கம்யூனிஸ்ட் கட்சி வந்துச்சு!
வன்கொடுமைகளில் பாதிக்கப்பட்டு, செங்கொடி ஏந்திப் போராடி, நீதியை வென்றுள்ள வாச்சாத்தி மக்கள் சார்பில், வீரப்பெண்மணிகள் சார்பில் தீக்கதிரிடம் பேசிய சகோதரிகள் சொல்கிறார்கள்:
அமுதா (எ) அமரக்கா
பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருத்தி. என்னை பாரஸ்ட்காரங்க சித்திரவதை பண்ணாங்க, இந்த சம்பவத்தால் எனக்கு மனநலம் பாதிக்கபட்டுச்சி. செங்கொடி கட்சி தான் என்னை ஆஸ்பத்திரிக்கு அழைச்சுட்டு போயி காப்பத்துனாங்க. கட்சி மட்டும் இல்லனா நான் உயிரோட இருந்திருக்க முடியாது. எங்களுக்கு நடந்த கொடுமை வேறு யாருக்கும் நடக்கக் கூடாது. எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வந்துடுச்சி. நாங்க முன்னேற எந்த வழியும் இல்லை. அரசு எங்க கிராமத்த முன்னேற்ற நடவடிக்கை எடுக்கனும்.
தேன்மொழி
சம்பவத்தப்போ எனக்கு கல்யாணம் ஆகல. என் வாழ்க்கை பாதிக்கப்பட்ட போது என் மாமா முருகன் தான் என்ன கல்யாணம் செஞ்சிகிட்டாரு. நானும் ஜெயில்ல இருந்தேன். எங்க மாமா முருகனை பாரஸ்ட் காரங்க குண்டர் சட்டத்துல கைது செஞ்சி ஜெயில்ல இருந்தாரு. பாரஸ்ட்காரங்க கிட்ட எக்கசக்கமான சித்திரவதை அனுபவிச்சாரு. கைகால் எல்லாம் உடைச்சிட்டாங்க. வயிற்றில் எட்டி உதைத்து சிறுநீரகம் பாதிப்பு அடைந்தது. ஜெயிலில் இருந்து வெளிவந்து நோய்வாய்ப்பட்டு கொஞ்சகாலம் கழிச்சி இறந்துட்டாரு. நாங்க இப்போ வாழ வழியின்றி தவிச்சிட்டுவரோம். எங்க பசங்களுக்கு அரசு வேலை வழங்கனும்.
சாலா
18 பெண்களை பாரஸ்ட்காருங்க எங்க கிராமத்தின் அருகே உள்ள ஏரிக்கு கூட்டிட்டு போனாங்க. அதோடு என்னையும் கூட்டிட்டு போனாங்க. பாதுகாப்புக்கு இருந்த போலீசுக்கிட்ட அவங்க காலபுடிச்சி எங்க பொண்ணுங்கள காப்பாத்துங்குன்னு கதறி அழுதேன். அந்த போலீஸ்காரு, ஏம்மா விசியம் கைமீறி போச்சு, நாங்க உங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வரல, நாங்க பாரஸ்ட்காருங்களுக்குதான் பாதுகாப்பு கொடுக்க வந்திருக்கிறோம், என சொன்னார். அப்புறம் அந்த 18 பொண்ணுங்களையும் ஆலமரத்துக்குக்கு கூட்டிட்டுவந்தாங்க. எங்க பொண்ணுங்க துணியெல்லாம் கிழிஞ்சி அலங்கோலமா வந்தாங்க. அதுல எம்பொண்ணு காந்தியும் ஒன்னு. ஐயோ பொண்ணுங்க வாழ்க்கை போச்சேன்னு நான் கதறி அழுதேன். அப்புறம் அவங்களையும் ஊரு சனங்களோடு அரூர் பாரஸ்ட் ஆபிஸ் கூட்டிட்டு போயிட்டாங்க. 6 ஆவது படிச்ச என்னோட பையனையும் கூட்டிட்டு போயிட்டாங்க. அரூர் பாரஸ்ட் ஆபீசுல மொத்த சனங்களுக்கும் அடிவிழுந்துச்சு, சின்னபையன்னுகூட பார்க்கல. என் பையனையும் அடிச்சாங்க. அப்புறம் ஒரு வழியா சின்ன பசங்க 6 பேரோடு என்னை எங்க ஊருக்கு போக அனுமதிச்சாங்க. ஊருக்கு வந்தா ஊர்ல ஒருத்தர் கூட இல்ல, மயான அமைதியா இருந்துச்சி. எங்க வீட்ல ஒரு பொருள் கூட இல்ல, எல்லா பொருளும் வீதியில சிதைபட்டு இருந்துச்சி. பட்டியில் இருந்த 30 ஆடுகள பாரஸ்ட்காருங்க ஓட்டிட்டு போயிட்டாங்க.. எங்கள காப்பாத்த யாரும் வரமாட்டாங்களான்னு கதறி அழுதேன். ஒரு சில நாள் கழிச்சு கம்யூனிஸ்ட்காரங்க அண்ணாமலை, சண்முகம், டில்லி பாபு, எல்லாம் வந்தாங்க. நிலைமையை விளக்கி சொன்னேன். சிவப்பு கொடியை காட்டி எல்லோரையும் வரச் சொன்னோம். அதபார்த்த மலையில மறைஞ்சிருந்த சனங்க கிராமத்துக்கு வந்து சேந்தாங்க, கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தால இன்னிக்கு எங்களுக்கு நீதி கிடைச்சுருக்கு!
வேடியப்பன்(75)
பாரஸ்ட்டு, போலீசு எங்க கிராமத்த அடிச்சு நொறுக்கிற பார்த்த நான் தப்பித்து ஓடிட்டேன். எங்க ஊரே சேலம் ஜெயிலில் இருந்தாங்க. நான் அவங்களை பார்க்க போனேன். அப்போ அங்கிருந்த பாரஸ்ட்காரங்க என்னை பிடிச்சு அரூர் ரேஞ்சர் ஆபிசுக்கு கூட்டிட்டு போயிட்டாங்க. என்ன 15 நாள் அங்கேயே கட்டி வச்சி அடிச்சாங்க. கையெல்லாம் இரத்தம். சாப்பாடு கொடுக்கல. பிறகு சேலம் ஜெயிலுக்கு கொண்டு போயிட்டாங்க. மலைவாழ் மக்கள் சங்கத்துகாரங்கதான் 3 மாசம் ஜெயில்ல இருந்த என்ன ஜாமின் எடுத்தாங்க. பாதிக்கப்பட்ட 18 பெண்கள்ள என் பொண்ணு மல்லிகாவும் ஒருத்தி. அன்னைக்கு சங்கத்துக்காருங்க மட்டும் வந்து உதவலன்னா எங்க ஊரு மண்ணோடு மண்ணா மக்கியிருக்கும்.
பரந்தாயி
பாதிக்கப்பட்ட 18 பெண்கள்ள என் பொண்ணும் உண்டு. பாரஸ்ட்டுகாரங்க என்னை அடிச்சு கை, கால் எல்லாம் ஒடைச்சுட்டாங்க. எங்கள காப்பாத்த கடவுள் வரமாட்டாரான்னு நெனைச்சேன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் வந்துச்சு. எங்கள் காப்பாத்துச்சு. பாரஸ்ட்டுகாரங்க எங்கள அழிச்சுட்டாங்க, 31 வருஷம் கழிச்சு எங்களுக்கு நீதி கிடைச்சது, ஆனா இன்னும் எங்களால முன்னேற முடியுல, எங்க ஊர்ல எந்த வசதியும் இல்லை. வேலை இல்லாம ஆண்கள் எல்லாம் வெளியூருக்கு வேலைக்கு போயிருக்காங்க. பெண்கள் எல்லாம் கூலி வேலைக்கு பக்கத்து ஊருக்கு போறோம். ஊருக்கு தேவையானத அரசு செஞ்சி கொடுக்கனும். பாதிக்கப்பட்டவங்களுக்கு அரசு வேலை கொடுக்கனும்.
பூங்கொடி
பாதிக்கப்பட்ட பெண்கள்ல நானும் ஒருத்தி. நாங்க ஜெயில்ல இருந்தப்ப மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகாரங்கதான் ஜாமின் எடுத்து எங்க கிராமத்துக்கு கூட்டிட்டு வந்தாங்க. நிர்க்கதியா தெருவுல நின்ன எங்களுக்கு பாத்திரம், துணி, உணவு தானியம் கொடுத்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. எங்களுக்கு நீதி கிடைக்க ஊக்கம் கொடுத்தாங்க. ஆறுதல் சொன்னாங்க. தைரியம் சொன்னாங்க. குற்றவாளிகள கண்டுபிடிக்க சேலம், கிருஷ்ணகிரி ஜெயில்ல அணி வகுப்பு நடத்துனப்போ குற்றவாளிய காட்டிக் கொடுக்க கூடாதுன்னு எங்கள பாரஸ்ட்காருங்க மிரட்டினாங்க. அணிவகுப்பு நடத்துன அப்போ, ஆயிரம் பேர் நிண்டாங்க. சீரழிச்சவங்க எங்களை பார்த்து நாக்கை கடித்து, கண்களை உருட்டி எங்கள மிரட்டுனாங்க. நாங்க கரெக்டா குற்றவாளிய காட்டி கொடுத்தோம். மீசை எடுத்துட்டும் தலைக்கு மொட்டை அடிச்சும் அணிவகுப்புல நிண்டாங்க. ஆனாலும், நாங்க கரெக்டா கண்டுபிடிச்சு சொன்னோம். எங்களுக்கு தைரியம் கொடுத்தது மார்க்சிஸ்ட் கட்சி தான். எங்களுக்கு ஒரு வழியா நீதி கிடைச்சுடுச்சி. ஆனா அந்த சம்பவம் என் மனதில் ஆறா வடுவா இருக்கு. ஒரு வேலை நான் செத்தாதான் அதை மறக்க முடியும். எங்க வாழ்க்கையில எந்த முன்னேற்றமும் இல்லை. இன்னைக்கும் வாழ வழியின்றி தான் தவித்து வருகிறோம். பலருக்கு வீடு இல்ல. வேலைதேடி நாடோடியா அலையிறோம். எங்களுக்கு நிம்மதி என்பதே இல்லை. எங்க வாழ்க்கை போராட்டமாகவே இருக்கு. எங்க பசங்க படிச்சிருக்காங்க. பசங்க தலைமுறையாவது முன்னேற அரசு வேலை வழங்கனும். எங்களுக்கு உரிய நிவாரணம் அரசு உடனே வழங்க வேண்டும்.
சந்திப்பு: லெனின், தர்மபுரி