world

img

சீனா: 133 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது

சீனாவில் 133 பயணிகளுடன் சென்ற விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
சீன ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் அந்நாட்டின் குன்மிங் நகரில் இருந்து வுஜோ நகருக்கு இன்று புறப்பட்டது. அந்த விமானத்தில் 133 பேர் பயணித்தனர். பிற்பகல் சரியாக 3.05 மணிக்கு தரையிறங்கி இருக்க வேண்டிய விமானம் 2.22 மணிக்கு விமான நிலையத்துடனான தொடர்பை இழந்தது. அப்போது விமானம் 3225 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. 
இந்நிலையில் விமானம் குவாங்சி மாகாணத்தில் உள்ள மலைப்பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மலைமீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு மீட்புக்குழுவினர் விரைந்து சென்றுள்ளனர். விமானத்தில் பயணித்த 133 பேரின் நிலை என்ன ஆனது? என்பது  குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. விமானம் விழுந்து தீப்பிடித்து எரிந்த நிலையில் புகை மூட்டம் அதிகமாக இருப்பதால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.