world

img

ஈரான்-சவூதி உறவு புதுப்பிப்பு -சீன முயற்சிக்கு வெற்றி

சீனாவின் முயற்சியால் பல ஆண்டுகளாக அரசு ரீதியான தொடர்பு இல்லாமல் இருந்து ஈரான் மற்றும் சவூதி அரேபியா, இருதரப்பு உறவுகளை புதுப்பித்துக் கொள்ள ஒப்புக் கொண்டுள்ளன.

இரு நாடுகளுக்கிடையிலான உறவு மீண்டும் வளர வேண்டும் என்று சீனா தொடர்ந்து முயற்சி மேற்கொண்டிருந்தது. பல்வேறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் இருதரப்பும் பல்வேறு அம்சங்கள் கொண்ட உடன்பாட்டில் கையெழுத்திட்டன. இருதரப்பு தூதரக உறவைப் புதுப்பிக்கும் வகையில், தூதரங்களை மீண்டும் திறக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

உடன்பாடு எட்டப்பட்டது குறித்து சீனா, ஈரான் மற்றும் சவூதி அரேபியா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன. அந்த அறிக்கையில், "தொடர்ந்து நடைபெற்ற பேச்சவார்த்தைகளின் அடிப்படையில் தூதரகங்கள் உள்ளிட்ட அலுவலகங்களை இரண்டு மாதங்களுக்குள் திறப்பது என்று முடிவெடுக்கப்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனத்தரப்பில் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய வெளிநாட்டு விவகார ஆணையத்தின் இயக்குநர் வாங் யி பங்கேற்றார்.

இந்த உடன்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள ஈரான் மற்றும் சவூதி அரேபியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் நேரில் சந்தித்து விவாதிக்க இருக்கிறார்கள். இரு நாடுகளும் தங்கள் இறையாண்மையை பரஸ்பரம் மதிப்பது என்றும், உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது என்றும் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். சீனாவின் தொடர் முயற்சிக்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளது. ஈரானுடனான அமெரிக்காவின் எதிர்மறை அணுகுமுறையை மீறி இந்த உடன்பாடு எட்டப்பட்டிருக்கிறது.