணியை இந்தியா கூட்டணி உறுதியாகவும் தெளிவாகவும் மேற்கொள்ளும்.
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சியை மோடி புகழ்ந்து பேசி இருக்கிறார்? இதன் அரசியல் உள்நோக்கம் என்னவாக இருக்கும் என்று கருதுகிறீர்கள்?
ஜெயலலிதா அம்மையாரின் ஆட்சியை ஊழல் ஆட்சி என்று இதே மோடியும் அமித்ஷாவும் விமர்சித்திருக்கிறார்கள். இப்போது எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் போற்றுகிறார்கள். தமிழ்நாட்டில் தங்களுடைய சாதனை என்று பா.ஜ.க.வால் எதையும் சொல்ல முடியாது. தி.மு.க ஆட்சியின் சாதனைகள் மீதோ, பேரறிஞர் அண்ணா- முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் அரசியல் கொள்கைகள் மீதோ பா.ஜ.க.வால் ஸ்டிக்கர் ஒட்ட முடியாது. அதனால் எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் பயன்படுத்துகிறார்கள்.
நிதிக் கட்டுப்பாடுகளை விதித்து எதிர்க்கட்சிகள் தங்கள் மாநிலங்களில் தேர்தல் வாக்கு றுதிகளை நிறைவேற்றவிடா மல் ஒன்றிய அரசு தடுக்கிறதா? இத்தகைய கட்டுப்பாடுகள், நிதியை விடுவிப்பதில் தாமதம் ஆகியவை பா.ஜ.க.வை எதிர்க்கும் மாநிலங்கள் மீது அழுத்தம் கொடுப்பதற்காகவே செய்யப்படுவதாக நினைக் கிறீர்களா?
மாநில உரிமைகளைப் பறிக்கும் பா.ஜ.க.வின் முதன்மை இலக்கு, இந்தியாவில் மாநில அரசுகளே இருக்கக்கூடாது என்பதுதான். பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங் களை இரட்டை இஞ்சின் அரசு என்று அவர்கள் வர்ணிப்பதன் மூலமே, பா.ஜ.க. ஆட்சி அல்லாத மாநில மக்களின் நலன்களைப் புறக்கணி ப்பதைப் புரிந்துகொள்ளலாம். அதிலும் தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஒருபோதும் ஆட்சி அமைக்க முடி யாது என்பதால் முற்றிலுமாகப் புறக்கணிக்கும் போக்கு தொடர்கிறது. இதன் மூலமாக, மக்களுக்கு மாநில அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத சூழலை உருவாக்கி, தேர்தல் களத்தில் விமர்சனம் செய்யலாம் என்பது பா.ஜ.க.வின் கணக்கு. ஆனால், அது தப்புக் கணக்காகத்தான் முடியும். பா.ஜ.க. வுக்கு எந்தக் காலத்திலும் தமிழ்நாட்டு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். பா.ஜ.க,வுக்கு அளிக்கும் வாக்கு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வைக்கும் வேட்டு என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும்.
பிரதமர் மோடியானாலும் பா.ஜ.க ஆனாலும் ஒன்றிய அரசின் எந்த வளர்ச்சித் திட்டத்தை உங்கள் அரசு தடுத்துநிறுத்தியது என விளக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு இதுவரை பதில் கூறவில்லை. அதேநேரம், திமுகவை வாரிசு கட்சி என் றும் ஊழல் கட்சி என்றும் பிரதமர் மீண்டும் விமர்சித்திருக்கிறாரே?
பொதுவாக, மாற்றுக் கட்சியில் இருப்பவர்கள் நம்மை விமர்சனம் செய்யும்போது ஒரு சில பொய்களை, தவறான தகவல்களை வெளியிடுவது உண்டு. ஆனால், பிரதமர் போன்ற மிக உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்கள் அப்படிச் செயல்படமாட்டார்கள். பண்டிதர் நேரு முதல் டாக்டர் மன்மோகன் சிங் வரை பிரதமர்கள் அப்படித்தான் இருந்தார்கள். ஆனால், திரு. நரேந்திர மோடியும் அவரது பா.ஜ.க. நிர்வாகிகளும் தவறான தகவல்களைச் சொல் பவர்களாகவும், வதந்திகளை வாட்ஸ்ஆப் வழியாகப் பரப்புகிற வர்களாகவும் இருக்கிறார்கள். இதையே முழு நேரத் தொழிலாகக் கொண்டிருக்கிற பா.ஜ.க. நிர்வாகிகளும் உண்டு. அவை குறித்து, கேள்வி எழுப்பினால் பதில் இருக்காது. இன்னொரு வதந்திக்கோ, விமர்சனத்திற்கோ தாவி விடுவார்கள். ஒன்றிய அரசின் எந்தத் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு முடக்கி யது என்று கேட்டால் அதற்குப் பதில் வராது. காரணம், ஒன்றிய அரசின் பங்களிப்போடு நடைபெறும் பிரதமரின் வீடு கட்டும் திட்டம், ஜல்ஜீவன் திட்டம் உள்ளிட்ட அனைத்திலும் தமிழ்நாடு அரசு தன் பங்களிப்பைக் கூடுதலாகச் செலுத்தி, சிறப்பாக நிறைவேற்றி அதற்காக ஒன்றிய அரசின் சார்பிலேயே விருதுகளையும் பெற்றுள்ளது. இது பிரதமர் தொடங்கி பா.ஜ.க. நிர்வாகிகள் அனைவருக்கும் தெரியும். அதனால்தான் தி.மு.க. மீது வாரிசு அரசியல், ஊழல் முறைகேடு என்று திசைதிருப்பும் விமர்சனங்களை வைப்பது வழக்கமாகிவிட்டது.
நான் கலைஞரின் மகன்தான். அவருடைய கொள்கை வாரிசுதான். அந்த அடிப்படையில்தான் மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து முத லமைச்சராகத் தேர்ந்தெடுத்துள் ளார்கள். பா.ஜ.க. வெளியிட்டுள்ள நாடாளுமன்றத் தேர்தல் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாரிசுகளுக்கு பிரதமரும் அவரது கட்சி நிர்வாகி களும் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? 7 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு எனத் தலை மைக் கணக்குத் தணிக்கை அறிக்கையும், தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றுள்ள நிதியும் பாஜகவின் உண்மை முகம் என்ன என்பதைக் காட்டியிருக்கிறதே, அதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? ஊழலை சட்டப் பூர்வமாகச் செய்வதே பா.ஜ.க.வின் பாணியாகும்.