மாற்றுத்திறனாளிகளுக்கு ஆவின் பொருட்களை விற்க வாய்ப்பு
வேலூர்,செப். 22- ஆவின் உற்பத்தி பொருள்களை விற்பனை செய்திட வேலூர் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் வெளிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:- வேலூர் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் ஆவின் நிறுவன உற்பத்தி பொருள்களை விற்பனை செய்து பலன்பெறும் வகையில் முகவர்களாகத் தொழில் தொடங்க மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் ரூ.50 ஆயிரம் மானியமாக வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஆவின் நிறுவனத்தின் உற்பத்தி பொருள்களான பால், வெண்ணெய், நெய், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருள்களை கொள்முதல் செய்து குளிர்சாதனப் பெட்டிகளில் வைத்தும், இதர முறைகளில் பராமரித்தும் விற்பனை செய்திட ஏதுவாக இட வசதியினை சொந்தமாக வோ, வாடகை அடிப்படையிலோ கொண்டுள்ள மாற்றுத்திற னாளிகள் பயன்பெறலாம். ஆவின் நிறுவனம், கடனுதவி வழங்கும் ஒப்புதலுடன் தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திற னாளிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும். எனவே, இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலக வளாகம், அண்ணா சாலை, வேலூர் என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் கல்லூரி முத்தமிழ் விழா
வேலூர்,செப். 22- திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் வீரமாமுனிவர் மன்றத்தின் சார்பில் முத்தமிழ் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் டி.மரிய அந்தோணி ராஜ் தலைமை வகித்தார். தமிழ்த் துறை தலைவர் பொன்.செல்வகுமார் வரவேற்றார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாநிலத் துணை தலைவர் நந்தலாலா, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ் கல்வித் துறை தலைவரும் இரா.குறிஞ்சிவேந்தன், திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரி தமிழ்த் துறை தலைவர் இரா.சங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தின ராக பங்கேற்று பேசினர். 2-ஆம் நாள் நிகழ்ச்சிக்கு கூடுதல் முதல்வர் கே.மரிய ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக திரைப்படம் மற்றும் நாடக்கத் துறை உதவி பேராசிரியர் சி.கார்த்திகேயன் பேசினார்.துணை முதல்வர் ஆ.ஆரோக்கிய நெப்போலியன், சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரி தமிழ்த் துறை தலைவர் அரங்க. மல்லிகா ஆகியோர் பேசினர்.
பாலம் அமைக்க கோரிக்கை
வேலூர்,செப்.22-வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த சேர்பாடியில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தையொட்டி அகரம் ஆறு ஓடுகிறது. இந்த ஊரில் யாராவது இறந்து விட்டால் ஆற்றை கடந்துதான் மறுகரையில் உள்ள இடுகாட்டிற்கு உடலை எடுத்துச் செல்ல வேண்டும்.இதனால் அந்த பகுதியில் பாலம் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்ற னர். இந்நிலையில், கடந்த 2 நாட்களில் பெய்த மழையால் அகரம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் சேர்பாடியை சேர்ந்த அய்யா பிள்ளை என்பவரது மனைவி கருப்பாயி என்ற பச்சையம்மாள் (90) இறந்து விட்டார். அவரது உடலை உறவினர்கள் மற்றும் பொது மக்கள் அகரம் ஆற்றில் இடுப்பளவுக்கு ஓடும் வெள்ள நீரில் இறங்கி எடுத்துச்சென்றனர். இதுபோன்ற நிலையில் திடீரென வெள்ளம் அதிகரித்தால் பிணத்தை தூக்கிச்செல்பவர்கள் அதில் அடித்துச் செல்லப்படும் நிலை உள்ளது. இதனால் பாலத்தை விரைந்து கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், நந்தகுமார் எம்.எல்.ஏ.வுக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.