ஆப்பையும்,
மணல் ஊற்றும்
கேப்பையும்,கேழ்வரவும்
உண்டு சலித்திட்ட பருவம்.
கிணறும், கம்மாயும்
நாற்றும் நடவும்
ஏரும் உழவும்
இறகாப்பெட்டியுமான
பொழுதுகள்.
தூக்குச்சட்டி
நிரம்பி வழிய
மறுக வாங்கி அமிழ்த்தி
வீட்டில் ஆறுவேளை
வியர்வையோடு புசித்த,
கோடைக்கால
பள்ளி நாட்கள்
சோற்றுக்கான கொடை.
வெட்டப்படும்
கிடாய்களின் மரண
ஓலங்களின் மீது
அனுதாபங்களில்லை
கறிச்சோறுக்காக
காத்துக்கிடந்த
நள்ளிரவுகள்.
ஆடிருக்கும்
கறவை மாடிருக்கும்
தெரியாது
தேநீர்.
அச்சுக்காடு மேய்ச்சலில்
எலந்தை காரை சூரை
நவ்வா இத்யாதிகள்.
கண்டதில்லை
ஸ்நாக்ஸ்.
இட்லிக்கும்
வடைக்குமான
எதிர்பார்ப்பிலிருக்கும்
தீபாவளி.
அடித்து வைத்த
பெட்டைக்கோழி ரசம்.
இல்லவேயில்லை
சோற்றோடு பிசைந்த
சிக்கனும்
பிரியாணியும்.
வேகமாக வளர்ந்திருக்கும்
உணவுப்பழக்கம்.
வந்துவிட்டது
என்வீட்டு வாசலுக்கு
அய்யங்கார் பேக்கரியும்
அயல்நாட்டு ஓட்டலுமாக..
காக் காசுப்பொறாத
இடமென்று
சலம்பிக்கொண்ட
தாத்தனுக்கும்
பூட்டனுக்கும் தெரியாது
நிலம் நெடுஞ்சாலை
நகரமாகும் என்று.
வயக்காடே
கதியென்று கிடந்த
வாலிப முறுக்குகள்
ஊரிலில்லை எவரும்.
வீட்டிலிருக்கும்
பெண்டீரும்
ஊரோடு இல்லை.
என்றாவது
ஊருக்கு வருகையில்
அண்டை வீட்டாரோடு
அண்டுவதற்கானதாகவும்
காத்துக்கிடக்கிறது போலும்
வரப்புகள் மீது
அமர்ந்தயிடத்தில்
தற்போது
நாற்காலிகள்
தெய்வத்திருவாளர்களுக்கு
அணைந்தெரியும்
வண்ண விளக்கென
கடை காட்சிதர
விம்முகையில்
சூடாக வருகிறது
ஒரு டீ.