articles

img

பிரதமர் மோடியின் .. திக் .. திக் அந்த இருபது நிமிடங்கள் விவரிக்க முடியாத பதற்றம் - ஹரிஷ் காரே

வயர் இணைய இதழ்

2022 ஜனவரி 09

Harish Khare

ஃபெரோஸ்பூர் மேம்பாலத்தில் இருந்த அந்த இருபது நிமிடங்கள் இந்தியாவின் பிரதமரின் அலுவலகத்தைச் சென்றடைந்துள்ள ஆகப் பெரிய தெருப் போராளியின் அடிவயிற்றைக் கலக்கியுள்ளன. சத்யபால் மாலிக்கிடம் அமித் ஷா கூறியவாறு அவர் தனது சுயநினைவை இழந்து விட்டதாகவே தெரிகிறது. அது ஏற்கனவே அதிக சூடுபிடித்திருக்கும் நமது அரசியலுக்கு நல்லதல்ல.

நரேந்திர மோடி ஒன்றும் நாகரிக ஜனநாயகத்தின் பண்பாடுகள், நடத்தைகளைக் கடைப்பிடித்து நாட்டின் பிரதமராகி விடவில்லை என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். கூட்டத்தை உற்சாகப்படுத்துவது, கும்பலைத் தூண்டுவது என்று தனக்கிருந்த திறமையைக் கொண்டே அவர் தனது சொந்தக் கட்சியின் தலைமை இடத்தைச் சென்றடைந்தார். அத்தகைய போக்கே அவரை ஹிந்து வலதுசாரி தளத்தில் ‘மறைமுகப் பெரும்பான்மை’ கொண்டவராக முடிவுக்குக் கொண்டு வந்தது. சந்தேகத்திற்கு இடமில்லாது திட்டமிடப்பட்டதாக அவரிடமிருந்த அந்த முரட்டுத்தனமே எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா சுவராஜ், நிதின் கட்கரி போன்ற 'பாரம்பரிய' மூத்த பாஜக தலைவர்களைத் தடுமாறச் செய்தது. பாஜகவில் இருந்த முக்கியமானவர்களுக்கு அப்பால் மன்மோகன் சிங் அல்லது அடல் பிஹாரி வாஜ்பாயி போன்றவர்களின் கண்ணியமான பிம்பத்திற்கு முற்றிலும் மாறாக மோடியிடமிருந்த கரடுமுரடான தன்மை வரவேற்கத்தக்க வகையிலே உடல்ரீதியான பலமாகக் காட்டப்பட்டது.   

ஆனாலும் நிச்சயமற்றவராக, பயத்தில் உறைந்து போன மனிதராக புதியதொரு நரேந்திர மோடியை ஃபெரோஸ்பூர் மேம்பாலத்தில் அவர் இருந்த அந்த இருபது நிமிடங்கள் நமக்கு இப்போது வெளிப்படுத்திக் காட்டியுள்ளன.    

மோடி இன்னும் பத்து வயது இளையவராக இருந்திருப்பாரேயானால், அவர் தைரியமான இரண்டு எதிர்வினைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்திருப்பார் என்றே நம்பலாம். முதலில் தனது காரை விட்டு வெளியே வந்து, சாலை மறியல் செய்து கொண்டிருந்த விவசாயிகளிடம் நடந்து சென்று, அவர்களுடன் எவ்விதச் சிரமமுமின்றி அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பார். அனைவரின் மனதில் அவரைப் பதியச் செய்யும் வகையிலே தொலைக்காட்சிக் காட்சிகளை அது உருவாக்கிக் கொடுத்திருக்கும். அவர் அடிக்கடி பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறி, தன்னை வணங்கி நிற்கின்ற வெகுஜன மக்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்பவராகவே இருந்திருக்கிறார். எனவே போராட்டக்காரர்கள் எந்த வகையிலும் அச்சுறுத்துவதாகவோ அல்லது வன்முறையில் ஈடுபடுவதாகவோ இருந்திராத நிலையில் அதுபோன்று அவர் நடந்து கொண்டிருந்தால் பாதகமான சூழ்நிலையிலும் தயங்காத துணிச்சலான தலைவர் என்று அவர் அடையாளம் காணப்பட்டிருப்பார்.  

அவ்வாறாக இல்லையெனில் அதற்கு மாறாக தனது அலுவலகத்தின் முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி, ஒன்றிய உள்துறை அமைச்சரை அழைத்து, மத்தியப் படைகளை (சில கிலோமீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த) விரைந்து வந்து தன்னுடைய வழியிலிருந்து போராடிக் கொண்டிருந்த விவசாயிகளை அகற்றுவதற்கான உத்தரவை பிரதமர் கொடுத்திருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் அதிகாரம் மிக்க அரசின் ஆற்றல் மிக்க பிரதமர் ஓரிடத்தைக் கடந்து செல்லும் உரிமையை யாரும் அவருக்கு மறுத்து விட முடியாது என்ற எளிய செய்தியை அவர் அனைவருக்கும் உறுதிப்படுத்திக் காட்டியிருப்பார். பயமில்லாத துணிச்சலான அந்தப் பிரதமர் அமைதியாகப் போராடுகின்ற விவசாயிகளிடம் மாட்டிக் கொண்டவராக தான் காணப்படுவதை ஒருபோதும் அனுமதித்திருக்க மாட்டார்.     

ஆனால் அப்படியெல்லாம் எதுவும் செய்து விடாமல் கேமரா, நாடகம் மீது எப்போதும் கண் வைத்திருக்கும் அந்த மனிதர் தன்னுடைய காருக்குள்ளேயே உறைந்து போய் அசையாமல் அமர்ந்திருந்தார்.

ஃபெரோஸ்பூர் பேரணிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தளத்தில் -பல்லாயிரக்கணக்கான காலி நாற்காலிகளுடன் 3,032 பேருக்கு மேல் அங்கே கூடியிருக்கவில்லை என்று உள்ளூர் உளவுத்துறை அறிக்கை தெரிவிக்கிறது - மிகப் பரிதாபகரமான எண்ணிக்கையில் மிகக் குறைவான எண்ணிக்கையில்  கூடியிருந்த கூட்டத்தைப் பற்றி அவருக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கும் என்பதை அனுமானிப்பது தர்க்கரீதியான சாத்தியம் கொண்டதாகவே இருக்கிறது. பஞ்சாபை திரும்பப் பெற்றுக் கொள்ளும் நோக்கத்துடன் அஸ்வமேத யாகத்தின் நவீன அமலாக்கமாகவே பாஜகவால் அந்தப் பேரணி திட்டமிடப்பட்டிருந்தது. பேரணி ஏற்பாட்டாளர்களின் வசம் நாட்டிலேயே மிகப் பெரிய பணக்கார அரசியல் கட்சியின் அனைத்து வளங்களும் இருந்தன. மிக மோசமான மூன்று வேளாண் சட்டங்கள் நீக்கப்பட்டாலும், யாராலும் வெல்ல முடியாத நரேந்திர மோடி இன்னும் யாருக்கும் தலைவணங்காதவராக இருக்கிறார்; பஞ்சாபிற்கு நேரில் வந்து, கூட்டத்தைத் தன்வசப்படுத்துகின்றவராக தான் இன்னும் இருப்பதைக் காட்டுவார் என்பதை பஞ்சாப் மற்றும் நாட்டின் பிற மக்களுக்குச் சொல்கின்ற வகையிலே அவர்களுடைய நோக்கம் மிகவும் வெளிப்படையாக தெளிவாகவே இருந்தது. ஆனால் அந்த திட்டம் மிகவும் தவறுதலாகச் சென்று, நம்பிக்கையிழக்கச் செய்யும் பதற்றமான தருணத்தையே அவர்களுக்கு உருவாக்கிக் கொடுத்தது. என்றும் தனக்கான வழியில் சென்ற அந்த மனிதர் தன்னுடைய தோல்வியால் எழுந்த பயத்தை நிச்சயம் அன்று உணர்ந்திருப்பார். 

அந்த ஃபெரோஸ்பூர் நாடகம் மிகப் பெரிய உள்ளடக்கம் கொண்டிருந்தது. கட்டற்ற அரசு அதிகாரத்தின் உச்சத்தில் ஏழு ஆண்டுகள் எதிர்ப்புகள் எதுவுமின்றி செலுத்தி வந்த மேலாதிக்கம் பிரதமரிடம் தெய்வீக உரிமைக்கான உணர்வை வளர்த்தெடுத்துள்ளது. அது பாதுகாப்பு, உளவுத்துறை மூத்த அதிகாரிகளிடையிலும் பொறுப்பற்ற மெத்தனத்தை உருவாக்கியுள்ளது. பெரும்பாலும் அமைச்சர்கள், பிரதமர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுபவர்களே அரசியல்வாதிகளின் பாதுகாப்புக் கவசத்தில் ஏற்பட்டிருக்கும் ஓட்டைகளை முதலில் கண்டறிபவர்களாக இருப்பார்கள் எனும் போது, மோடியின் விஷயத்தில் விளக்குவதற்குத் தேவையான மர்மம் அதிகம் இருக்கவில்லை.      

தன்னம்பிக்கை, சுயதிருப்தி கொண்ட அந்த மனிதர் எந்தவொரு குறையையும், குறைபாட்டையும், தோல்வியையும் ஒப்புக் கொள்ளாதவராகவே இருந்திருக்கிறார். தாங்கள் செய்வது எந்த அளவிற்கு  முட்டாள்தனமாக இருந்தாலும், தங்களுடைய தலைவர் எப்போதும் தங்களை (குறைந்தபட்சம் பொதுவெளியில்) பாதுகாப்பார் என்பது அதிகாரிகளுக்குத் தெரியும். ஜனநாயக அரங்கில் தன்னை ஒன்றுமறியாதவர் என்று ஊகிக்க அவர் எவரையும் அனுமதிக்க மாட்டார். தவறிழைக்காதவர் என்ற இத்தகைய உணர்வே  அதிகாரிகள், ராணுவத் தளபதிகள், உளவுத்துறைத் தலைவர்கள் தப்பித்துக் கொள்வதற்கான பாதுகாப்பையும் வழங்கியுள்ளது.     

ஃபெரோஸ்பூர் மேம்பாலத்தில் அவர் இருந்த அந்த இருபது நிமிடங்களுக்குப் பிறகு இருபத்திநான்கு மணி நேரத்திற்குள்ளாகவே, ஓய்வு பெற்ற மூத்த காவல்துறை அதிகாரிகள் குழு ஒன்று - அவர்களில் பலரும் தமக்கு வேலையற்ற வேலைகள் அளிக்கப்படும் என்று நம்புகிறவர்கள் - அந்த சம்பவத்தின் பின்னணியில் சதி இருக்கிறது என்று முடிவு செய்திருந்தனர். தங்களது அறிக்கையில் ‘பிரதமரைச் சங்கடப்படுத்துவதற்காக, அவருக்கு தீங்கு விளைவிப்பதற்காக போராட்டக்காரர்கள் என்று அழைக்கப்படுபவர்களுடன் மாநில அரசு இயந்திரம் செய்து கொண்டிருந்த கூட்டின் வெட்கக்கேடான வெளிப்படையான காட்சியாகவே அது இருந்தது’ என்று அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.   

பொறுப்பான பதவிகளில் இருந்திருந்த அந்த அதிகாரிகள் இவ்வாறான பொதுப்படையான தீர்ப்பை வழங்குவதை விடுத்து நடந்தவற்றை நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களுடைய பெருமூச்சு தவறாக வழிநடத்தப்பட்ட பாரபட்சம் மற்றும் விசுவாசத்தால் உருவானது என்பது வெளிப்படையாகவே தெரிந்தது. வயது முதிர்ந்து கொண்டிருக்கும் சக்கரவர்த்தி ஒருவரின் பாதுகாப்பின்மை உணர்வை, சித்தப்பிரமையைத் தூண்டுகின்ற வகையில் அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஒரு வகையான குடிசைத் தொழில் நாட்டில் இப்போது தோன்றியிருப்பதாகவே தெரிகிறது.  

மிகவும் கவர்ச்சியான தலைவர்கள் கூட தங்கள் தோற்றங்களை பொதுவெளிக்காக வடிவமைத்துக் கொள்வதற்கு அதிக கவனம் செலுத்துகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. வடிவமைக்கப்படாத நெருக்கடியான தருணங்களில் மட்டுமே ஒரு தலைவனின் குணமும், திறமையும் உண்மையில் சோதித்து அறியப்படுவதாக இருக்கும்.  

தான் தங்கியிருந்த பிரைட்டன் கிராண்ட் ஹோட்டல் மீது 1984ஆம் ஆண்டு ஐரிஷ் குடியரசு ராணுவம் நடத்திய குண்டுவெடிப்பை மார்கரெட் தாட்சர் ‘டவுனிங் ஸ்ட்ரீட் நினைவுக் குறிப்புகள்’ என்ற தன்னுடைய நூலில் நினைவு கூர்ந்திருந்தார். அப்போது ஆண்டுதோறும் நடைபெறுகின்ற கன்சர்வேடிவ் கட்சி கூட்டத்தில் தன்னுடைய திட்டமிடப்பட்ட உரையை ஆற்றி முடித்தார் ‘இது தொழிலாளர்களைத் தாக்கும் நேரம் அல்ல, மாறாக ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்குத் தேவையான ஒற்றுமைக்கான நேரம்’ என்பதால் வரைவில் இருந்த அனைத்து பாரபட்சமான பகுதிகளைத் தான் நீக்கியதாகவும் அவர் அந்த நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.  

தாட்சரிடமிருந்த பெருந்தன்மை, நிதானத்தை பஞ்சாப் முதலமைச்சரை நோக்கி பிரதமர் வைத்த தகுதியற்ற குற்றச்சாட்டுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அவ்வாறு பேசிய அந்த ஒரே நொடியில், பொறுப்பான தேசியத் தலைவராக பிரதமர் முதிர்ச்சியடைந்து விட்டார் என்று இன்னும் நம்பிக் கொண்டிருப்பவர்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தையே மோடி உருவாக்கியுள்ளார். விரும்பத்தகாத அந்த பாரபட்சம் ஒருவரிடமிருந்து வருகிறது. பாரபட்சம் கொண்ட அந்த நபரை உலக அளவில் உயர்ந்த நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் அரசியல்வாதியாக  நாம் நம்ப வேண்டும் என்று அவரது கூட்டாளிகள் விரும்புவது உண்மையில் ஆச்சரியம் தருவதாகவே இருக்கிறது.   

இத்தகைய தனிப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அப்பால் ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்தை பிரதமருக்கு எதிராக நிறுத்துவதற்கான தந்திரமும் அவர்களிடம் இருந்து வருகிறது. ஹிந்து நலன்களுக்கு விரோதமான வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதலின் கீழ், சீக்கிய கூறுபாடுகளைக் கொண்டு தீட்டப்பட்ட சதியைக் கண்டறிய தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அவர்கள்  தொடர்ந்து கூறி வருகின்றனர். உத்தரப்பிரதேசம், உத்தரகாண்டில் தள்ளாடிக் கொண்டிருக்கின்ற ஹிந்து வாக்கு வங்கியை ஒருங்கிணைக்க வேண்டிய மோடியின் தேவையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் சீக்கியர்களை இவ்வாறு மற்றவர்களாக வேறுபடுத்திக் காண்பிக்க அவர்கள் மேற்கொள்ளும் முயற்சி நிச்சயம் தேசியப் பேரிடரை உருவாக்குகின்ற செயலாகவே இருக்கும்.   

https://thewire.in/politics/narendra-modi-nervous-punjab-flyover

 

நன்றி: வயர் இணைய இதழ்

தமிழில்: தா.சந்திரகுரு