world

img

பாரா ஒலிம்பிக் போட்டிகள்

பாரீஸ், ஆக. 30- 17ஆவது சீசன் பாரா ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் புதனன்று சிறப்பு கலைநிகழ்ச்சி களுடன் துவங்கியது. செப்டம்பர் 8 வரை நடைபெறும் இந்த பாரா ஒலிம்பிக் தொடரில் 169 நாடுளைச் சேர்ந்த 4,400  வீரர் - வீராங்கனைகள் களமிறங்கியுள்ள நிலையில், இந்தியா சார்பில் இதுவரை இல்லாத வகையில் 84 வீரர்-வீராங்கனைகள் பதக்க வேட்டை நிகழ்த்த பாரீஸில் களம் கண்டுள்ளனர்.

இந்நிலையில், பாரா ஒலிம்பிக் தொடரின் இரண்டாம் நாளே இந்தியா பதக்க வேட்டையை துவங்கியுள்ளது. மகளிர் 10 மீ ஏர் ரைபிள் (ஆர் - 2 : எஸ்எச் - 1)  பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லெகரா 249.7 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வென்றார். இதே பிரிவில் மற்றொரு இந்திய வீராங்கனை மோனா அகர்வால் 228.7 புள்ளிகளுடன் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றார்.

மணீஷ் நார்வலுக்கு வெள்ளி

ஆடவர் 10 மீ ஏர் ரைபிள் பிரிவில்  (பி - 1 : எஸ்எச் - 1)  இந்திய வீரர் மணீஷ் நார்வல் 234.9 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

வரலாறு படைத்த பிரீத்தி

மகளிர் 100 மீ (டி-35) ஓட்டப்பந்தய பிரிவில் இந்தியாவின் பிரீத்தி பால் மூன்றாம் இடத்துடன் 14.21  வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார். பாரா ஒலிம்பிக் வரலாற்றில் மகளிர் 100 மீ ஓட்டப்பந்தயப் பிரிவில் பதக்கம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையைப் பிரீத்தி பால் பெற்றார்.