பாரீஸ், மார்ச் 21-
ஓய்வூதியத் திட்டத்தை நாடாளுமன்றத்தைப் புறக்கணித்துவிட்டு, நடைமுறைப்படுத்த பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் முடிவு செய்திருப்பதால் அந்நாட்டு மக்கள் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.
ஜனாதிபதியின் இந்த முடிவால் பாரீஸ், ரென்னஸ், அல்பி, மார்செல் ஆகிய நகரங்களில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு அமைப்புகளின் மீது தாக்குதல்கள் நடந்துள்ளன.
இந்த நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் புதிய ஓய்வூதியத்திற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதுவரையில் நடப்பாண்டில் மட்டும் எட்டு முறை நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாகத் தொழிலாளர்கள் செய்திருக்கிறார்கள்.
நாடாளுமன்றத்தின் கீழ் அவையான தேசிய அவையில் புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு ஒப்புதல் கிடைக்கப் போவதில்லை என்று தெரிந்தவுடன், அந்த அவையின் ஒப்புதலைக் கேட்காமலேயே திட்டத்தை நடைமுறைப்படுத்தப் போவதாக ஜனாதிபதி முடிவெடுத்தார். அரசியல் சட்டத்தின் 49.3 ஆம் பிரிவை இதற்குப் பயன்படுத்தப் போகிறார்.
இதுபோன்ற அரசியல் சட்டப்பிரிவுகள் மக்களின் நலன்களுக்காகப் பயன்படவே வைக்கப்பட்டுள்ளது என்றும், அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்காக இல்லை என்றும் வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாடாளுமன்ற அவைகளில் எப்படிப்பட்ட முடிவுகள் எடுக்கப்பட்டாலும், புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்களைக் கைவிடப் போவதில்லை என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. மார்ச் 24 ஆம் தேதியன்று எட்டாவது நாடு தழுவிய வேலை நிறுத்தத்தைப் செய்யப் போகிறார்கள். இந்நிலையில் போராடி வரும் மக்கள் மீதான அடக்குமுறை அதிகரித்துள்ளது. தடியடி, கண்ணீப்புகைக் குண்டுகள் வீச்சு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.