world

img

சமூக நீதி சார்ந்த தேர்தல் சீர்திருத்தங்கள்

மெக்சிகோ சிட்டி, பிப்.24- கறுப்பின மக்கள், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டவர்களுக்கு தேர்தல் நடவடிக்கைகளில் உரிய பங்கினைத் தரும் மசோதாக்கள் மெக்சிகோ நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளன. இடதுசாரிக் கொள்கைகளை முன்னிறுத்தப் போவதாக வாக்குறுதி அளித்து மெக்சிகோவின் ஜனாதிபதியான ஆண்ட்ரூஸ் மானுவல் லோபஸ் ஓப்ரடார்(அம்லோ) அந்த வாக்குறுதிகளில் ஒன்றான தேர்தல் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அவர் முன்வைத்த தேர்தல் சீர்திருத்தங்களில் ஒன்றான குடியேற்ற மக்கள், கறுப்பினத்தவர், பழங்குடியினர், மாற்றுப் பாலினத்தவர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு உரிய பிரதிநிதித்துவத்தை வழங்கும் அம்சம் அடங்கிய மசோதா நாடாளுமன்றத்தின் முன்வைக்கப்பட்டது.

இந்த மசோதா மீது விவாதம் நடத்திய செனட் அவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மசோதாவை முழுமையான ஆதரித்தவர்களின் எண்ணிக்கை 72 ஆகவும், எதிர்ப்பு மற்றும் சில அம்சங்கள் மீது கருத்து வேறுபாடுகள் இருந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆகவும் இருந்தது. பெரும்பான்மை ஆதரவு இருந்ததால் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவில் தேர்தல் அமைப்புகள் பற்றிய பொதுவான சட்டம், அரசியல் கட்சிகள் குறித்த சட்டம் மற்றும் நீதித்துறை குறித்த சீர்திருத்தங்களும் அடங்கும். சிறு கட்சிகளைப் பாதுகாக்கும் வகையில், கூட்டணியில் உள்ள பெரிய கட்சிகளின் பதிவைப் பயன்படுத்திக் கொள்ள ஒரு வசதியும் ஆலோசனையும் முன்வைக்கப்பட்டிருந்தது. இது குறித்த ஆழ்ந்த விவாதங்கள் தேவை என்று பல தரப்பினரும் கருதியதால் அந்த அம்சம் மசோதாவில் இடம் பெறவில்லை. வியாபாரப் பொருட்களாக சிறு கட்சிகள் மாறி விடலாம் என்ற கருத்து மேலோங்கியதால், இது பின்னர் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது.