லிபர்வில்லே, ஆக.30- மத்திய ஆப்பிரிக்கா நாடான காபோன், மற்ற ஆப்பிரிக்க நாடுகளை போலவே பல ஆண்டுகளாக பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவின் ஆதிக்கத்தில் சுரண்டப்பட்டு வரக்கூடிய நாடாகும். தங்களின் ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவான கைக்கூலி நபர்களை நாட்டின் ஜனாதிபதியாக கொண்டு வந்து, அந்நாட்டின் எண்ணெய் வளத் தின் மீது பிரான்ஸ் பெரும் ஆதிக்கத் தை செலுத்தி சுரண்டி வந்தது. இந்நிலையில் காபோன் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. அதில் பிரான்சின் கைப்பாவையான அலி போங்கோ மூன்றாவது முறையாக வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. அறிவிப்பு வெளிவந்த சில மணி நேரத்தில் ராணுவ உயரதிகாரிகள், நாட்டின் அதிகாரத்தை ராணுவம் எடுத்துக்கொண்டுள்ளதாக அதிகாரப்பூர்வ ‘கேபன் 24’ தொலைக்காட்சியில் அறிவித்தனர். அதனைத் தொடர்ந்து பேசிய ராணுவ அதிகாரிகள், “பொறுப்பற்ற, கணிக்க முடியாத மோசமான நிர்வாகத்தின் விளைவாக, சமூக ஒற்றுமை தொடர்ந்து சீர்குலைந்து, நாட்டை குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது” எனவும், “தற்போதைய ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து அமைதியைக் காக்க முடிவு செய்துள்ளோம்” எனவும் கூறியுள்ளனர்.
இந்த செய்தி அறிவிப்பை தொடர்ந்து நாட்டு மக்கள் வீதிகளில் கூடி நாட்டின் ராணுவத்திற்கு வரவேற்பு கொடுத்த காட்சிகளை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.நாட்டு மக்களுக்கும் அண்டைநாடுகளில் இருந்து குடியேறிய மக்கள் மற்றும் புலம் பெயர்ந்த மக்களுக்கும் அமைதியைப் பேணும்படி ராணுவம் வேண்டுகோள் விடுத்தது. தேசிய மற்றும் சர்வதேச சமூகத்திற்கான கடமைகளுக்கு மதிப்புகளை உறுதிப்படுத்துவதாகவும் ராணுவம் கூறியுள்ளது. பிரான்ஸ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இதுவரை கினியா, மாலி,புர்கினா பாசோ, நைஜர் ஆகிய நாடுகளின் ராணுவங்கள் மக்கள் ஆதரவுடன் கிளர்ச்சியை நடத்தின. சமீபத்தில் கிளர்ச்சி நடத்திய நைஜர் ராணுவமும், பிரான்ஸ் நாட்டின் ராணுவம் மற்றும் தூதரை நாட்டை விட்டு வெளியேற கெடு விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் மற்றுமொரு ஆப்பிரிக்க நாடான காபோன் மக்களின் ஆதரவுடன் பிரான்ஸ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக எழுந்து நிற்பது ஒட்டுமொத்த ஏகாதிபத்திய நாடுகளையும் கதிகலங்க செய்துள்ளது.