வேலூர் மாநகராட்சி 37வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை கங்கா நாயக் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த சனிக்கிழமை(பிப்.19) அன்று நடைபெற்றது. அதனை தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் தமிழகம் முழுவதும் 268 மையங்களில் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
பெரும்பாலான இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. வேலூர் மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளது. இதில் 11 வார்டுகளில் திமுக முன்னிலை வகித்து வருகிறது. இத்தேர்தலில் திமுக சார்பாக 37வது வார்டில் திருநங்கை கங்கா போட்டியிட்டார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திருநங்கை கங்கா நாயக் 2131 வாக்குகள் பெற்று 15 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற அவரை சக திருநங்கைகள் மற்றும் பொதுமக்கள் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.