காசாவில் உடனடியாக போரை நிறுத்த வலியுறுத்தி, இந்தியா உள்ளிட்ட 153 நாடுகளின் ஆதரவுடன் ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த அக். 7ஆம் தேதி காசாவை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர்.
காசாவில் மட்டும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதில், 70 சதவிகிதம் பேர், குழந்தைகள் மற்றும் பெண்கள் எனக் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் பட்டினியிலும், நோய்த் தொற்று ஏற்படும் அபாயத்திலும் இருப்பதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
பாலஸ்தீன மக்கள் மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள் எனவும், அவர்களுக்கு உதவிகள் கிடைக்க வேண்டும் எனவும், பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும் எனவும் ஐ.நா. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக போரை நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தில் உடனடியாக நிபந்தனையின்றி பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும், மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டது.
இதற்கு, இந்தியா உள்ளிட்ட 153 நாடுகள் ஆதரவு தெரிவித்த நிலையில் அமெரிக்கா, இஸ்ரேல் உட்பட 10 நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன.
உக்ரைன், அர்ஜென்டினா, ஜெர்மனி உள்ளிட்ட 23 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
இறுதியாக 193 உறுப்பினர்கள் கொண்ட அவையில், 153 நாடுகளின் ஆதரவுடன் போர் நிறுத்தத்திற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.