வேலூர், ஆக. 24- ராணிப்பேட்டை சாராட்சியர் அலுவலகத்தில் உள்ள பொருள் களை நீதிமன்ற ஊழியர்கள் வியாழக்கிழமை ஜப்தி செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ராணிப்பேட்டை அருகே கடந்த 1981-ஆம் ஆண்டு பெல் நிறுவனத் தொழிற்சாலை அமைக்க லாலாப்பேட்டை, சீக்கராஜபுரம், நரசிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்குச் சொந்தமான நிலங்கள் மாவட்ட வருவாய்த் துறை சார்பில் கையகப்படுத்தப்பட்டன. அப்போது, விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை, விவசாயிகளின் குடும்பங்களில் ஒருவருக்கு பெல் நிறுவனத்தில் தகுதிக்கு ஏற்ப வேலை வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. ஆனால் நீண்ட போராட்டத்துக்குப் பிறகே அந்நிறுவனம் வேலை வழங்கியது. மேலும், கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கான இழப்பீட்டுத் தொகை வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது. இதனால், பெல் நிறுவனத்துக்கு நிலம் வழங்கிய விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி நீதிமன்றத்தில் கடந்த 1984-ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை அரக்கோணம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நிலம் வழங்கிய லாலாப்பேட்டையைச் சேர்ந்த ஆனந்தன், சின்னசாமி, பஞ்சாட்சரம் மற்றும் திருவேங்கடம் ஆகிய 4 பேருக்கும் இழப்பீட்டுத் தொகைக்காக சார்-ஆட்சியர் அலுவலகப் பொருள்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் நீதிமன்ற ஊழியர்கள் சார்-ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்றனர். அப்போது, சார்-ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், அவகாசம் கேட்டதை அடுத்து ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது.