world

img

அமெரிக்க நட்புக்காக பத்து லட்சம் கொலைகள்!

சிஐஏ உதவியுடன் இந்தோனேசியா கொடூரம்

வாஷிங்டன், மார்ச் 9- இந்தோனேசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் உலகின் பல நாடுகளில் அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ நடத்திய படுகொலை களை அமெரிக்கப் பத்திரிகையாளர் வின்சென்ட் பெவின்ஸ் அம்பலப்படுத்தியுள்ளார். வாஷிங்டன் டைம்ஸ் நாளிதழில் பணியாற்றிய பெவின்ஸ், ஜாகர்த்தா மெதட்(Jakarta Method) என்ற நூலை எழுதியிருக்கிறார். பல ஆண்டு கள் ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டு, அண்மையில் திறந்த ஆவணங்களாக மாறிய பலவற்றை அடிப்ப டையாகக் கொண்டு இந்தப் புத்தகத்தை அவர் எழுதியுள்ளார். பல்வேறு ஆவணங்கள், உலகின் பல்வேறு பகுதிகளில் நேரில் பார்த்த சாட்சிகளின் வாக்குமூலங்கள் உள்ளிட்டவற்றை பெவின்ஸ் தொகுத்திருக்கிறார்.  தனது நூலில், பனிப்போரில் வெற்றி பெறுவதற்காக நிராயுதபாணியாக இருந்த இடது சாரிகளைக் கொடூரமாகக் கொலை செய்வதைத் தனது வெற்றிக்கான உத்தியாக அமெரிக்கா வைத்திருந்தது என்று பெவின்ஸ் கூறுகிறார். காலனி ஆதிக்கத்துக்கு எதிரான, கம்யூனிசத்து க்கு எதிரான நடுநிலை வகிக்கக்கூடிய நாடுகளைக் குறிவைத்துத் தாக்கியிருக்கிறார்கள் என்று யூடியூப் பேட்டியில் அவர் தெரிவித்திருக்கிறார். மோசமான வேலைகளுக்குப் பெயர் பெற்ற தங்கள் உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வுக்கு பணத்தையும், அதிகாரத்தையும் கொடுத்து லட்சக்கணக்கான நிராயுதபாணிகளைக் கொலை  செய்ய அமெரிக்க அரசு உத்தரவிட்டது என்றும்,  இதன் மூலம் தனது மேலாதிக்கத்தை உலகம் முழுக்கத் திணிக்க அமெரிக்கா முயல்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தோனேசியா பற்றிக் குறிப்பிட்டுள்ள பெவன்ஸ், “காலனி ஆதிக்கத்திற்கு எதிரான, இடதுசாரிக் கொள்கையைக் கடைப்பிடித்த, அதே வேளையில் கம்யூனிசத்தை ஆதரிக்காத இந்தோனேசியாவில் அமெரிக்கா செய்த நட வடிக்கைகளை எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்ளலாம். அமெரிக்காவுடன் நட்பை ஏற்படு த்திக் கொள்வதற்காக கம்யூனிச ஆதரவாளர் களை நசுக்க இந்தோனேசியா முடிவெடுத்தது. அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ, அதற்கான முழு உதவிகளையும் செய்தது” என்கிறார். ஹாலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்களின் உதவியுடன் இந்தோனேசியாவின் தந்தை என்று  கருதப்பட்ட சுகர்னோவின் புகழைக் குலைக்க சிஐஏ சதி செய்தது. போலியான செய்தியை உரு வாக்கி அவர் மீது பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்தியது. பல தலைவர்களின் மீது இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுக்கி, மக்கள் மத்தியில் அவர்களின் பெயரைக் கெடுத்தனர். சீனா மற்றும்  சோவியத் யூனியன் ஆகிய இரு நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அடுத்தபடியாக உலகிலேயே மூன்றாவது பெரிய கம்யூனிஸ்ட் கட்சியாக இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது.

படுகொலைகள்

1965 மற்றும் 1966 ஆகிய ஆண்டுகளில் அக் கட்சியின் ஊழியர்கள் மற்றும் ஆதரவாளர்களின் பத்து லட்சம் பேரைப் படுகொலை செய்யும் பெரும் சதி அரங்கேற்றப்பட்டது. இது போன்ற  சதி வேலைகளை பிரேசிலிலும், சிலியிலும் சிஐஏ செய்தது. தங்களுக்கு எதிரான நாடுகளை  வளைக்க அமெரிக்கா மேற்கொண்ட இது போன்ற கொடூரங்கள் கம்யூனிச எதிர்ப்பு என்ற  போர்வையில் மூடி மறைக்கப்பட்டன. பயங்கர வாத நடவடிக்கைகள் ஜனநாயகத்தைக் கொண்டு  வர மேற்கொள்ளப்பட்டதாக சித்தரிக்கப்பட்டன. மேற்கத்திய ஊடகங்கள் இவற்றிற்குப் பெரும் துணையாக இருந்தன. இந்தோனேசியாவில் மேற்கொள்ளப்பட்ட கலகத்தின்போது பத்து லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் இதில் அமெரிக்கா மீது எந்தப்பழியும் இல்லாமல் பார்த்துக் கொண்டனர். தனது நூலில், “ராணுவத்துடன் மோதல் போக்காலோ அல்லது சண்டைக்குத் தயார் செய்து கொண்டிருந்தாலோ அல்லது வன்முறையைக் கையில் எடுத்திருந்தாலோ, இவ்வளவு குறுகிய காலத்தில் பத்து லட்சம் பேரைக் கொன்றிருக்க முடியாது” என்று பெவின்ஸ் எழுதியிருக்கிறார். கும்பல் கும்பலாக கம்யூனிஸ்டுகளை இப்படி கொலை செய்தது பனிப்போருக்குப் பிறகான உலகத்தின் நிலைமையைத் தீர்மானப்பதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றும் பெவின்ஸ் பதிவு செய்துள்ளார்.