world

img

தென்னாப்பிக்காவில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து - 45 பேர் பலி

தென்னாப்பிரிக்காவில் ஈஸ்டர் கொண்டாட்டத்திற்குச் சென்ற பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளாகி 45 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தென்னாப்பிரிக்காவின் லிம்போபோ மாகாணத்தில் உள்ள மோரியா என்ற நகரத்திற்கு, ஈஸ்டர் கொண்டாட்டத்திற்காகப் பயணிகள் பேருந்து சென்றுள்ளது. மாமட்லகலாவில் உள்ள பாலத்தைக் கடக்கும் போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகில் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதற்கட்ட விசாரணையில், போட்ஸ்வானாவில் இருந்து லிம்போபோவில் உள்ள மோரியா என்ற நகரத்திற்கு, ஈஸ்டர் திருநாள் கொண்டாட்டத்திற்காக அந்த பேருந்துபயணிகளை ஏற்றிச் சென்றது தெரிய வந்துள்ளது. தென்னாப்பிரிக்கா நாட்டின் மிகப்பெரிய தேவாலயங்களில் ஒன்றான சியோன் கிறிஸ்டியன் தேவாலயத்திற்கு, புனிதப் பயணம் மேற்கொண்டதாகத் தெரிகிறது. விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளது. பேருந்திலிருந்த  உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்குக் கருகிப்போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன.

மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தென்னாப்பிரிக்கா அதிபர் சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

;