world

img

உலகின் சக்திவாய்ந்த கூட்டமைப்பு மாநாடுகளில் ஓரங்கட்டப்பட்ட பைடன்

ரியோ டி ஜெனிரோ,நவ.19- ஜி-20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடை பெற்று வருகிறது. சர்வதேச அரங்கில் நடைபெறும் ஒவ்வொரு அமைப்பின்  மாநாட்டிலும் அமைப்பின்  உறுப்பு நாடுகளும் அதில் பங்கேற்ற நாடுகளின் தலைவர்களும்  குழு புகைப்படம் எடுப்பது வழக்கம். அவ்வாறு ஜி-20 கூட்டமைப்பில் குழு புகைப்படம் எடுக்கப்பட்டது. அதில் முன் வரிசையில் மேற்குநாடுகளின் ஏகாதிபத்திய ஆதிக்கத்துக்கு எதிராக பிரிக்ஸ் பிளஸ் கூட்டமைப்பை உருவாக்கி வழி  நடத்தும் சீனா,பிரேசில், தென்னாப்பிரிக்கா, இந்தியா ஆகியவற்றின் தலைவர்கள் கம்பீரமாக கைகளை பிணைத்து  நின்றிருக்க, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அப்புகைப்படத்தில் இடம் பெறவில்லை. இது உலகம் முழுவதும் பேசுபொருள் ஆனது. இப்புகைப்படம் பைடன் வருவதற்கு முன்பே எடுக்கப்பட்டு விட்டது என  சில அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   இது உலக அரங்கில் அமெரிக்கா மற்றும் ஜோ பைடனின் சரிந்து வரும் செல்வாக்கை காட்டுவதுடன் பிரிக்ஸ் நாடுகளின் செல்வாக்கு உலக நாடுகள் மத்தியில் அதிகரித்து வருவதின் வெளிப்பாடு ஆகும். பிரிக்ஸ் பிளஸ் நாடுகள் தாங்கள் அங்கம் வகிக்கக் கூடிய ஜி-20 உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புகளில்  தங்களின் அடிப்படை நோக்கமான வளரும் நாடுகளின் குரலை எதிரொலிப்பது என்ற முடிவின் அடிப்படையில்  செயல்பட்டு வருகின்றன . இதுவே இந்த மாநாட்டிலும் வெளிப்பட்டுள்ளது எனவும் அரசியல் விமர்சகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.  இந்த ஜி- 20 மாநாட்டுக்கு முன்னதாக பெரு நாட்டில் நடைபெற்ற ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் குழு புகைப்படத்திற்கு பின் வரிசையின் ஓரத்தில் பைடன் நிற்க வைக்கப்பட்டிருந்தார். குழுவின் முன்வரிசையில் நடுவே சீன ஜனாதிபதி ஜி ஜிங் பிங், அவருக்கு அருகே பெரு ஜனாதிபதி ஆகியோர் நின்றிருந்தனர். இது போன்ற சர்வதேச மாநாடுகளில் எடுக்கப்படும் குழு புகைப்படத்திற்கு உலகத் தலைவர்கள் நிற்கும் இடமானது  பொதுவாக நாடுகளின்  அகர வரிசைப்படி இருக்கும். இந்த ஆண்டு பெருவில்  நடைபெற்ற  இம்மாநாட்டில் இந்த விதிமுறை ஒழுங்காக கடைப்பிடிக்கப்பட வில்லை என நியூயார்க் போஸ்ட் செய்தி நிறு வனம் தெரிவித்துள்ளது.  உதாரணமாக, 2017  இல் வியட்நாமில் நடைபெற்ற ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் அப்போதைய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இரண்டு குடும்ப புகைப்படங்களில் மையப் பகுதியில் நின்று இருப்பார் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.