world

img

அமேசான் ஊழியர்கள் வேலை நிறுத்தம்: வாக்கெடுப்பில் உறுப்பினர்கள் ஒப்புதல்

லண்டன், ஏப்ரல் 1- தங்கள் ஊதியத்தை உயர்த்தக் கோரித் தொடர்ந்து போராடி வரும் அமேசான் நிறுவனத்தின் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய முடிவெடுத்திருக்கிறார்கள்.

இங்கிலாந்தின் காவென்ட்ரி மாகாணத்தில் உள்ள பிரிவில் தொழிற்சங்கம் சார்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பெரும்பாலான தொழிற்சங்க உறுப்பினர்கள் ஒப்புதல் தெரிவித்தால்தான் வேலை நிறுத்தம் நடைபெறும். தங்கள் ஊதிய உயர்வுக் கோரிக்கைகளைச் செவி மடுக்க அமேசான் நிறுவன நிர்வாகம் தொடர்ந்து மறுத்து வருவதால் வாக்கெடுப்பு நடத்த முடிவெடுத்தனர். இதில் பெரும்பாலான ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.

தங்கள் பணியிடத்திலிருந்து ஏப்ரல் 16 ஆம் தேதியன்று வெளிநடப்பு செய்யப் போகிறார்கள். மூன்று நாட்களுக்கு இந்த வெளிநடப்பு இருக்கும். இந்த வேலை நிறுத்தத்தின்போதோ அல்லது அதற்கு முன்பாகவோ நிர்வாகம் அழைப்பு விடுத்து, தீர்வு காணாவிட்டால் மீண்டும் மூன்று நாட்கள் வேலை நிறுத்தம் செய்யவும் ஊழியர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். ஏப்ரல் 21 முதல் 23 ஆம் தேதி வரையில் அந்த வேலை நிறுத்தம் நடைபெறும்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜி.எம்.பி. தொழிற்சங்கத் தலைவர் அமந்தா கியரிங், "கடந்த மூன்று மாதங்களாக நாங்கள் கோரிக்கை வைத்து வருகிறோம். உலகிலேயே பணக்கார நிறுவனங்களிடம் இருந்து நிச்சயமாக ஊதிய உயர்வைப் பெறுவோம் என்று எங்கள் உறுப்பினர்கள் உறுதியாகத் தெரிவித்திருக்கிறார்கள். இதை நிறுவனம் கணக்கில் எடுத்துக் கொள்ளும் என்று நம்புகிறோம்" என்று குறிப்பிட்டார்.