articles

img

தோழன் அசோக் - சமரசமற்ற போராளி - கே.ஜி.பாஸ்கரன்

தோழன் அசோக் - சமரசமற்ற போராளி

2019 ஜூன் 12, அந்த நாளின் பெரும் துயரம் இப்போதும் நமது நெஞ்சங்களில் பாரமாய் கனக்கிறது. வாலிபர் சங்கத்தின் முன்னத்தி ஏராக திகழ்ந்த  இளம்தோழன் அசோக், சாதி ஆதிக்க சக்தி களால் கொல்லப்பட்ட நாள். நிராயுதபாணி யாக, வேலைக்கு சென்று கொண்டிருந்த அசோக்கை, புதர்களில் மறைந்திருந்து, கொடூர ஆயுதங்களோடு புறமுதுகில் தாக்கினார்கள். மெலிந்த தேகம், குள்ளமான உருவம், புன்முறு வல் மாறாத முகம், யாரையும் எளிதில் வசீகரிக்கும் பேச்சு நிறைந்த அசோக் மீது பதிமூன்றுக்கும் அதிகமான வெட்டுக்கள். கம்யூனிசத்தின் மீது தீராக் காதல் கொண்ட அவனது கொள்கைப்பிடிப்பும், சமரசமில்லாத உறுதியும், அச்சமூக விரோதிகளை அச்சம் கொள்ள வைத்தது. பெரிய வீட்டின் வாசலில் நின்று, தவறே செய்யவில்லை என்றாலும், கேள்வி கேட்டதற்காக, முறைத்துப் பார்த்த தற்காக, மோட்டார் சைக்கிளில் சென்றதற்காக, காலம் காலமாக மன்னிப்பு கேட்டு, ‘சமாதா னத்தைப்’ பின்பற்றும் இழி நிலைக்கு எதிராக, துணிச்சலோடு ஆதிக்க நிலையை எதிர்த்து சமர் புரியும் போராளியாக நின்றான் அசோக். உலகு தழுவிய இடதுசாரி இளைஞர் இயக்கத்தின் பிரதிநிதி எனும் பெருமிதத்தோடு சண்டமாருதம் செய்தான்.  ஒடுக்குமுறை இல்லாத, பாகுபாடு அற்ற, சுரண்டலற்ற சமத்துவ சமூகத்தை உரு வாக்க வேண்டுமென்ற கனலை நெஞ்சில் சுமந்து களமாடிய அசோக்கை, அவனது செயலுக்கத்துக்கு காரணமான கருத்தியல் மீது வெஞ்சினம் கொண்டு கொலை பாதகச் செயலை செய்தனர்.  இந்தப் போராட்டம் என்னோடு துவங்கவும் இல்லை, என்னோடு முடியப் போவதும் இல்லை  எனும் போராளிகளின் முழக்கம் அசோக்கின் கடைசி மூச்சிலும் வெளிப்பட்டது. போராளி களுக்கு மரணம் இல்லை. போராளிகள் விதைக்  கப்படுகிறார்கள். அசோக் இந்த மண்ணில் விதைக்கப்பட்ட வீரிய வித்து.

அலெய்டாவின் கரங்கள்  

அசோக் கொல்லப்பட்ட நிகழ்வை கண்டித்து  தமிழகம் மட்டும் அல்லாது, நாடு முழுவதும் கண்டன இயக்கங்களை முன் எடுத்தது வாலி பர் சங்கம். கேரளத்தில் மிகப் பரவலாக எதிர்ப்பி யக்கம் நடைபெற்றது. கேரள தியாகிகள் நினைவு தின நிகழ்வில் பங்கேற்க, அசோக்கின் தம்பி சதீசுக்கு அழைப்பு விடுத்தனர். ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தின் அடையாளமாகத் திகழும் சே குவேராவின் புதல்வி அலெய்டா, அசோக்கின் தியாகத்தைப் போற்றி, சதீசை ஆரத் தழுவிக் கொண்டார். சேகுவேராவை முன் மாதிரியாகக் கொண்டு வாழ்ந்த அசோக், தனது தம்பியின் மூலமாக, சேகுவேரா கொஞ்சி மகிழ்ந்த அலெய் டாவின் கரங்களைப் பற்றிக் கொண்டான். பொலிவியா காடுகளைக் கடந்து, உலகின்  திசை  எங்கும் பரவி நிற்கிறார் நமது சே. ஏகாதிபத்தி யத்தின் முதுகெலும்பை முறித்து எறியும் வல்ல மை சோசலிச சக்திகளுக்கு மட்டுமே உண்டு எனும் முழக்கத்தை ஏற்று இயங்கியவன் அசோக் போர்களாலும், ஆக்கிரமிப்புகளாலும், பட்டினி யாலும், வளங்களை சூறையாடுவதன் மூலமும், உழைப்பை உறிஞ்சுவதன் மூலமும் ஏகாதிபத்தி யம் உலக மக்களை வஞ்சிக்கிறது. ஆதிக்கப் போரினை தொடர்ந்து முன்னெடுத்து வரு கிறது. அமைதிக்கும், சமாதானத்திற்கும், சக  வாழ்விற்கும் சோசலிசமே மாற்று மாமருந்தாக இருக்க முடியும் என சோசலிச கருத்தால் ஈர்க்க ப்பட்ட தோழனாக திகழ்ந்தான் அசோக். வறுமை ஒழிப்பு, அனைவருக்கும் கல்வி, வேலை, ஏற்றத் தாழ்வு இல்லாத சமூக அமைப்புக்காக ஏங்கித் தவிக்கும் இளைஞர்களிடத்தில் சோசலிசத்தை பிரச்சாரமாக முன் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் உருவெடுத்துள்ள நிலையில், அசோக்கின் தியாகம், போராட்டம், உறுதி, நம்மை இன்னும் உரமேற்றுகிறது.

கடைசிப் பலியாக இருக்கட்டும்! ‘'

சாதி வெறிக்கு கடைசி பலி என் மகனாக இருக்க வேண்டும்’ என அசோக்கின் தாயார் தோழர் ஆவுடையம்மாள் கூறிய வலி மிகுந்த, ரத்தம் தோய்த்தெடுத்த வரிகள் நம்மை சுழன்றடிக்கிறது. இந்த ஐந்து ஆண்டுகளிலும் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தோழர் ஆவுடையம்மாளை அனைவரும் பார்த்திருக்க முடியும். அவர் அதற்காக காத்து நிற்கிறார். அடுத்து பார்த்துவிட்டோம்,  நரம்புகள் வெட்டப்பட்டு வீடெங்கும் ரத்தக் காடாக மாறிய நிலத்தில், சின்னத்துரை மரணத்தை தொட்டு  விட்டு மீண்டு வந்தான். கபடியில் வென்ற வனை ஏற்க முடியாத சினம் கொண்ட கூட்டம் தலையில் வெட்டியதில் வீழ்ந்து, எழுந்து நிற் கிறான் தேவேந்திரபூபதி. எல்லாம் சரியாகத் தான் நடக்கிறது என்று சபையின் நாயகர் சொன்னது காதில் பூ சுற்றும் வேலை என்பது எல்லோருக்கும் தெரிந்த ரகசியம் தான். கொடு மைகளை நிரூபிக்க கடைசியில் சென்று நிற்கும் நீதித் துறையோ, தாமதம் எனும் சாதகச் சூழலை குற்றவாளிகளுக்கு தாராளமாக வழங்குகிறது. ஆறெழு வருடங்களில் நடந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட வழக்குகளில் விரல் விட்டு எண்ணும் அளவிற்குத் தான் நீதி வழங்கப்பட்டு இருக்கிறது. கல்பனா கொலை வழக்கு, கிருஷ்ணவேணி மீதான கொலைவெறி தாக்குதல், உடப்பன்குளம் மூன்று இளைஞர் படுகொலை வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. வழக்குகளை எதிர்கொள்வது அசாத்தியமான காரியமாக உள்ளது. சாட்சிகள்  விலை பேசப்படுவது, சாட்சிகளை அச்சுறுத்து வது ஆகியவற்றைத் தாண்டி நீதி கிடைக்க பெரும் பிரயத்தனங்களை செய்ய வேண்டியுள்ளது. விரைவு நீதிமன்றங்கள் மெதுவாக மிக மெது வாக செயல்படுகின்றன.  ஆண்டுதோறும் நாடு முழுக்க முப்பதாயிரம் ஆணவக் கொலைகள் நடப்பதாக தெரிகிறது. இதனை தடுக்க இன்னமும் சட்டம் இல்லாத நிலை உள்ளது. இருக்கும் சட்டங்களே போது மானது எனில், ஏன் ஆணவக் கொலைகளை தடுக்க முடியவில்லை எனும் கேள்வி எழுவது இயல்பான ஒன்று தானே. சமூக ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டம் சமூக மாற்றத் திற்கான போராட்டத்தின் பிரிக்க முடியாத அங்கம் என்ற புரிதலில் இருந்து அசோக் தனது  போராட்டங்களை உறுதியோடு முன்னெடுத் தான் என்பது அனைவரும் அறிந்த செய்தி தான். பட்டியல் வெளியேற்றத்திற்கான இயக்கத்தின் பின்னே ஒளிந்திருக்கும் சங் பரிவார அமைப்பு களின் உபசாதி வாக்கு வங்கி மற்றும் சாதிய அணிதிரட்டலுக்கான முயற்சி என்ற முறையில் அதை எதிர்த்து உறுதியோடு களமாடியவன் அசோக். அவனது இரு சக்கர வாகனத்தின் பின்னே எழுதப்பட்ட வாசகம், ‘சாதியற்ற சமூகத்தை நோக்கி’ என்பது தான்.

 புத்தகங்களை நேசித்தவன்

சாதிய அணிதிரட்டல் இளைஞர்களிடத்தில் அதிகரித்து வருகிறது. மத அடிப்படை அணி திரட்டலும் கூடுதலாகி வருகிறது. சாதி, மத அமைப்புகளின் செயல்பாடு திட்டமிட்டு நடந்து  வருகிறது. சமூக நெருக்கடிகள் தீவிரமாகும் போதெல்லாம், பிரச்சனையின் ஊற்றுக் கண்ணில் இருந்து மடைமாற்றம் செய்யும் வகையில் பிற்போக்கு சக்திகள் முன்னுக்கு வரும் போக்கை கண்டு வருகிறோம். ஆன போதி லும் பெரும்பாலான இளைஞர்கள் பாகுபாடு களை, ஒடுக்குமுறைகளை, ஏற்றத்தாழ்வை எதி ர்க்கக் கூடியவர்களாகவே உள்ளனர். சாம்சங் போராட்டம், உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களின் போராட்டம், வெள்ளம் பாதித்த வயநாடு மக்களுக்கு 20 கோடி  நிதி திரட்டிய கேரள வாலிபர் சங்கப் பணிகள் போன்றவை நம்பிக்கை ஊட்டுகின்றன.  அனைத்து தளங்களிலும் செயலூக்கமுள்ள பணிகளை முன்னெடுக்க வேண்டிய, முன் னெடுத்த அசோக்கின் பணிகள் கண்முன்னே நிழலாடுகிறது. சேவைப் பணிகளோடு, சித்தாந்த போராட்டத்தையும், விமர்சன கண்ணோட்டங் களை முன் வைக்கும் போது, மாற்றை முன் வைப்பதும் அவசர அவசியமாகிறது.  வாசிப்பின் மீது அளவற்ற ஆர்வம் கொண்ட வனாக அசோக் திகழ்ந்தான். அதனால் தான், அவனை மண்ணுக்குள் புதைக்கும் போது இரு புத்தகங்களை அவனது உடலின் மீது வைத் தான் சதீஷ். பெருமிதம் கொள்வதற்கு எத்தனை காரியங்கள் நம்முன் உள்ளது. அவனொரு இயற்பியல் மாணவன். இரண்டு நோபல் பரிசு பெற்ற மேரி கியூரி, பிரான்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் என்பதும், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சோசலிஸ்ட் ஆதரவாளர் என்பதும் அவன் வாசித்து உற்சாகம் கொண்ட செய்தி. வீடு முழுக்க அவன் சிறுகச்சிறுக சேகரித்த புத்தகங்கள் அலமாரியில் அடுக்கப்பட்டு இருந்தன.

ஒரு புரட்சியாளனின் கடிதம்

தூக்கு மேடைக்குச் செல்ல வேண்டிய ஒரு நாளுக்கு முன்பாக, 1931 மார்ச் 22 அன்று பகத்சிங் தனது நண்பர்களுக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு எழுதினார்; “என் பெயர் இந்துஸ்தானி புரட்சியின் அடையாளமாக மாறி விட்டது. புரட்சிகரக் கட்சியின் லட்சியங்களும், தியாகங்களும் என்னை மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தி உள்ளன. நான் துணிச்சலுடன் தூக்குமேடைக்குச் செல்வது இந்துஸ்தானி தாய்மார்களை பகத்சிங்கைப் போன்ற குழந்தைகளைப் பெற ஆசைப்பட வைக்கும், மேலும் நாட்டிற்கு தங்கள் உயிரைத் தியாகம் செய்பவர்களின் எண்ணிக்கை மிகவும்  அதிகரிக்கும், ஏகாதிபத்திய சக்திகளோ அல்லது கொடிய சக்திகளோ புரட்சியைக் கட்டுப்படுத்த முடியாது. ஆம், இன்றும் எனக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது, என் நாட்டிற்கும் மனித குலத்திற்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற  என் இதயத்தில் இருந்த ஆசைகளில் ஆயி ரத்தில் ஒரு பங்கு கூட என்னால் நிறைவேற்ற முடியவில்லை. நான் உயிருடன் இருந்திருந் தால் அவற்றை நிறைவேற்ற வாய்ப்பு கிடைத்திருக் கலாம். என் ஆசைகளை நிறைவேற்றி இருப் பேன். இதைத் தவிர வேறு எந்தக் கவலையும் எனக்கு இல்லை. என்னை விட அதிர்ஷ்டசாலி யார் இருக்க முடியும்! இந்த நாட்களில், நான் என்னைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறேன். இப்போது நான் இறுதி நிமிடங்களுக்கு ஆர்வத்தோடு காத்திருக்கிறேன். அது நெருங்கி வர வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்”.  உயிரையே கொடுத்த பிறகும் தான் எதுவும்  செய்யவில்லை என்ற எண்ணம் கொண்ட பகத்சிங், புரட்சிக்காரனின் மகத்தான அடையாளம்.  

வர்க்கப் போராளியாக மாறிய ஒப்பந்தத் தொழிலாளி

கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள  பன்னாட்டு நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளி யாக வேலை செய்தான் அசோக். தன் சொந்த அனுபவத்தில் இருந்து வேலையின்மைப் பிரச்சனையை புரிந்து கொண்டான். தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியின்மை, விவசாய நெருக்கடி அனைத்தும் சமூக மோத லுக்கு அடிப்படைக் காரணங்களாக உள்ளன. ஐந்தில் நான்கு பேர் ஒப்பந்தத் தொழிலாளி களாக நிறுவனங்களில் வேலை செய்யும் அவலம் அதிகரித்து வருகிறது. வேலை எனும் முழக்கத்தை முன்வைத்து வாலிபர் இயக்கம் இயக்கங்களை முன் எடுத்து  வருகிறது. இந்நிலையில் வேலை நேர அதிகரிப்புச்  சட்டங்கள் அமலாகி வருகின்றன.  இதனை எதிர்த்து அசோக்கின் தியாகச்சுவடு களை அடியொற்றி போராட்டப் பாரம்பரியத்தை முன் எடுக்க சபதமேற்க வேண்டும். கடுமை யான, சிரமமான பணி. இதோ பகத்சிங் வழிகாட்டிச் சென்றிருக்கிறார்: ‘‘உண்மையான மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான பணி எளிதான காரியமல்ல. அதற்கு தொடர்ச்சியான போராட்டம், துன்பம் மற்றும் தியாகம் நிறைந்த வாழ்க்கை தேவை.  நீங்கள் அங்குலம் அங்குலமாக முன்னேற வேண்டும். அதற்கு தைரியம், விடாமுயற்சி மற்றும் மிகவும் வலுவான உறுதிப்பாடு தேவை. எந்த சிரமங்களும், எந்த கஷ்டங்களும், தோல்விகளும், துரோகங்களும் உங்களை சோர்வடையச் செய்யாது. உங்கள் மீது சுமத்தப்படும் எந்த வேதனையும் உங்களின் புரட்சிகர விருப்பத்தை நசுக்காது. துன்பங்கள் மற்றும் தியாகங்களின் சோதனையின் மூலம் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். மேலும் இந்த தனிப்பட்ட வெற்றிகள் புரட்சியின் மதிப்புமிக்க சொத்துக்களாக இருக்கும்” என்றார் பகத்சிங். ஆம், அசோக் புரட்சிகர இயக்கத்தின் மதிப்புவாய்ந்த சொத்து. சமரசமற்ற, தீரமிக்க போராளி தோழன் அசோக்.