world

img

எந்த அரசாங்கத்திடமிருந்தும், எந்தக் கட்சியிடமிருந்தும் நிதி பெறவில்லை

சீன அரசாங்கம் அல்லது சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட எந்த அரசாங்கத்திடமிருந்தும் அல்லது எந்தக் கட்சியிடமிருந்தும் நிதி எதுவும் பெறவில்லை என்று ஷாங்காயைத் தலமாகக் கொண்டு இயங்கிவரும் அமெரிக்க தொழிலதிபர் நெவில் ராய் சிங்கம் (Neville Roy Singham) கூறியிருக்கிறார்.

இதுதொடர்பாக “தி இந்து” நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:  நெவில் ராய் சிங்கத்திற்கு எதிராக இந்தியாவில் இயங்கும் பல்வேறு அமலாக்கத்துறை முகமைகள் விசாரணை செய்து வருகின்றன. இவ்வாறு இந்திய அரசாங்கம் கூறியுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்து அவர் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அதில்,  “2023 ஆகஸ்ட் 5 அன்று நியூயார்க் டைம்ஸ் இதழ் எனக்கு எதிராகவும் மற்றும் பலருக்கு எதிராகவும் தவறான முறையிலும் மறைமுகமாகவும் வெளியிட்டுள்ள செய்தி, இந்தியாவில் நியூஸ் கிளிக் என்னும் இணைய செய்தி இதழ் சம்பந்தமாக கொந்தளிக்கும் நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார். 

இதன்பின்னர் 12 நாட்கள் கழித்து, தில்லிக் காவல்துறையின் சிறப்புப் பிரிவு முதல் தகவல் அறிக்கை ஒன்றைப் பதிவு செய்திருக்கிறது.

“முழுக்க முழுக்க அவதூறுகளையும் உண்மைக்குப் புறம்பான தகவல்களையும் கொண்டுள்ள இந்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் சுமார் 100 இதழாளர்கள் விசாரிக்கப்படவும், டஜன் கணக்கானவர்கள் காவலில் அடைக்கப்படவும், அக்டோபர் 3 அன்று இருவர் கைது செய்யப்படவும் இட்டுச் சென்றுள்ளது. கைதுகளுக்குப் பின்னர் முதல் தகவல் அறிக்கை, பொது வெளியில் (public domain) வெளியாகியிருக்கிறது. இவ்வாறு வெளியாகியிருக்கும் முதல் தகவல் அறிக்கை என்னையும் பலரையும் இழிவாகக் (damaging) கூறியிருக்கிறது. முதல் தகவல் அறிக்கையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தைகள், நியூயார்க் டைம்ஸ் இதழில் இருந்த பொய்யான தகவல்களின் அடிப்படையில் அமைந்தவைகளாகும்,” என்றும் நெவில் ராய் சிங்கம் அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

கைதுகள் மற்றும் பலர் காவலில் அடைக்கப்பட்டிருக்கும் செய்தி தனக்கு மிகவும் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியிருப்பதாகக் தெரிவித்துள்ள அவர் மேலும் கூறுகையில், “இலங்கைக்கு நெருக்கமான நாடான இந்தியாவில் இப்படி நடப்பது எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது. என்னுடைய தந்தை ஆர்ச்சிபால்டு டபிள்யு சிங்கம் (1932-1991) அணி சேரா இயக்கத்தில் பங்கெடுத்தவரும், வரலாற்று ஆசிரியருமாவார். இந்தியாவை  நேசிக்கிற ஒருவன் என்ற முறையில், இந்தியாவுடன் நீண்ட காலமாக உறவு வைத்திருக்கும் ஒருவன் என்ற முறையில் இதனை எழுதுகிறேன்”.

நியூஸ்கிளிக்கிற்கு நிதி அளித்தது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சனை குறித்து, இதில் சக குற்றஞ்சாட்டப்பட்டவராகக் குறிப்பிடப்பட்டுள்ள, ஜேசன் பிஃபெட்சர், குற்றச்சாட்டு பொய் என்று கூறி அதனை மறுத்து அறிக்கை வெளியிட்டிருப்பதாக நெவில் ராய் சிங்கம்  கூறினார்.

“மேலும் சீனா மற்றும்  சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட எந்த அரசாங்கத்திடமிருந்தோ அல்லது அரசியல் கட்சியிடமிருந்தோ நிதி எதுவும் பெறவில்லை” என்று கூறி, குற்றச்சாட்டை நெவில் ராய் சிங்கம் மறுத்திருக்கிறார்.