பாரிஸ், பிப்.17- பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக அந்நாட்டில் உள்ள 220 பெரிய மற்றும் சிறிய நகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் எழுச்சியுடன் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர். பிப்ரவரி மாதத்தில் மட்டும் ஐந்து பெரும் போராட்டங்களை தொழிற்சங்கங்கள் நடத்தியுள்ளன. மக்ரோனின் புதிய திட்டப்படி முழுமையான ஓய்வூதியம் பெறத் தகுதியான வயது 64 ஆக உயர்த்தப்படுகிறது. மேலும் ஒருவர் ஓய்வூதியம் பெற வேண்டுமானால் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் அவரது பங்களிப்பு 43 ஆண்டுகளுக்கு இருந்திருக்க வேண்டும். பெரும்பாலான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தை மறுப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும் என்று கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மக்களும் புதிய ஓய்வூதியத் திட்டம் நியாயமானதல்ல என்று கருத்துக் கூறியிருக்கிறார்கள். தொழிற்சங்கங்கள் விடும் போராட்ட அழைப்புகளை மற்ற துறைகளைச் சேர்ந்த மக்களும் ஏற்று அவற்றில் பங்கேற்று வருகிறார்கள். ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிரான மனுவில் 10 லட்சம் பேர் கையெழுத்திட்டு வழங்கியுள்ளனர்.
இதில் அனைத்துப் பகுதி மக்களும் தங்கள் கையெழுத்துகளை போட்டு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார்கள். பிப்ரவரி 16 ஆம் தேதியன்று நடந்த போராட்டம், புதிய ஓய்வூதியத் திட்டத்தின் மீது வாக்களிக்கப் போகும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்தைக் கவருவதற்காக நடத்தப்பட்டதாகும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் வெறும் பெரு நகரங்களில் மட்டுமே நடக்கின்றன என்று மக்ரோனின் ஆளும்கட்சி சகாக்கள் கூறியதை பொய் என்று நிரூபிக்கும் வகையில் 220 நகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.
சிறிய நகரங்களில் ஒன்றான ஆல்பியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற எதிர்ப்புப் பேரணி நடந்தது. இது குறித்துக் கருத்து தெரிவித்த பிரான்ஸ் ஜனநாயகத் தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரான லாரென்ட் பெர்ஜெர், “நாங்கள் சமூக இயக்கமாகக் களத்தில் இறங்கியுள்ளோம். பல பிரெஞ்சு தொழிலாளர்கள் பெரு நகரங்களில் வேலை செய்யவில்லை. அவர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில்தான் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் எங்கள் போராட்டங்களை நடத்தியிருக்கிறோம்” என்றார். விமானப் போக்குவரத்தும் இந்தப் புதிய போராட்டத்தால் பாதிக்கப்பட்டது. 30 விழுக்காடு விமானங்களின் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன. ஐந்து பெரிய விமான நிலையங்களில் இருந்து கிளம்ப வேண்டிய விமானங்களில் ஐந்தில் ஒன்று தனது பயணத்தை மேற்கொள்ளவில்லை. பிரான்ஸ் மின்னுற்பத்தி நிறுவனத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ததால் 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகவில்லை. இதனால் நாட்டின் பல பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டது.
மக்கள் ஆதரவு
அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றில், பிரான்ஸ் மக்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வரக்கூடாது என்று கூறியிருக்கிறார்கள். மக்களின் ஆதரவு தங்களுக்கு பெரும் அளவில் இருப்பதாகத் தொழிலாளர்களும் கூறியுள்ளனர். அரசின் புதியத் திட்டத்திற்கு எதிராக 220 நகரங்களில் நடந்த 250 பேரணிகள் மற்றும் ஊர்வலங்களில் 25 லட்சம் பேர் பங்கேற்றுள்ளதை பொதுத் தொழிலாளர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் சுட்டிக்காட்டுகிறார்கள்.