world

img

எலிசபெத்ராணியும், எரிபொருள் வறுமையும்

எலிசபெத் மகாராணி ஆட்சிப் பொறுப்பேற்றபின் பவளவிழா, 75 ஆவது ஆண்டு நிறைவை பிரிட்டன் மக்கள் கொண்டாடி வருகிறார்கள். பிரிட்டன் அரசின் தவறான தாராளமயக் கொள்கைகளால், சிக்கன சீரமைப்பு நடவடிக்கைகளால் மக்களின் துயரங்கள் அதிகரித்து வருகிறது .40 ஆண்டுகளில் இல்லாத அளவு தற்போது பணவீக்கம் ஒன்பது சதவிகிதம் என கடுமையாக உயர்ந்துள்ளது .1.2 கோடி பிரிட்டன் மக்கள் வருகிற அக்டோபரில் எரிபொருள் வறுமை (fuel poverty) நிலைக்கு தள்ளப்படுவர். 

எரிபொருள் வறுமை என்றால் வீடுகளை உரிய அளவு வெப்ப நிலையில் வைத்துக்கொள்ள முடியாத நிலை. தற்போது 65 இலட்சம் மக்கள் இந்த நிலைமையை சந்தித்து வருகின்றனர் .எரிசக்தி சப்ளை செய்யும் கம்பெனிகள் ஒரு ஆண்டுக்கு அதிகபட்சம் வசூலிக்கும் கட்டண அளவு வரம்பு ஆறு மாதத்திற்கு ஒருமுறை நிர்ணயிக்கப்படுகிறது. ஏப்ரல் முதல், இந்த வரம்பு 1277 பவுண்டிலிருந்து , 1971 பவுண்ட் ஆக உயர்த்தப்பட்டது. ஒரு பவுண்டு என்பது தொண்ணூத்தி ஏழு ரூபாய் 60 பைசா சுமார் 100 ரூபாய் .எரிவாயு, மின்சாரம் போன்ற எரிசக்தித் தேவைக்காக மட்டும் பிரிட்டன் குடும்பம் ஒரு ஆண்டுக்கு செலவழிக்கும் தொகை தற்போது ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 100 ரூபாய் ஆகும் .குளிர் பிரதேசமான கிரேட் பிரிட்டனில் 24 மணி நேரமும் வீட்டை கதகதப்பாக வைத்துக்கொள்ள எரிசக்தி தேவை. கட்டண வரம்பு அக்டோபரில் 2800 பவுண்டாக, அதாவது ஆண்டுக்கு ரூபாய் 2 லட்சத்து 80 ஆயிரமாக உயரும் என கேஸ் அண்ட் எலக்ட்ரிக்கல் மார்க்கெட் அலுவலக தலைமை முதன்மை அதிகாரி தெரிவிக்கிறார் .அபாய சங்கு ஊதப் பட்டுவிட்டது .

மார்னிங் ஸ்டார் என்ற தினசரி நாளிதழின் ரிப்போர்ட்டர் ரோகர் மெக்கன்சி, பணவீக்கம் உயர்ந்துள்ளது; ஊதியங்கள் குறைந்துள்ளன என்கிறார் . எரிசக்தி தனியார் கம்பெனிகள் இலாபம் அபரிமிதமாக உயர்ந்துள்ளது சட்ட , வீட்டு வாடகை 35 சதவீதம் உயர்வு, வீடு கட்டும் செலவு 50ரூ கூடிவிட்டது. உணவு வங்கிகள் முன் நீண்ட வரிசை நிற்கிறது.உணவு வங்கிகள் இலவசமாக சத்தான டின்னில் அடைக்கப்பட்ட உணவை நெருக்கடியில் உள்ளவருக்கு சப்ளை செய்யும் தர்ம ஸ்தாபனம் .2200 உணவு வங்கிகள் கிரேட் பிரிட்டனில் உள்ளன. மே 11-ல் 25.6 லட்சம் பேர் உணவு வங்கி மூலம் உணவு பெற்றுள்ளனர் . பிரிட்டனின் விலை உயர்வு துயரங்களுக்கெல்லாம் உக்ரைன் யுத்தத்தின் மீது பழி போடுகிறார் பிரதமர் போரிஸ் ஜான்சன் .பல்வேறு அமைப்புகளும் கிரேட் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியும் விலை உயர்வுக்கு எதிராக போராடி வருகின்றன. எரிசக்தி கம்பெனிகளை தேசியமயமாக்குக! பணக்காரரின் செல்வத்தின் மீது கூடுதல் வரி விதித்திடுக! தொழிலாளரின் ஊதியங்களை உயர்த்துக! என்ற முழக்கங்களை போராட்டக்காரர்கள் எழுப்பி வருகிறார்கள் .