tamilnadu

img

நிர்மலாதேவி வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கு தள்ளுபடி

மதுரை:
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பாக உதவிப் பேராசிரியர் நிர்மலாதேவி மீதான வழக்கை சிபிஐக்குமாற்றக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலாளர் பி.சுகந்தி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில்,“அருப்புக்கோட்டை தனியார்கல்லூரி உதவிப் பேராசிரியர் நிர்மலாதேவி,அதே கல்லூரி மாணவிகள் சிலரை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் 2018-ஆம் ஆண்டு ஏப்ரலில் காவல்துறையினர் கைதுசெய்தனர். இந்த வழக்கில் மதுரை காமராஜர்  பல்கலை., உதவிப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்புசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கைசிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தில் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பலருக்கும் தொடர்புள்ளது. ஆனால் அவர்களின் பெயர்கள் வழக்கில்சேர்க்கப்படவில்லை. யாருக்காக நிர்மலாதேவி அவ்வாறு செய்தார் என விசாரிக்கவில்லை. சிபிசிஐடி காவல்துறையினர் நியாயமாக விசாரிக்காமல் திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். எனவே நிர்மலாதேவி வழக்கை சிபிசிஐடி வசமிருந்து சிபிஐக்கு மாற்ற வேண்டும்” எனக் கூறியிருந்தார்.இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவின்அடிப்படையில் ஏற்கனவே, திருவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இறுதி அறிக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்டதோடு வழக்கை திருவில்லிபுத்தூர் நீதிமன்றம் விசாரிக்க இடைக்காலத் தடையும் விதிக்கப்பட்டது.இந்நிலையில் இந்த வழக்கை வெள்ளியன்று விசாரித்த நீதிபதிகள், சிபிசிஐடி விசாரித்து குற்றப்பத்திரிக்கை மற்றும் இறுதி அறிக்கை தாக்கல் செய்து வழக்கு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் இதில் நீதிமன்றம் தலையிட வேண்டிய முகாந்திரம் இல்லை. சாட்சிகளின் அடிப்படையில் கூடுதலாக குற்றவாளிகளைச் சேர்ப்பதற்கு விசாரணை நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் கீழ் நீதிமன்ற விசாரணைக்கு விதித்த தடையையும் நீக்கி உத்தரவிட்டனர்.

;