1970ஆம் ஆண்டு மே மாதம் சோஷலிச யதார்த்தவாத கோட்பாடுக ளுக்காக செம்மலர் என்கிற இலக்கிய இதழ் உதயமானது. அதன் ஆசிரியராக எழுத்தாளர் கு.சின்னப்பபாரதி இருந்தார். தோழர் கே. முத்தையா அவரோடு உடனிருந்தார். புதிதாக உரு வாகியிருந்த செம்மலர் ஏட்டில் பல எழுத்தாளர்கள் எழுதத் தொடங்கினார்கள். அதில் கணிசமானவர்கள் புதியவர்கள். ஆண்டுகள் ஓடியது. 1974ஆம் ஆண்டு நவம்பர் 23, 24 தேதிகளில் அன்றைய மதுரை திடீர் நகரில் உள்ள சிஐடியு போக்குவரத்து தொழிலா ளர்கள் சங்கக் கட்டிடத்தில் செம்மலரில் எழுதிக் கொண்டிருந்த 35எழுத்தாளர்கள் ஒன்று கூடினார்கள். சோஷலிச யதார்த்தவாதம் தொடங்கி, அன்றைக்கு நிலவிவந்த இலக்கியப் போக்குகள் வரை விவா தங்கள் நடைபெற்றன. கூட்டத்தில் பங்கேற்றிருந்த விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என்.சங்க ரய்யா நிறைவாக “இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பு சிருஷ்டிக்கப்பட்ட கலை இலக்கியத்திற்கும் நாம் தான் வாரிசுகள். அதை நாம் தான் தன் வயப்படுத்திக்கொள்ள வேண்டும். முற்போக்கு இடதுசாரி மற்றும் ஜனநாயகத்தன்மை கொண்ட அத்தனை எழுத்தாளர்களையும் கொண்டு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஏற்படுத்த வேண்டிய கட்டம் வந்துவிட்டது. நாம் ஒரு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கலாம்” என்கிற தனது ஆலோசனையை முன்வைத்தார். அந்த ஆலோ சனையை கூட்டம் ஏற்றுக்கொண்டதோடு உற்சா கத்தோடு கலைந்து சென்றது.
ஒடுக்குமுறையில் பிறந்த தலைமுறை
1975 இந்திய நாடு அதுவரை சந்திக்காத அரசியல் புறச் சூழலை சந்திக்கத் தொடங்கியது. அன்றைய பிரதமர் இந்திராகாந்தி ஜூன்25 அன்று இந்திய நாடு முழுவதும் நெருக்கடி நிலையை அமலாக்கினார். நாடு முழுவதும் எழுத்தும், பேச்சும், கருத்தும் ஒடுக்கப்பட்ட சில நாட்களிலேயே அதே எழுத்து, பேச்சு, கருத்துரிமைக்காக 1975 ஜூன் 12, 13 தேதிகளில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் சங்கம் மதுரையில் உதயமானது. அதே மாநாட்டில் எழுத்தாளர் சிகரம் செந்தில்நாதன் தலைமையில் சென்னையில் இயங்கிவந்த மக்கள் எழுத்தாளர் சங்கமும் தன்னை தமுஎசவோடு இணைத்துக் கொண்டது. எழுத்தாளர்கள் கு.சின்னப்பபாரதி, டி.செல்வராஜ், தணிகைச்செல்வன் தலைமை யில் நடைபெற்ற அம்மாநாட்டில் முதல் பொதுச்செய லாளராக தோழர் கே.முத்தையா அவர்களும், துணைச்செயலாளர்களாக கு.சின்னப்பபாரதி, இரா.கதிரேசன் (அருணன்), ச.செந்தில்நாதன் ஆகியோ ரும், பொருளாளராக தி.வரதராஜன் அவர்களும் தேர்வு செய்யப்பட்டார்கள். அதன் பின் தமுஎச தமிழ் எழுத்து உலகில் கருத்துக்களில் மட்டுமல்ல, வடிவில் அழகியல் நேர்த்தியோடு படைப்புகளை, படைப்பாளர்களை நூற்றுக்கணக்கில் உருவாக்கி யது.
கருத்துரிமைக்கான முதல் குரலாக
1987ஆம் ஆண்டு ஆனந்த விகடன் ஆசிரியரை ஒரு கார்ட்டூனுக்காக சட்டமன்றத் தீர்மானம் போட்டு கைது செய்தது தமிழக அரசு. அமைச்சர்களை விமர்சித்து சினிமா எடுக்கக்கூடாது என்று சூப்பர் தணிக்கை சட்டம் ஒன்றை நிறைவேற்றியது. அப் போதுவரை முதல்வராக பத்து ஆண்டுகளுக்கும் மேலிருந்த எம்.ஜி.ஆர் அவர்களைக் கண்டு திரை யுலகம் தொடங்கி ஊடகங்கள் வரை எல்லோரும் அஞ்சி மௌனம் காத்தன. முதல் குரலாக ஒரு கலை இலக்கிய அமைப்பாக தமுஎச களம் கண்டது. மதுரை ரீகல் திரையரங்கமே நிரம்பி வழியக் கண்ட னக்கூட்டம் நடத்தியது. தீபம் நா.பார்த்தசாரதி, கோமல் சுவாமிநாதன் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்ற னர். ஜுலை 12 ஆம் நாள் சென்னை வாணி மகாலில் திரைப்படக்கலைப் பாதுகாப்பு மாநாடு நடத்தப் பட்டது. அந்த மாநாட்டுக்கு முன்பாக ஊர்வலம் நடை பெற்றது. தமுஎச வரலாற்றின் முதல் ஊர்வலம் அது. அந்த ஊர்வலமும் கருத்துரிமைக்கானது. சூப்பர் தணிக்கை மசோதாவை எதிர்த்து 1987 செப்டம்பர் 29 அன்று 30 நகரங்களில் உண்ணாநிலைப் போராட்டமும் நடைபெற்றது. முடிவில் அம்மசோதா விலக்கிக்கொள்ளப்பட்டது.
1992 டிசம்பர் 6 அயோத்தியில் இந்துத்துவ பயங்கர வாதிகள் பாபர் மசூதியை இடித்தனர். அதனைத் தொடர்ந்து தமுஎச தமிழகமெங்கும் மக்கள் ஒற்று மைக் கலை இரவுகளை நடத்தியது. நான்கு மாதங்க ளில் 37 கலை இரவுகளை நடத்தியது. அருணன் எழுதிய “மதங்களுக்கு மதமா..?” என்கிற சிறுநூல் ஆயிரக்கணக்கில் மக்களிடம் எடுத்துச்செல்லப் பட்டது. “கடவுளின் பெயரால் கலவரம் வேண்டாம்” என்கிற வாசகம் தாங்கிய சுவரொட்டிகளை வீடு வீடாக ஒட்டும் இயக்கத்தை தமுஎச நடத்தியது.
1993 செப்டம்பர் 13ஆம் தேதி சென்னை திருவல்லிக் கேணியில் தமுஎச நடத்திய பாரதி விழாவில் இந்துத் துவ குண்டர்கள் அர்ஜுன் சம்பத் தலைமையில் தோ ழர்களைத் தாக்கி நூல்களைக் கிழித்தெறிந்தார்கள். தமுஎச மீதான முதல் நேரடி வன்முறை இதுவே. கலை இரவுகளின் சக்தியைக்கண்டு அஞ்சிய மதவாத சக்திகள் கலை இரவுகளை இடையூறு செய்வது பல இடங்களில் அதனைத் தொடர்ந்து நடந்தது. ஆனால் கலை இரவுகள் ஓயவில்லை. மதவாதிகள் தான் ஒன்றும் செய்யமுடியாமல் ஓய்ந்து போனார்கள்.
1998 ஜுலை 1 அன்று “தமிழைச்செம்மொழியாக அறிவிக்கக்கோரி “தமிழுக்கு நீதி கேட்டுத் தலை நகரில் பேரணி” என்கிற முழக்கத்தோடு சென்னை யில் பேரணியும் நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சி யாக தில்லியில் தமிழுக்கு நீதி கேட்டு பேரணி நடை பெற்றது. தமிழகத்திலிருந்து ரயில் மூலம் 224 தோழர்கள் தில்லி சென்று 2000 ஆகஸ்ட் 19 அன்று பேரணி நடத்தி பிரதமரையும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரையும் சந்தித்து தமுஎச சார்பாக மனு கொடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக புதிய அரசு தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் வழங்கியது.
ஜெயலலிதா அரசின் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம், ஆடு,கோழி வெட்டத்தடைச்சட்டம் இரண்டை யும் எதிர்த்து தமிழகம் முழுவதும் 2002-2003 ஆண்டில் கண்டன இயக்கங்கள், கலை இரவுகள் என்று பல்வேறு வடிவங்களில் தமுஎச இயக்கங்க ளை நடத்தியது. முடிவில் இரு சட்டங்களையும் தமிழக அரசு திரும்பப்பெற்றது.
2015இல் எழுத்தாளர் பெருமாள் முருகனின் நாவ லுக்காக மதவாத சக்திகளும் சாதிய அமைப்புகளும் இணைந்து அவர்மீது தாக்குதல் தொடுத்தபோது கருத்துரிமைப்போராக அதை தமுஎகச நடத்தியது. அவருக்கு ஆதரவாக தமுஎகச சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத்தொடுத்து வெற்றியும் கண்டது. வழக்கின் தீர்ப்பைத் தமிழாக்கம் செய்து வழக்கு எண் 1215/2015 என்கிற நூலாகவும் வெளியிட்டுள்ளது. இது கருத்துரிமைக்கு எதிரான போரில் பெற்ற வெற்றிகளுள் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
இன்றைக்கு வரை எந்த எழுத்தாளர்களோ, கலை ஞர்களோ மட்டுமல்ல கருத்துரிமைக்கான போராட் டத்தில் இருக்கும் ஒவ்வொரு மனிதனுக்குப் பின்னா லும் அவருக்கான ஆதரவுக்குரலாக தமுஎகச நிற்கிறது.
ஒவ்வொரு மாநாடும் ஒரு படி முன்னே
தமுஎசவின் ஒவ்வொரு மாநாடும் ஒவ்வொரு படியாக அமைப்பை வளர்த்துள்ளது. 1978 ஜூன் 24, 25 தேதிகளில் கோவையில் நடைபெற்ற இரண்டா வது மாநாடு அமைப்பு விதியில் முதல் திருத்தத்தை கொண்டுவந்தது. அதுவரை எழுத்தாளர்கள் மட்டுமே இருந்த அமைப்பு கலை இலக்கிய ஆர்வலர்களையும் கொண்ட அமைப்பாக பரிணமித்தது. 1981இல் சென் னையில் மூன்றாவது மாநாடு நடைபெற்றது. 1987இல் திருச்சியில் நடைபெற்ற நான்காவது மாநாடு கலைஞர்க ளின் சங்கமமானது. நெல்லையில் நடைபெற்ற ஐந்தாவது மாநாடு நாட்டுப்புறக் கலைஞர்களின் நுழைவாயில் ஆனதோடு, ஊடகங்கள் தமுஎசவை ஜோல்னா பை சங்கம் என்று அழைக்கும் அளவிற்கு தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்றானது.
பாபர் மசூதி இடிப்பிற்கு பிறகு சென்னையில் நடை பெற்ற ஆறாவது மாநாடு மத ஒற்றுமைக்கான மாநாடாக நடைபெற்றது. ஏழாவது மாநாடு திருப்ப ரங்குன்றத்தில் மாபெரும் கலை இலக்கிய கொண் டாட்டமாக இளைஞர்களின் திருவிழாவாக நடை பெற்றது. கோவையில் நடைபெற்ற எட்டாவது மாநாடு வெள்ளிவிழா மாநாடாக நடந்ததோடு பின்நவீனத்து வத்திற்கு எதிராக தமிழ் எழுத்துலகிற்கு ஆழமான புரிதலை உருவாக்கிய மாநாடாக அமைந்தது. குஜராத் படுகொலை களுக்குப் பின்னால் பாசிச எதிர்ப்பின் குரலாக ஒன்பதாவது மாநாடு கடலூரில் நடைபெற்றது. தமிழ்ச் சமூகத்திற்கு என்று முற்போக்குப் பண் பாட்டை நமது மாற்றுப்பண்பாடாக முன்னிறுத்தி பத்தாவது மாநாடு திருவண்ணாமலையில் மிகுந்த கலைநேர்த்தியோடு நடைபெற்றது.
கலைஞர்களை அமைப்பில் இணைத்தி ருந்தாலும் பெயரிலும் அதை இணைக்கும் வண்ணம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் எனும் பெயரை முடிவு செய்த பதினோராவது மாநாடு சென்னையில் நடைபெற்றது. இருபதாயிரம் உறுப்பினர்களை அமைப்பு தாண்டியதோடு புத்தகத் தேர் தொடங்கி பன்றிக்கறி உணவு வரை புதிய எழுச்சியோடு பன்னிரண்டாவது மாநாடு விருதுநகரில் நடை பெற்றது. “முற்போக்குத் தமிழ்மரபை முன்னெ டுப்போம், மனுதர்ம தந்திரத்தை முறியடிப்போம்” என்ற முழக்கத்தோடு பதிமூன்றாம் மாநாடு திருப்பூரில் முரசரைந்தது. “சாதியற்ற தமிழர் காவியற்ற தமிழகம்” என்ற முழக்கத்தோடு பதினான்காவது மாநாடு புதுச்சேரியில் உரிமைக்கான குரலாக நடைபெற்றது.
“தனித்துவம் நமது உரிமை, பன்மைத்துவம் நமது வலிமை” என்ற முழக்கத்தோடு, அமைப்பில் 33% எல்லா நிலைகளிலும் பெண் தோழர்களை தேர்வு செய்து பதினைந்தாவது மாநாட்டை குமரியில் நடத்திய தமுஎகச தற்போது தனது பொன்விழா நுழை வாயிலாக “படைப்பு-பண்பாடு-கருத்துரிமை” என்ற முழக்கங்களோடு பறையடித்து முன்னேறுகிறது.
சிறப்பு மாநாடுகள் ஒவ்வொன்றும் சிறப்பு
1994 ஏப்ரல் 24ஆம் நாள் அன்னைத்தமிழுக்கு உரிய மதிப்புக்கோரி சென்னையில் “தமிழ் வளர்ச்சி-பண்பாட்டுப் பாதுகாப்பு மாநாடு” ஒன்றை தமுஎச நடத்தியது. தமிழ் மொழி வளர்ச்சிக்கான 17 கோரிக்கைகளை இம்மாநாடு வடித்தெடுத்தது.
தர்மபுரி இளவரசன் - திவ்யா சாதிமறுப்புத் திருமணத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் சாதி மறுப்புத் திருமணங்களுக்கு எதிராக தலித் அல்லா தோர் கூட்டமைப்புகள் உருவாகிக் கொண்டிருந்த போது, அதே வடதமிழகத்தில் உள்ள கடலூரில் “சாதி மறுப்பில் காதல்” என்கிற தலைப்பில் 2013 ஜனவரி 6ஆம் நாள் சிறப்பு மாநாடு ஒன்றை தமுஎகச நடத்தியது.
தமிழக பண்பாட்டுச்சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங் களை முன் நிறுத்தி 2013 ஆகஸ்ட் 17,18 தேதிகளில் தூத்துக்குடி நகரில் “பண்பாட்டுச்சூழல் சிறப்பு மாநாடு” ஒன்றை நடத்தி அதில் வாசிக்கப்பட்ட ஆய்வு ரைகளை நூலாக தமுஎகச வெளியிட்டது.
2015 நவம்பர் 29இல் தமுஎகசவின் 40ஆவது ஆண்டு நிறைவு சிறப்பு மாநாட்டை மதுரையில் முதல் மாநாடு நடந்த அதே தமுக்கம் கலை அரங்கில் நடத்தியது.
2014 ஆம் ஆண்டு ஒன்றியத்தில் உருவாகியிருந்த பாஜக அரசு தமிழுக்கும், தமிழர்களுக்கும் எதிராகச் செயல்படும் சூழலில், தமிழர் உரிமை மாநாடு களை நெல்லையிலும் மதுரையிலும் நடத்திவிட்டு நிறைவாக சென்னையில் 2017 ஜூன் 26 ஆம் தேதி பிரம்மாண்டமான முழுநாள் மாநாடு ஒன்றை தமுஎகச நடத்தியது.
ஒன்றிய மற்றும் அன்றைய மாநில அரசின் கருத்துரிமைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்து 2018 அக்டோபர் 18இல் கருத்துரிமை சிறப்பு மாநாடு ஒன்றை சென்னை காமராஜர் அரங்கில் தமுஎகச நடத்தியது.
ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக எங்கள் கல்வி எங்கள் உரிமை என்ற முழக்கத் துடன் “கல்வி உரிமை மாநாடு” ஒன்றை திருச்சியில் 2019 ஆக 23ஆம் நாள் தமுஎகச நடத்தியது.
2023 செப்டம்பர் 2 ஆம் நாள் சென்னையில் தமுஎகச நடத்திய சனாதன ஒழிப்பு மாநாடு நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சங்கிகள் தமுஎகச மீது பல இடங்களில் வழக்குகளை தொடுத் துள்ளனர். சட்டப்போராட்டத்தை நீதிமன்றத்தில் தமுஎகச எதிர்கொண்டு வருகிறது.
எல்லா வரலாறுகளும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே என்றார் மார்க்ஸ். அது கலை இலக்கி யத்திற்கும் பொருந்தும். எல்லா கலை இலக்கியங்க ளும் இரு தத்துவங்களுக்கான போராட்டமே. அதில் மக்களுக்கான தத்துவத்திற்கு அழகியலோடு கலை அம்சத்தோடு படைப்புகளை படைக்க தமுஎகச தனது பொன்விழாவில் இருகரம் நீட்டி அழைக்கிறது.
கட்டுரையாளர்: துணைப் பொதுச் செயலாளர், தமுஎகச