world

உக்ரைன்- ரஷ்யா போர்: களத்திலிருந்து...

  •  அமெரிக்க ஜனாதிபதி பைடன் ரஷ்ய ஜனாதிபதி  புடினை போர்க்குற்றவாளி எனவும் ரவுடி எனவும் பலவாறு இழிவாக பேசியதை கண்டித்து அமெரிக்க தூதரை ரஷ்ய வெளியுறவு  அமைச்சகம் அழைத்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும் இதன் விளைவாக இரு தேசங்களுக்கும் இடையே உள்ள ராஜிய உறவுகள் துண்டிக்கப்படும் அபாயம் உருவாகும் எனவும் எச்சரித்துள்ளது.
  •  இத்தாலி நேட்டோவிலிருந்து வெளியேற வேண்டும் என ரோம் நகரில் வலுவான ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
  •  சீனா தனது ஆயுதங்களை ரஷ்யா - உக்ரைன் ஆகிய இரு தேசங்களுக்கும் தராது என அமெரிக்காவுக்கான சீனத் தூதர் கூறியுள்ளார்.
  •  சோவியத் யூனியனின் முன்னாள் குடியரசான ஜார்ஜியாவில் நடத்தப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில் 65சதவீத மக்கள் நேட்டோவில் ஜார்ஜியா சேராதது சரி என கருத்து தெரிவித்துள்ளனர். ஜார்ஜியாவை நேட்டோவில் இணைக்க அமெரிக்கா கடும் முயற்சி செய்து வருகிறது. உக்ரைன் போல ஜார்ஜியாவும் ரஷ்யாவின் எல்லை நாடு ஆகும்.
  • போர் முடிந்த பிறகு நடத்தப்படும் ஆய்வில் ரஷ்யா தனது போர் நடவடிக்கைகளை விதிகளை பின்பற்றி நடத்தியதையும் உக்ரைன் ஏராளமான விதிமீறல்களையும் போர்க்குற்றங்களையும் செய்துள்ளதையும் உலகம் உணரப்போகிறது என மேற்கத்திய பத்திரிக்கையாளர் ஸ்காட் ரிட்டர் தெரிவித்துள்ளார்.

ஒரு டுவிட்டர்வாசியின் கேள்வி

  •  ஆப்பிரிக்கா- 120 கோடி மக்கள்; இந்தியா- 130 கோடி; சீனா- 140 கோடி- இந்த தேசங்கள் எல்லாம் ரஷ்யா மீது தடைவிதிக்கவில்லை!
  •  அமெரிக்கா 33 கோடி+பிரிட்டன்-6கோடி+பிரன்சு-6.7 கோடி+தடை விதித்த மற்றவர்கள் என சேர்த்தாலும் 100 கோடிதான் வருகிறது. யார் உண்மையில் சர்வதேச சமூகம்?
  •  அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ஹன்டர் பைடன் உக்ரைனில் பல நிறுவனங்களில் ஏராளமான பணம் சேர்த்து ஊழல் செய்தார் என 2016ஆம் ஆண்டே உக்ரைனுக்கான அமெரிக்க தூதர் ஜார்ஜ் கெண்ட் மின்னஞ்சலை அரசாங்கத்துக்கு அனுப்பினார் என இப்பொழுது செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை விசாரிக்க முயற்சி செய்த உக்ரைன் அரசு வழக்கறிஞரை அன்று துணை ஜனாதிபதியாக இருந்த ஜோ பைடன் மிரட்டி ராஜினாமா செய்ய வைத்தார் எனவும் கூறப்படுகிறது. இதற்கிடையே நவம்பர் மாதத்தில் நடக்க இருக்கும் தேர்தல்களில் கீழ்சபையில் தாங்கள் பெரும்பான்மை பெற்றால் ஜோ பைடன் மகனை விசாரித்து தண்டனை கிடைக்க செய்வோம் என அமெரிக்க குடியரசு கட்சியினர் பைடனுக்கு பீதியைக் கிளப்பியுள்ளனர். 
  •  உக்ரைனின் மரியபோல் நகரில் உள்ள அனைத்து உக்ரைன் ராணுவத்தினர்/ வெளிநாட்டு வீரர்கள்/ காவல்துறையினரை ஆயுதங்களை சரணடைந்துவிட்டு வெளியேறுமாறும் அவ்வாறு செய்தால் அவர்கள் விரும்பும் இடத்துக்கு பாதுகாப்புடன் அனுப்பப்படுவார்கள் எனவும் ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது. வீழ்ந்து கொண்டிருக்கும் உக்ரைனுக்கு உங்கள் உயிரை பலி கொடுத்து தியாகிகள் ஆவதால் எந்த பலனும் இல்லை எனவும் ரஷ்யா கூறியுள்ளது. ஆனால் உக்ரைன் இதற்கு மறுத்துள்ளது. மரியபோல் நகரை நான்கு திசைகளிலும் ரஷ்ய ராணுவம் சுற்றிவளைத்துள்ளது.
  •     இஸ்ரேல் தனது நடுநிலையை கைவிட்டு உக்ரைனை முழுமையாக ஆதரிக்க வேண்டும் என ஜெலன்ஸ்கி வற்புறுத்தியுள்ளார். அதே சமயத்தில் சில இஸ்ரேல் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாஜிக்களின் பங்கை ஜெலன்ஸ்கி மறைக்க முயல்கிறார் என குற்றம்சாட்டியுள்ளனர்.
  •     ரஷ்யா மீது வர்த்தக தடைகள் சுமத்துவது குறித்து இருவித சிந்தனைகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் உருவாகியுள்ளன. ஒரு கருத்து: இதுவரை 4 வர்த்தக தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் விளைவுகள் என்ன என்பதை ஆய்வுசெய்துவிட்டு அடுத்த நடவடிக்கை இருக்க வேண்டும். இன்னொரு கருத்து: இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய வர்த்தக தடைகளை விதித்து ரஷ்யாவை சிதைக்க வேண்டும். அமெரிக்கா இரண்டாவது கருத்தை ஆதரிக்கிறது.