world

img

தீக்கதிர் உலக செய்திகள்

உக்ரைன்­- ரஷ்யா போர்நிறுத்தம்  இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை 

உக்ரைன்­-ரஷ்யா இடையேயான இரண்டாம் கட்ட போர் நிறுத்த பேச்சுவார்த்தை ஜூன் 2 அன்று துருக்கியில் நடைபெறும் என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ரோவ் அறிவித்துள்ளார். இந்த சந்திப்பில் ரஷ்ய தூதுக்குழு உக்ரைன் தூதுக்குழுவிற்கு ஒரு குறிப்பாணையை வழங்கத் தயாராக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் ரஷ்ய போர் நிறுத்தப் பேச்சு வார்த்தையை ஒருங்கிணைப்பதன் மூலம் மத்திய கிழக்கில் தனது மேலாதிக்கத்தை நிறுவும் கனவை நோக்கி எர்டோகன் நகர்கிறார்.

‘இரு நாட்டுக் கொள்கையை  அமல்படுத்த வேண்டும்’ 

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி யை வர வேண்டுமானால் இரு நாட்டுக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என ஐ.நா. இடைக்கால சிறப்பு ஒருங்கிணைப்பா ளர் சிக்ரிட் காக் எச்சரித்துள்ளார். இரு நாட்டுக் கொள்கையை  வேகப்படுத்த கூட்டு நடவ டிக்கை வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள் ளார். அமைதி என்பது பரிவர்த்தனை, பகுதி யளவு அல்லது தற்காலிக ஏற்பாடாகவோ இருக்க முடியாது. அது சர்வதேச சட்ட அடிப்ப டையில் கட்டமைக்கப்பட வேண்டும் என்றார்.

நேதன்யாகுவை எச்சரித்தேன் : டிரம்ப் கூறுகிறார்

புதிய அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா-ஈரானுக்கு இடையே பேச்சு வார்த்தை நடந்து வருகின்றது. இந்த பேச்சு வார்த்தைகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை எச்சரித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிடுவதாக செய்திகள் வெளியாகிவரும் நிலையில் டிரம்ப்பின் இந்த எச்சரிக்கை வந்துள்ளது.

டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து  பதவி விலகினார் மஸ்க்

டிரம்ப் நிர்வாகத்தை விட்டு வெளியேறுவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். டிரம்பின் வெற்றிக்கு பல ஆயிரம் கோடிகளை மஸ்க் செலவு செய்தார். பின் செயல்திறன் துறை என்ற அமைப்பை உருவாக்கி அதில் மஸ்க்கை தலைவராக்கினார். இத்துறை மூலம் அரசு அத்தியாவாசியமாக செய்ய வேண்டிய செலவுகளில் 10 லட்சம் கோடி ரூபாயை வெட்டியுள்ளார். அவரின் பதவிக்காலம் இந்த மாத இறுதியில் முடிவடையும் நிலையில், டிரம்ப் நிர்வாகத்தை விட்டு வெளியேறுவதாக மஸ்க் தெரிவித்துள்ளார்.  

வங்கதேசத்தில் அதிகரிக்கும்  அரசியல் நெருக்கடி

வங்கதேசத்தில் உள்ள யூனுஸ் இடைக் கால அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர், அரசு ஊழியர்களை தொடர்ந்து தற்போது ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் நடைபெறும் போராட்டங்களால் அந்நாட்டில் இடைக்கால அரசுக்கு அரசியல் நெருக்கடி தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. யூனுஸ் அரசு சீர்திருத்தம் என்ற பெயரில் பல்வேறு முடிவுகளை வலிந்து திணிப்பதாகவும் பொதுத்தேர்தலை தாமதப்படுத்தி வருவதாகவும் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா குற்றம் சாட்டியுள்ளார்