டெல் அவிவ், ஜூன் 19- தனது ஆக்கிரமிப்பில் உள்ள பாலஸ்தீனத்திற்குச் சொந்தமான பகுதிகளில் சட்டவிரோதமாகக் குடியிருப்புப் பகுதிகளை அமைக்கும் பணியை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. பாலஸ்தீனத்தின் மேற்குக் கரைப்பகுதியில் ராணுவத்தை வைத்துத் தொடர்ந்து ஆக்கிரமிப்பை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது. புதிதாக 4 ஆயிரத்து 500 குடியிருப்புப் பகுதிகளை அமைக்கப்போகிறார்கள். சர்வதேச அளவில் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகக் குரல்கள் எழுந்துவந்தபோதும், அமெரிக்க உதவியுடன் அவற்றை இஸ்ரேல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அடுத்த வாரம் நடக்கப் போகும் இஸ்ரேலின் திட்டக் கவுன்சில் கூட்டத்திற்கான குறிப்பில் 4 ஆயிரத்து 500 குடியிருப்புகளைக் கட்டுவதற்கான முன்மொழிவும் உள்ளது. குறைந்தபட்சம் 1,332 குடியிருப்புகளுக்கான ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். எஞ்சிய குடியிருப்புகளுக்கு ஒப்புதல் தந்தேயாக வேண்டும் என்ற வகையில் கட்டுமானப்பணிகள் நடைபெறவிருக்கின்றன. திட்டக்கவுன்சில் உறுப்பினர்கள் மீது அழுத்தம் போடப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தங்கள் குடியிருப்பு விரிவாக்கத்தை உறுதியாக எடுத்துச் செல்வோம் என்று இஸ்ரேலின் நிதியமைச்சரும், மேற்குக் கரைப்பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களை மேற்பார்வை பார்க்கும் பணிக்குப் பொறுப்பாளருமான பெசாலெல் ஸ்மோட்ரிச் தெரிவித்திருக்கிறார். இத்தகைய ஒப்புதல்கள் இல்லாமல் கூட சில இடங்களில் கட்டுமானப் பணிகள் கடந்த காலங்களில் நடந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.