அமெரிக்காவில் ஒருவருக்கு உயிருக்கு ஆபத்தான மூளை உண்ணும் நோய்த்தொற்றை கண்டுபிடித்ததாக மிசோரி மாகாண சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் ஐயோவா பகுதியில் டெய்லர் கவுண்டியில் உள்ள லேக் ஆஃப் த்ரீ ஃபயர்ஸ் ஏரியில் குளிக்கச் சென்ற ஒருவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதில் அவருக்கு சோதனை மேற்கொண்டபோது, அமீபாவால் ஏற்படும் மூளை அழிப்பு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுதொடர்பாக, மருத்துவமனை சார்பில் சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஏரியில் நீந்தியதால் தொற்று ஏற்பட்டிருக்குமோ என, ஏரி மற்றும் அதை ஒட்டிய கடற்கரை தற்காலிகமாக மூடப்படும் என மாகாண சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
மூளையை உண்ணும் அமீபா என்று அழைக்கப்படும் இந்த PAM அமீபா அபூர்வமாக ஏற்படும் நோய் தொற்றாகும். முதன்மை அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் என்று அழைக்கப்படும் இந்த தொற்று Naeleria fowleri எனப்படும் சூடான நன்னீரில் காணப்படும் நுண்ணிய ஒற்றை செல் அமீபாவால் ஏற்படுகிறது.
இந்த அமீபாக்கள் ஏரி, குளங்களில் குளிக்கும்போது நம் மூக்கு வழியாக உடலுக்குள் நுழையும். பின் மூளையை அடைந்து அதன் செல்களை கொஞ்சம் கொஞ்சமாக உண்ணத் தொடங்கும் என அறிவியலாளர்கள் கூறியுள்ளனர்.
புள்ளிவிவரங்களின்படி, இந்த அமீபாவால் ஏற்படும் நோய்த்தொற்றின் இறப்பு விகிதம் 97 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இதுவரை அமெரிக்காவில் 1962 முதல் 154 நோயாளிகள் மட்டுமே இந்த அமீபா பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். 4 பேர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளனர்.
உணவு, குடிநீர் மூலம் இந்த நோய் பரவாது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது ஒரு நோயாளியிடமிருந்து மற்றவர்களுக்கு தொடுதலால் பரவாது எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.