articles

img

நரேந்திர தபோல்கர் கொலைவழக்கின் மீதான தீர்ப்பு முழுமையானதுமல்ல, திருப்தியளிக்கக் கூடியதுமல்ல! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடிய டாக்டர் நரேந்திர தபோல்கர் கொலைவழக்கின் மீதான தீர்ப்பு முழுமையானதுமல்ல, திருப்தியளிக்கக்கூடியதுமல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் மகாராஷ்டிர மாநிலக் குழு அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடி வந்த டாக்டர் நரேந்திர தபோல்கர் அவர்கள், சச்சின் அண்டுரே மற்றும் சரத் கலாஸ்கர் என்பவர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில், இவ்விருவருக்கும் ஆயுள் தண்டனை அளித்து, மே 10 அன்று புனேயில் உள்ள சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பை பாராட்டும் அதே சமயத்தில், இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த இதர நபர்களான வீரேந்திர தவடே, வழக்கறிஞர் சஞ்சீவ் புனலேகர், விக்ரம் பாவே ஆகியவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை மெய்ப்பித்துத் தண்டனை பெற்றுத்தரக்கூடிய விதத்தில் நீதிமன்றத்தை ஏற்கச் செய்வதற்கு அரசுத் தரப்பு தவறிவிட்டதற்காக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய வேதனையையும், அதிருப்தியையும் வெளிப்படுத்திக் கொள்கிறது. இதன் காரண மாக மேற்படி மூவரும் விடுதலை செய்யப் பட்டிருக்கிறார்கள்.

மூளையாகச் செயல்பட்டவர்களை கைது செய்வதில் சிபிஐ தோல்வி

தண்டனை பெற்றவர்களும், போதுமான சாட்சியம் இல்லை என்று விடுதலை செய்யப்பட்டவர்களும் சனாதன சன்ஸ்தா என்னும் அமைப்பைச் சேர்ந்தவர்கள். இந்த வழக்கு தொடர்பாக ஆரம்பத்தில் மகாராஷ்டிர காவல்துறையும், பின்னர் மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகமும் (சிபிஐ), இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு கடந்த பத்தாண்டு காலமாக இவ்வழக்கின் விசாரணையை இழுத்தடித்து, இறுதியாக கொடூரமான முறையில் இக்குற்றத்தைச் செய்த கொலைபாதகர்களின் மூளையாக இருந்து  செயல்பட்டவர்களைக் கைது செய்வதில் பரிதாபகரமான முறையில் தோல்வி அடைந்துள் ளன. கர்நாடக மாநிலத்தில் புகழ்பெற்ற இதழாளர் கௌரி லங்கேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கையும், அறிஞர் டாக்டர் எம்.எம். கல்புர்கி கொலை  செய்யப்பட்ட வழக்கையும்  விசாரணை செய்த காவல்துறை யினர்தான் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களையும் முதலில் கண்டுபிடித்தார்கள் என்பது இங்கே நினைவு கூரத்தக்கதாகும்.  

கர்நாடக காவல்துறை துல்லிய ஆதாரங்கள் தந்தும்

கர்நாடகக் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணை யிலிருந்து இந்து ராஷ்ட்ரத்தை அமைப்பதற்காக, அதற்கு  எதிராகச் செயல்பட்டுவரும் அறிவுஜீவிகளையும், செயற் பாட்டாளர்களையும் கொல்வதற்காக ஒரு பயங்கரவாதக் கும்பல் சனாதன சன்ஸ்தா என்ற பெயரில் மகாராஷ்டிர மாநிலத்தில் செயல்பட்டு வந்ததை, மகாராஷ்டிர காவல்துறைக்கும், மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்திற்கும் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு துல்லிய ஆதாரங்களை கர்நாடகக் காவல்துறை, மகாராஷ்டிர காவல்துறைக்கும், மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்திற்கும் அளித்த போதிலும், நரேந்திர தபோல்கர் மற்றும் தோழர் கோவிந்த் பன்சாரே கொலை செய்யப்பட்ட வழக்குகளை விசாரணை செய்த காவல்துறையினர் இத்தகைய தேச விரோத சதிவேலையின் முக்கிய நபர்களைக் கண்டுபிடித்து வழக்குடன் பிணைத்திட பரிதாபகரமான முறையில் தோல்வி அடைந்துள்ளது. சனாதன சன்ஸ்தா மற்றும் அதன் பின் உள்ள சக்திகளுக்கு அரசு நிர்வாகம் வளைந்துகொடுத்துள்ளதா என்றே எவரொருவரும் ஊகிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஒன்றிய, மகாராஷ்டிர அரசுகள் மீது வலுக்கும் சந்தேகங்கள்

முழுமையற்ற நீதியின் காரணமாக, ஒன்றிய அரசாங்கம் மற்றும் மகாராஷ்டிர மாநில அரசாங்கத்தின் மீது எழுந்துள்ள சந்தேக மேகங்கள் கலைந்திடாமல் மேலும் அடர்த்தியாகியுள்ளன.   மகாராஷ்டிராவிலும், கர்நாடகாவிலும் தொடர்ச்சியாகக் கொலைகளைச் செய்தவர்கள், இவ்வழக்குகளை விசாரணை செய்த புலன் விசாரணை அதிகாரிகளால் திருப்திகரமான முறையில் அடையாளம் காணப்பட்டு, வழக்குகள் தொடுக்கப்பட்டதாகக் கூறுவதற்கில்லை. இந்தப் பயங்கரவாதக் குற்றங்களைச் செய்வதற்கு இதன்பின்னணியில் இருந்து இதற்கு மூளையாக இருந்து செயல்பட்டவர்களைக் கைது செய்து, விசாரணைக் கூண்டில் ஏற்றும் வரைக்கும் இவ்வழக்கில் புலன் விசாரணை மேற்கொள்ளப்படவில்லை.

புலன்விசாரணை அதிகாரிகளின் கையாலாகாத்தனம்

இவ்வழக்கை விசாரணைசெய்த புலன்விசாரணை அதிகாரிகளின் கையாலாகாத்தனம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன் ஆழ்ந்த அதிருப்தியை வெளிப்படுத்திக் கொள்கிறது. முழுமையற்ற இந்தத் தீர்ப்புக்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் உரிய ஆர்வத்துடன் மேல்முறையீடு செய்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. இன்னமும் தீர்வுகாணப்படாத கோவிந்த் பன்சாரே கொலை செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் அனைவரையும் கண்டுபிடித்து, அவர்களை நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர, உண்மையுடன் உழைத்திட வேண்டும் என்று அவ்வழக்கை விசாரித்து வரும் புலன்விசாரணை அதிகாரிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  (ச.வீ.) 
 

;