இப்பூவுலகின் பலகோடி ஆண்டுகள் நீண்ட பரிணாமத்தில் பல இலட்சம் உயிரினங்கள் அவற்றின் வாழிடத்தின் சூழலுக்கு ஏற்றபடி நன்கு தகவமைந்திருக்கின்றன. இயற்கை யாகவே அமைந்த மலைகள் கடல்கள் போன்ற அரண்களாலும் வேறுபட்ட சூழலுக்கு பொருத்தமற்ற தகவமைவுகளாலும் இவற்றின் பரவல் இயற்கை யாகவே தடுக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக, துருவத்துப் பென்குயின்களால் இந்தியாபோன்ற வெப்பமண்டல நாடுகளின் கடற்பரப்புகளை அடைய முடியாது. அப்படியே அடைந்தாலும் அவற்றால் பிழைத்திருக்க முடியாது. ஆனால், இதற்கு மாறாக சில உயிரினங்கள் புதிய வாழிடச் சூழல்களை அடையும்போது தழைத்து வாழும் பண்புகளைப் பெற்றிருக்கின்றன. அரிதாக சுனாமி, வெள்ளம், புயல்கள் போன்றவற்றால் இயற்கையாக ஒரு வாழிடத்திற்கே உரிய உயிரி னங்கள் இன்னொரு வாழிடத்தை அடைவதுண்டு. கண்டங்களிலிருந்து பிரிக்கப்பட்ட தீவுகளை அடைந்து அங்கே தழைத்து வாழும் உயிரினங்களை இவற்றுக்கு உதாரணமாகச் சொல்லலாம்.
இயற்கையாக அன்றி மனித நடவடிக்கைகளால் வேண்டுமென்றே திட்டமிட்டோ, அறியாமையாலோ, தவறுதலாகவோ, சரியான புரிதலின்றியோ பல உயிரினங்கள் ஒரு வாழிடத்திலிருந்து இன்னொரு வாழிடத்துக்குக் குடிபெயர்கின்றன. இவ்வாறு குடி பெயரும் உயிரினங்கள் புதிய சூழலை ஆக்கிரமித்து தழைத்து வாழ்வதை ‘அயல் படர்’ உயிரினங்கள் என்கிறோம். ஆங்கிலேயர்களால் இந்தியாவில் அறிமுகப் படுத்தப்பட்ட தைல மரங்களை இதற்கு ஒரு உதாரண மாகச் சொல்லலாம். இப்படியான அயல் உயிர்கள் இங்கு தழைத்து வளர்கின்றன என்றாலே அதன் பொருள் இங்கு இன்னொரு உயிருக்கான உணவை அவை எடுத்துக்கொள்கின்றன என்பதே. தைல மரங்கள், உண்ணிச் செடி எனப்படும் லாந்தனா (அமெரிக்க வெப்ப மண்டலத் தாவரம்) போன்ற தாவரங்களின் பரவலால் மேற்குத் தொடர்ச்சி மலையின் உயிர்ப்பன்மையம் சீரழிந்துவருவது நாம் நன்கு அறிந்த ஒன்றாகும்.
இதுபோன்றே, தமிழ்நாட்டின் நீர்நிலைகளை ஆக்கிரமித்திருக்கும் ஆப்பிரிக்க கெளுத்தி மீன் (Cat fish), திலேப்பியா போன்ற மீனினங்கள் இங்கிருந்த பெரும்பாலான இயல் மீனினங்களை முற்றிலும் அழித்துவிட்டிருக்கின்றன. எந்த மோசமான சூழலி லும்கூட வாழ்ந்துவிடும் தன்மைகொண்ட ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் பள்ளிக்கரணை சதுப்புநிலம் போன்ற மிகுந்த உயிர்ப்பன்மைய முக்கியத்துவமிக்க நீர்நிலைகளில் ஆக்கிரமித்து சிறிய மீனினங்களை யும் அவற்றின் முட்டைகளையும்கூட அழித்து விட்டி ருக்கின்றன. இதனால் பறவைகளின் முக்கிய உணவு ஆதாரம் சிதைக்கப்படுவதோடு இயலுயிர்களின் பன்மைத்துவமும் குறைகிறது. பல இலட்சம் ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்டப் பகுதி யின் சூழலுக்குத் தகவமைந்து வாழும் உயிரி னங்கள் புதிய அயல் படர் உயிரினங்களை எதிர்கொள்ள முடியாமல் அழிகின்றன. இது உயிரி னங்களின் உணவுச் சங்கிலியில் கடும் தாக்கத்தை உருவாக்குகிறது. அது மட்டுமின்றி, இவை தொற்று நோய்களைப் பரப்பும் வாகனமாகவும் பல நேரங்களில் மாறிவிடுகின்றன. உலக அளவில் அதிக தொற்று நோய் மரணங்களுக்குக் காரணமான டெங்கு நோய் பரப்பும் ஏடிஎஸ் கொசுவானது நம் மண்ணைச் சார்ந்ததல்ல. கோவிட் தொற்றுக்குக் காரணமான கொரோனா நச்சுயிரிகூட உலகின் பெரும்பாலான பகுதிகளுக்கும் ஒரு அயல் படர் உயிரினம்தான்.
சீமைக் கருவேலம், சென்னை உட்படத் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்போது பரவலாகக் காணப்படும் ஒரு வகை நத்தை (African Gaint Snail), தென்னமெரிக்க வெப்ப மண்டலத்தைப் பூர்வீக மாகக்கொண்ட ஆகாயத் தாமரை, அமெரிக்க வெப்ப மண்டலத்தைச் சார்ந்த பார்த்தீனியம் போன்றவை நம் மாநிலத்தில் பெருவாரியாக அச்சுறுத்தலாக உணரப்பட்டிருக்கும் அயல் படர் உயிரினங்களாகும். நவீன உலகத்தில் பொருட்களின் ஏற்றுமதி – இறக்குமதி, வாகனங்கள் மற்றும் மனிதர்களின் போக்குவரத்து அதிகரிப்பு, கனிமங்கள் போன்ற வற்றுக்கான வாழிட அழிப்பு, உலக வெப்பமய மாதல் மற்றும் தீவிர காலநிலை நிகழ்வுகள், அழகுச் செடிகள், வளர்ப்பு/செல்லப் பிராணிகள் என்ற பெயரால் சந்தைப்படுத்தப்படும் உயிரினங்கள் போன்றவற்றால் விலங்குகள் எப்போதும் இல்லாத அளவில் ஒரு சூழலிலிருந்து இன்னொரு சூழலை அடைகின்றன. உதாரணமாக, வெப்பநிலை அதி கரிப்பால் வெப்ப மண்டல சமவெளிப் பகுதிகளிலிருந்து மலைப்பாங்கான குளிர்பகுதிகளுக்கு பரவும் பூச்சி களைக் குறிப்பிடலாம். இவை உணவுப் பாதுகாப்புக் கும்கூட பெரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றன.
இந்த அயல் படர் இனங்களை கண்டறிவதும் அவற்றின் பரவலைத் தடுத்து அழிப்பதும் மிகவும் பொருட்செலவு உடையது மட்டுமின்றி பலநேரங்க ளில் நடைமுறை சாத்தியமற்றதும்கூட. சில நேரங்க ளில் புதிய சூழல்களில் நன்கு பரவியிருக்கும் அவற்றை அழிக்க முயல்வதுகூட மோசமான விளைவுக ளை உருவாக்கக்கூடும். இவற்றுக்கு தொழில்நுட்பங்க ளைத் தாண்டிய மிக ஆழமான சூழல் புரிதலும் ஆய்வும் தேவைப்படும். உயிர்ப்பன்மையம் மற்றும் சூழல் அமைவுகள் வழங்கும் சேவைகள் குறித்தான அறிவியல் மற்றும் கொள்கைக்கான பன்னாட்டுக் குழு வெளியிட்டுள்ள ஆய்வுகளின்படி:
ஆய்வின் முக்கிய முடிவுகள்
அயல் படர் இனங்களின் பரவல்
1. உலகம் முழுவதும் 37 ஆயிரத்திற்கும் மேலான அயல்படர் உயிரினங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
2. ஒவ்வொரு ஆண்டிற்கும் 200 புதிய அயல் படர் உயிரினங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
3. 1970ஆம் ஆண்டிற்குப் பிறகு மட்டும் இதுவரைகண்டறியப்பட்டதில் 37% இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
4. தடுப்பு நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் அயல் படர் இனங்களின் எண்ணிக்கை 2005ஆம் ஆண்டுடன்ஒப்பிடுகையில் 2030 ஆண்டில் 36% அதிகரிக்கும்.
அயல் படர் இனங்களின் தாக்கங்கள்
1. அயல் படர் இனங்களின் தாக்கம் 75% நிலத்தில் ஏற்பட்டுள்ளது.
2. நன்னீர் சூழல் அமைவுகளில் 14% தாக்கம் ஏற்பட்டுள்ளது.
3. கடற் பகுதிகளில் 10% தாக்கம் ஏற்பட்டுள்ளது.
4. 60% உயிரினங்கள் அற்றுப்போன நிகழ்வுகளில் அயல் படர் உயிரினங்களின் பங்கும் உள்ளது.
5. 16% உயிரினங்கள் அற்றுப்போனதற்கு அயல் படர் இனங்கள் மட்டுமே முக்கியக் காரணமாகும்.
6. 1215 வகையான நாட்டு இனங்கள் குறிப்பிட்ட பகுதியில் அற்றுப் போனதற்கு 218 அயல் படர் உயிரினங்கள் மட்டுமே காரணமாகும்.
7. பழங்குடிகளால் நிர்வகிக்கப்படும் நிலங்களில் மட்டும் 2300 அயல் படர் உயிரினங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
கொள்கை மற்றும் மேலாண்மை
1. உலகில் 83% நாடுகள் அயல் படர் இனங்களின் பாதிப் பைத் தடுக்க குறிப்பிட்ட தேசிய சட்டம் அல்லது ஒழுங்கு முறைகள் இல்லாத நாடுகளாக இருக்கின்றன.
தமிழ் நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் காடுகளில் பரவியுள்ள அயல் படர்/முற்றுகைத் தாவரங்களை அழிப்பதற்கு வனத்துறை தீவிர முயற்சிகளை மேற் கொண்டு வருகிறது. ஆனால், கடல், ஆறுகள் உள் ளிட்ட நீர்நிலைகளிலும் நாம் கவனம் செலுத்த வேண்டி யதன் அவசியத்தை இந்த அறிக்கை நமக்கு உணர்த்து கிறது. இதனைக் கருத்தில்கொண்டு இதற்கான சிறப்புத் திட்டங்களை தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும்.
நன்றி: ‘பூவுலகு’ செப்டம்பர் 2023 இதழ்