world

உக்ரைன் ரஷ்யா போர் களத்தில் இருந்து

புடினுடன் பேசுவதற்கு ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்டரஸ் முயன்றதாக அவரது செய்தித் தொடர்பாளர் கூறினார். ஆனால் அதனை ரஷ்யா கடுமையாக மறுத்துள்ளது. ஐ.நா. பொதுச்செயலாளரின் செய்தித் தொடர்பாளர் உண்மையை பேசவில்லை எனவும் ரஷ்யா கூறியுள்ளது.

தன்னிடம் கைவசம் உள்ள ஆயுதங்களை உக்ரைனுக்கு தந்துவிட்டதாகவும் மேலும் ஆயுதங்கள் கொடுக்க உற்பத்தி செய்யுமாறு இராணுவ ஆலைகளுக்கு ஆணையிட்டிருப்பதாகவும் ஜெர்மனி ஜனாதிபதி ஷோல்ஸ் கூறியுள்ளார்.
மேற்கத்திய நாடுகள் விரைவில் உக்ரைன் போரில் ரஷ்யாவின் ஏவுகணைகள் தீர்ந்துவிடும் என கணித்தன. மாறாக ரஷ்யா இன்னும் ஏவுகணைகளை ஏவி வருகிறது.இதற்கு முக்கிய காரணம் ரஷ்யாவின் உற்பத்தி திட்டமிடலும் நவீனமயமும்தான் என உதவி ஜனாதிபதி யூரி போரிசவ் தெரிவித்துள்ளார்.

ஜி 20 நாடுகளின் மாநாட்டில் ரஷ்ய நிதி அமைச்சரும் இணையம் வாயிலாக பங்கேற்க உள்ளார். இந்த நிகழ்வுகளை முற்றிலும் புறக்கணிக்கும் திட்டம் இல்லை என ஜி 7 நாடுகள் கூறியுள்ளன. ஏனெனில் இந்தியா/சீனா ஆகிய தேசங்களும் பங்கேற்க உள்ளதால் அவர்களின் அதிருப்தி வேண்டாம் என ஜி 7 நாடுகள் நினைக்கின்றன. ஆனால் ரஷ்ய பிரதிநிதி பேசும் பொழுது வெளியேறிவிடுவோம் எனவும் கூறியுள்ளனர்.

தனது நலன்களுக்கு உகந்ததாக இல்லாத காரணத்தால் ரஷ்யாவுக்கு எதிராக போரிட உக்ரைனுக்கு அமெரிக்க ராணுவத்தை அனுப்பும் திட்டம் இல்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. எனினும் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுத உதவிகளை செய்வோம் எனவும் கூறியுள்ளது. 

மேற்கத்திய நாடுகள் உக்ரைன் போரில் கவனம் செலுத்தி வருவதால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஜிகாதிகள் மேற்கத்திய நாடுகளில் தாக்குதலை நடத்த வேண்டும் என ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆபத்தான அறைகூவல் விட்டுள்ளனர்.
உக்ரைன் ஜனாதிபதி ஆபத்தான மனிதர் எனவும் உக்ரைன்-ரஷ்யா இடையே சமாதானம் ஏற்பட முட்டுக்கட்டையாக உள்ளார் எனவும் இத்தாலிய பத்திரிக்கையாளர் ஆஞ்செலோ ஒர்ஸி கூறியுள்ளார்.

உக்ரைன் போரில் பிரான்ஸ் அரசாங்கத்தின் அமெரிக்க ஆதரவு நிலைக்காக மக்கள் விலை தரக்கூடாது எனவும் பிரான்சுக்கு ஏற்பட்ட இழப்புகளை அமெரிக்கா ஈடு செய்ய வேண்டும் எனவும் ஜனாதிபதி வேட்பாளர் மேரி லெபென் கூறியுள்ளார். இவருக்கும் மேக்ரோனுக்கும் இடையே வேறுபாடு குறைந்து கொண்டு வருவதாக கருத்து கணிப்புகள் கூறுகின்றன.

உக்ரைன் மீது ரஷ்யாவின் படையெடுப்பை ஆதரிக்கும் எவர் ஒருவரும் குடியுரிமையை இழப்பர் என லாத்வியா சட்டம் இயற்றியுள்ளது. இதே செயலை செய்பவர்களுக்கு ஆஸ்திரியாவில் 50,000 யூரோ அதாவது ரூ.50 லட்சம் அபராதம்!

மரியபோல் நகரம் முழுவதும் தனது கட்டுப்பாடில் வந்துள்ளதாக அறிவித்துள்ள ரஷ்யா அங்கு மட்டும் 4,000 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் 1,400 பேர் சரண் அடைந்ததாகவும் தெரிவித்துள்ளது. இதில் வெளிநாட்டு வீரர்களும் அடங்குவர். இன்னும் சில ஆயிரம் பேர் ஒரு இரும்பாலையில் ஒளிந்துள்ளனர். அவர்கள் மீது தாக்குதலை நடத்தி நமது வீரர்களை இழக்க வேண்டாம் எனவும் ஆனால் அங்கிருந்து தப்பமுடியாமல் முற்றுகை தொடரட்டும் எனவும் புடின் ஆணையிட்டுள்ளார்.

விம்பிள்டனை தொடர்ந்து ஐரோப்பிய செஸ் போட்டிகளிலும் ரஷ்யா தடை செய்யப்பட்டுள்ளது. லிபியா/இராக்/யுகோஸ்லேவியா மீது அமெரிக்கா படையெடுத்த பொழுது மேற்கத்திய விளையாட்டு வீரர்கள் தடை செய்யப்படவில்லை. இப்பொழுது ஏன் ரஷ்ய விளையாட்டு வீரர்களுக்கு தடை என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மரியபோல் நகரம் ரஷ்யப் படையினரால் விடுவிக்கப்பட்ட பிறகு பல வாரங்களுக்கு பின்னர் அங்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

“இன்னும் ஒரு வாரத்துக்கு மட்டும்தான் ரஷ்யாவிடம் ஆயுதங்கள் உள்ளன. பின்னர் ரஷ்யா வீழ்ந்துவிடும். மரியபோலில்தான் ரஷ்யாவுக்கு மரண அடி காத்திருக்கிறது. பொருளாதார தடைகளும் ரஷ்யாவை சிதைத்துவிடும்” - இவ்வாறு பெலிங்க்கேட் எனும் மேற்கத்திய பத்திரிக்கையின் பிரபல ராணுவ நிருபர் கிரிஸ்டோ கிரிசோவ் மார்ச் 4ஆம் தேதி எழுதினார். 7 வாரங்களுக்கு பின்னர் நிலைமை தலைகீழ்! மேற்கத்திய ஊடகங்களின் அவதூறு மற்றும் பொய்களுக்கு இது ஒரு உதாரணம்.
ரஷ்யா- உக்ரைன் போரை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்ப்பதற்கு பதிலாக நேட்டோ நாடுகள் போரை நீட்டித்து வருகின்றன என துருக்கி குற்றம் சாட்டியுள்ளது. துருக்கியும் நேட்டோவின் உறுப்பினர்.

2014ஆம் ஆண்டு உக்ரைனின் கிழக்கில் உள்ள லுகான்ஸ்க் பகுதி என வரையறுக்கப்பட்டு பின்னர் உக்ரைன் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் 95% மீட்டுவிட்டதாக லுகான்ஸ்க் மக்கள் ராணுவம் தெரிவித்துள்ளது.