ஷார்ம் –எல் –ஷேக்இ (எகிப்து), நவ.16- உலகம் வெப்பமயமாதலைத் தவிர்ப்பதன் ஒரு பகுதியாக கரியமில வாயு-வெளியேற்றத்தைக் குறைக்க இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கப்படும் என சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார். காப் 27-ஆவது மாநாட்டில், பருவ நிலை மாற்றம் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் வட்ட மேசை மாநாட்டில், குறைந்த அளவு கரியமிலவாயு வெளியேற்றத்திற்கான தனது நீண்ட கால உத்தியை இந்தியா சமர்ப்பித்துள்ளது. எகிப்தின் ஷார்ம் –எல் –ஷேக் நகரில் நவம்பர் 6-ஆம் தேதி தொடங்கிய இந்த மாநாடு நவம்பர் 18-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மாநாட்டில் பங்கேற்றுள்ள இந்திய தூதுக்குழுவிற்கு ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமையேற்றுள்ளார். இந்த மாநாட்டில் கரியமில வாயு-வெளியேற்றம் குறித்த அறிக்கையை சமர்ப்பித்த பூபேந்தர் யாதவ், “ 2021-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய ஹைட்ரஜன் இயக்கம் இந்தியாவை பசுமை ஹைட்ரஜன் குவி மையமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது. பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியின் விரிவாக்கம் மூலம் இந்தியாவில் எலெக்ட்ரோலைசர் உற்பத்தித் திறன் அதிகரிக்கப்படும். 2032-ஆம் ஆண்டில் அணுசக்தித் திறன் மூன்று மடங்கு அதிகரிக்கப்படும்.
குறிப்பாக பெட்ரோலில் எத்தனாலை கலப்பதன் மூலம் உயிரி எரிபொருள் பயன்பாடு அதிகரிக்கப்படும், மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கப்படும். பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் போக்குவரத்துத் துறையில் குறைந்த அளவு கரியமிலவாயு வெளியேற்றத்தை உறுதி செய்யும். 2025-ஆம் ஆண்டு பெட்ரோலில் எத்தனால் கலப்பு 20 சதவீதம் அதிகரிக்கப்படும். 2016-ஆம் ஆண்டு இந்தியாவின் வனம் மற்றும் மரங்கள் அடர்ந்த பகுதியில் கரியமிலவாயு வெளியேற்றம் 15 சதவீதம் குறைந்துள்ளது. உலகளவில் ஒப்பிட்டால் இந்தியாவில் காட்டுத்தீ சம்பவம் மிகவும் குறைவாக உள்ளது. காடுகள் மற்றும் மரங்கள் அடர்ந்த பகுதியில் 2030-ஆம் ஆண்டுக்குள் 2.5 முதல் மூன்று பில்லியன் டன் வரை கரியமிலவாயு வெளியேற்றம் தடுக்கப்படும். உலகம் வெப்பமயமாதலில் இந்தியாவின் பங்கு மிகவும் குறைவானது. உலக மக்கள் தொகையின் பங்கு சுமார் 17 சதவீதமாக இருந்தபோதும், உலகளாவிய பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தில் இந்தியாவின் மொத்தப் பங்கு மிக மிகக் குறைவாகும். நாட்டின் வளர்ச்சிக்காக, குறைந்த அளவிலான கரியமிலவாயு வெளியேற்ற உத்திகளை தொடர, இந்தியா உறுதிபூண்டுள்ளது”. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.