வாஷிங்டன், ஜன.17 - பிரம்மாண்டமாக வளர்ச்சியடைந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தால் வளர்ந்த நாடுகளில் 60 சதவீத வேலைகள் பறிபோகும் அபாயம் உள்ளது என சர்வதேச நாணய நிதியத்தின் ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
வளர்ந்துவரும் மற்றும் குறைவான வருமானம் கொண்ட நாடுகளிலும் 40 சதவீத வேலைகள் பறிபோகும் என்றும் அந்த அறிக்கை எச்சரித்துள்ளது. உலகம் முழுவதும் பொருளாதார சமத்துவமின்மை அதிகரித்து வருகிற நிலையில் செயற்கை நுண்ணறிவின் இந்த தாக்கம் சமத்துவமின்மையை மேலும் தீவிரமாக்கும். ஒட்டுமொத்த சமத்துவ மின்மையை மோசமாக்கும் இந்த நிலையை தடுக்க கொள்கை வகுப்பாளர்கள் முன்கூட்டியே கவனிக்க வேண்டும்.
சமூக பதற்றங்களை மேலும் தூண்டும் ஒரு சிக்கலான நிலை என சர்வதேச நாணய நிதிய நிர்வாக இயக்குனர் கிறிஸ்டாலினா ஜார்ஜியெவா பேட்டி யளித்துள்ளார். தொழிலாளர்களுக்கு எந்த அளவிற்கு நுண்ணறிவு சாதனங்கள் மாற்றாக உள்ளதோ அந்த அளவிற்கு புதிய பாதிப்பு அமையும் என அவர் குறிப்பிட்டார். மேலும் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு அவர்களது எதிர்கால பாதுகாப்பு கருதி விரிவான சமூக பாது காப்புகள், வேலை இழக்கும் தொழிலாளர்களுக்கு புதிய திட்டங்களையும் பயிற்சிகளையும் கொண்டு வந்து மிகப்பெரிய அளவிலான இந்த பொருளாதார சமத்துவ மின்மை இடைவெளியைக் குறைக்க வேண்டும் என அவர் அனைத்து நாடுகளையும் வலியுறுத்தியுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் சர்வதேச வணிக நிறுவனங்கள் மற்றும் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற உலகப் பொருளாதார மன்றத்தில் செயற்கை நுண்ணறிவு குறித்தான விவாதம் முக்கிய பங்கு வகித்தது. மேலும் அத்துறையில் நிறுவனங்கள் செய்யும் முதலீடுகளும் அதிகரித்தன. இந்நிகழ்வு கிறிஸ்டா லினாவின் எச்சரிக்கையுடன் பொருந்திப் போகிறது. இந்த அதிக முதலீடுகள் நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்கள் மத்தியில் புதிய கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 2023 இறுதி மாதங்களிலேயே செய்தி நிறுவனங்கள் உட்பட பலத்துறைகளில் செயற்கை நுண்ணறிவின் காரணமாக பணி நீக்கங்கள் செய்யப் பட்டன.
வேலை இழப்புகளை உருவாக்குகிற போதிலும், உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், உலகளாவிய வளர்ச்சியைத் தூண்டவும் நுண்ணறிவுத்துறை முக்கிய பங்காற்றும் என்பதையும் தவறாமல் குறிப்பிட்டார். குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தில் வளர வேண்டிய அவசியத்தையும் மேற்கோளிட்ட ஜார்ஜி யெவா 2024 உலகளவில் நிதிக் கொள்கைக்கு மிகவும் கடினமான ஆண்டாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.