கனடாவின் தென் கோடி ஆர்க்டிக் பகுதியில் துருவக்கரடிகளின் தலைநகரம் என்று அழைக்கப்படும் சர்ச்சில் நகரம் அமைந்திருக்கும் மேற்கு எல்லையோர ஹட்சன் வளைகுடாப் பகுதியில் இருந்து துருவக்கரடிகள் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன என்று சமீப ஆய்வுகள் கூறுகின்றன. சுற்றுலாப் புகழ்பெற்ற இப்பகுதியில் கனடா அரசால் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை துருவக்கரடிகளின் கணக்கெடுப்பு டுரோன்கள் மூலம் நடத்தப்படுகிறது. 2021 ஆகஸ்ட் செப்டம்பரில் மேற் கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள் டிசம்பர் 2022இல் வெளியிடப்பட்டது. இதில் பெண் துருவக்கரடிகள் மற்றும் குட்டி களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள் ளது. 194 துருவக்கரடிகளை ஆய்வாளர் கள் நேரடியாக பார்த்தனர். ஆய்வின் முடிவில் இப்போது இப்பகுதியில் 618 துருவக்கரடிகள் இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது.
ஐந்தாண்டுகளுக்கு முன் 2011-16இல் இந்த எண்ணிக்கை 842 ஆக இருந்தது. 2011ம் ஆண்டிற்கும் 2021ம் ஆண்டிற்கும் இடையில் பெண் துருவக்கரடிகள் மற்றும் இனப்பெருக்கத்திற்கு தயாராகும் குட்டி களின் எண்ணிக்கையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஆர்க்டிக் பகுதியின் நில அமைப்பில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்பு இதற்குக் காரனம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வாழ முடியாத சூழ்நிலையால் துருவக் கரடிகள் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து செல்வது, வேட்டையாடுதல் போன்றவையும் இந்நிலைக்குக் காரண மாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். பனிப்பாறைகள் மற்றும் பனிக்கட்டிகளின் மறைவு அச்சுறுத்தும் வகையில் பூமியின் வட கோடியில் அமைந்திருக்கும் இப்பகுதியில் நிகழ்ந்து வருகிறது.
உணவில்லாமல் உயிரிழக்கும் அவலம்
சமீபகாலங்களில் இப்பகுதியில் குட்டி துருவக்கரடிகள் தாயுடன் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்று ஆய்வாளர்கள் கூறு கின்றனர். போதிய உணவில்லாததே இவற் றின் மரணத்திற்குக் காரணம். குட்டி களைப் பராமரிக்க அதிக ஆற்றலை செலவிட வேண்டியிருப்பதால் தாய் துரு வக்கரடிகள் உண்ண உணவு கிடைக்கா மல் பட்டினி கிடந்து உயிரிழக்கின்றன. உலகின் மற்ற பகுதிகளை விட ஆர்க்டிக் கடற்பகுதியில் புவி வெப்பம் அதிகரிப்பால் வெப்பநிலை நான்கு மடங்கு உயர்கிறது. இதனால் பனிப்பாறைகளின் அடர்த்தி குறைகிறது. மெலிதாகும் பனிக்கட்டிகள் வசந்த காலத்தின் தொடக்கத்தில் முன்கூட்டியே உருகுகின்றன. இவை வழக்கத்திற்கு மாறாக இலையுதிர் காலத்தின் பிற்பகுதியில் உறைகின்றன. துருவக்கரடிகளுக்கு முக்கிய உண வான சீல்களைப் பிடிக்க, நடமாட்டம் மற்றும் இனப்பெருக்கத்திற்கு பனிப் பாறைகளின் ஆரோக்கியம் அவசியம். ஹட்சன் வளைகுடாவில் 1980கள் முதல் பனிப்பாறைகளில் 50 விழுக்காடு உருகிவிட்டன என்று யுஎஸ் தேசிய பனி மற்றும் ஐஸ் பற்றிய தரவுகள் ஆய்வு மையம் கூறுகிறது.
விஞ்ஞானிகளின் எச்சரிக்கை
1980களில் இப்பகுதியில் 1200 துருவக் கரடிகள் மட்டுமே வாழ்ந்தன. ஆனால் இப்போது இந்த எண்ணிக்கையும் பாதி யாகக் குறைந்துள்ளது சூழல் ஆய்வாளர் களிடையில் பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் நேச்சர் காலநிலை மாற்றம் (Nature Climate change) ஆய்விதழில் வெளி யான ஆய்வறிக்கையில் வருங்காலத்தில் இந்நிலை தொடரும் என்றும் இதனால் துருவக்கரடிகள் இனமே அழியும் ஆபத்து உள்ளது என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்திருந்தனர். இது இன்று நிஜமாகியுள்ளது. இந்நிலை நீடித்தால் வெகுவிரைவில் துருவக்கரடி களின் தலைநகரம் என்ற பெருமைக்குரிய சர்ச்சில் நகரம் மட்டும் இல்லாமல் ஆர்க் டிக் கடற்பகுதியும் பனியிழந்து பாறைகள் நிறைந்த பொட்டல் காடாக மாறும். அப்போது துருவக்கரடிகள் என்ற உயி ரினமே பூமியில் இருந்து அழிந்து போயிருக்கும்.