world

img

பாலஸ்தீனத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்திருப்பது சட்டவிரோதமானது : சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு

ஹேக், ஜூலை 22 - பல பத்தாண்டுகளாக பாலஸ்தீனத்தின் பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்திருப்பது சட்ட விரோத செயல் என சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.  ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசத்தில் இஸ்ரேலின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளின் காரணமாக ஏற்பட்டு வந்த சட்டரீதியிலான மோசமான விளைவுகளை சரிசெய்ய வேண்டி  ஐ.நா.பொதுச் சபை 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 30 அன்று சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததன் அடைப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. '

1967 இல் தொடங்கி 57 ஆண்டுகளாக மேற்குக் கரை, காசா மற்றும் கிழக்கு ஜெருசலேம் உட்பட பாலஸ்தீனப் பிரதேசத்தின் மீதான ஆக்கிரமிப்பை இஸ்ரேல் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இஸ்ரேல் தனது குடியேற்ற நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. 

மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமில் சட்ட விரோதமாக இஸ்ரேல் அரசு குடியேற்றிய அனைத்து இஸ்ரேல் மக்களையும் வெளியேற்ற வேண்டும் என்றும், இந்த ஆக்கிரமிப்பின் காரணமாக பாலஸ்தீன மக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

2005 ஆம் ஆண்டு காசா பகுதியிலிருந்து வெளியேறிய பிறகும் காசா மீதான ஆக்கிரமிப்பை இஸ்ரேல் நிறுத்தவில்லை. இன்னும் பாலஸ்தீனத்தின் மீதான ஆக்கிரமிப்பை தொடரும் கட்டுப்பாட்டை கொண்டுள்ளது என நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி குறிப்பிட்டுள்ளார். 

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதியில் இஸ்ரேல் அரசின் சட்டவிரோத செயல்பாடுகளை எந்த நாடும் அங்கீகரிக்கக் கூடாது. மேலும் இஸ்ரேலின் சட்ட விரோத செயல்பாடுகளை தக்க வைத்துக்கொள்ள எந்த உதவியும் வழங்கக்கூடாது என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. 

இந்த தீர்ப்பை பாலஸ்தீன ஆதரவு நாடுகளும், ஆதரவு அமைப்புகளும் வரவேற்றுள்ளன. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு  இம்முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.