உஸ்பெகிஸ்தானில் இந்திய நிறுவனத்தின் இருமல் மருந்தை உட்கொண்ட 18 குழந்தைகள் உயிரிழந்ததாக தெரிவித்த அந்நாட்டு அரசு அம்மருந்துக்கு தடை விதித்துள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில் உள்ள மரியான் பயோடெக் என்ற மருந்து நிறுவனம், டாக்-1 மேக்ஸ் (Doc-1 Max) என்ற இருமல் மருந்தை தயாரித்து வருகிறது. உஸ்பெகிஸ்தானில் சளி மற்றும் காய்ச்சல் காரணமாக டாக்-1 மேஸ்க் இருமல் மருந்தை உட்கொண்ட 21 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், ஆய்வுக்கு உட்படுத்திய போது எத்திலீன் கிளைக்கால் என்ற ரசாயனம் இதில் கலந்திருப்பது தெரியவந்துள்ளதாகவும், குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டு உயிரிழந்ததாகவும், அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து, டாக்-1 மேக்ஸ் மருந்து விற்பனைக்கு அந்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு கூட்டமைப்பின் வடக்கு மண்டலம் தெரிவித்துள்ளது
இதேபோல், கடந்த 2 மாதங்களுக்கு முன் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள காம்பியா நாட்டில் இந்தியாவின் மைதன் பார்மக்யூட்டிக்கல்ஸால் தயாரிப்பு இருமல் மருந்தை உட்கொண்ட 66 குழந்தைகளும் உயிரிழந்தனர். அம்மருந்துக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.