மாஸ்கோ, ஜூன் 9- உக்ரைனிடமிருந்து ரஷ்யா கைப்பற்றிய கெர்சோன் பகுதியில் உள்ள அணை மீது குண்டு போட்டதால் கடும் சேதம் ஏற்பட்டதற்கு உக்ரைன்தான் காரணம் என்று ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. கெர்சோன் பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்த அணையில் மின்சாரம் தயாரிக்கும் பணியும் நடந்து வந்தது. சோவியத் யூனியனாக ஒன்றுபட்டிருந்த காலத்தில் கட்டப்பட்ட இந்த அணை தகர்க்கப்பட்டு, அருகிலுள்ள பல பகுதிகள் நீரில் மூழ்கின. அணையைத் தகர்த்து விட்டார்கள் என்று ரஷ்ய ராணுவத்தின் மீது உக்ரைன் அரசு குற்றம் சாட்டியது. தன்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள அணையை ரஷ்ய ராணுவம் ஏன் தகர்க்க வேண்டும் என்ற கேள்வியும் எழுந்தது. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் நீதிமன்றத்தில் இது குறித்து ரஷ்யா அளித்துள்ள தகவலின்படி, அணையைத் தகர்த்தது உக்ரைன்தான் என்று குறிப்பிட்டுள்ளது. நீதிமன்றத்தில் ரஷ்யத் தரப்பு வாதத்தை அலெக்சாண்டர் ஷுல்கன் எடுத்து வைத்தார். அப்போது, “திட்டமிட்டுத் தீவிரமான ராணுவத் தாக்குதலை மேற்கொண்டபோது அந்த அணைக்கு வரும் நீரின் அளவையும் வேண்டுமென்றே அதிகப்படுத்தியுள்ளனர்” என்று உக்ரைன் மீது குற்றம் சாட்டினார். கிழக்குப் பகுதிகளில் சொந்த நாட்டு மக்களையே கொடுமைப்படுத்தி வரும் உக்ரைன், நேர்மை, நியாயம் பற்றியெல்லாம் பேசுவதற்கு தகுதியற்றது என்று கூறிய அவர், “ஆயிரக்கணக்கான மக்கள் கெர்சோன் பகுதிகளில் இருந்து வெளியேற வைக்கும் வேலையைச் செய்திருக்கிறது. இதற்காகவே அந்த அணையைத் தகர்த்துள்ளனர். இந்த அணை உடைப்பால் சுற்றுச்சூழலுக்கும் கடுமையான ஆபத்து ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.