tamilnadu

துப்பாக்கி முனையில் ரவுடிகள் கைது....

வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடி வண்டறந் தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் ஜானி என்ற ஜானிபால்ராஜ் (33). இவர்  மீது கொலை, ஆள்கடத்தல், பணம் கேட்டு மிரட்டல் என 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. மேலும் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.கடந்த 2018 ஆம் ஆண்டு ஜானி தலைமறைவானார். அதன் பிறகு அவரை பிடிக்க முடியவில்லை.

ஆனால், சர்வதேச இணைய அழைப்புகள் மூலம் வேலூர், காட்பாடி பகுதிகளில் உள்ள முக்கிய தொழிலதிபர்களை மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்து வந்ததாக கூறப்படுகிறது. இவரை பிடிக்க முடியாமல் பல நேரங்களில் தனிப்படையினர் ஏமாற்றம் அடைந்தனர்.இதற்கிடையில், ரவுடி ஜானியை பிடிக்க வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலககத்தில் வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன் தலைமையில் கடந்த மாதம் தனியாக ஆய்வுக்கூட்டம் நடந்தது.இதில் வேலூர் எஸ்.பி. செல்வகுமார் மற்றும் ஜானியை பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படையினர் பங்கேற்றனர். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் புதிய யுக்திகள், புதிய குழுக்களுடன், புதிய கோணத்தில் தேடுதல் வேட்டையை தொடங்கினர்.இதனையடுத்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உத்தரவின் பேரில் 3 சிறப்பு தனிப்படை அமைக்கப் பட்டது. தனிப்படை கலைத்துறையினர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.இந்நிலையில் ரவுடி ஜானி பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.தனிப்படை காவல்துறையினர் பெங்களூருவுக்கு விரைந்தனர். அங்கு பதுங்கி இருந்த ஜானியை சுற்றி வளைத்தனர். அப்போது அவர் தப்பியோட முயன்றார். ஆனால் போலீசார் துப்பாக்கி முனையில் அவரை கைது செய்தனர்.இதனிடையே ரவுடி ஜானி தனது மனைவியிடம் செல்போன் வாட்ஸ் அப்பில் வீடியோ காலில் பேசினார்.அதில் அவர் தன்னை காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று கூச்சலிட்டவாறே ஓடியது பதிவாகி உள்ளது. அந்தவீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரபல ரவுடியான ஜானி கைது செய்யப் பட்டது வேலூர் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூர் நகரில் கைதான ஜானி வேலூருக்கு கொண்டு வரப்பட்டார். அவரது கூட்டாளிகள், ஜானிக்கு உதவியவர்கள் குறித்த தகவல்களை பெற காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். இது தொடர் பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.