வேலுர், நவ. 2- விஐடி வேளாண் துறை சார்பில் உழவர் களஞ்சியம், வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் வேந்தர் கோ.விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கண்காட்சியை துவக்கி வைத்து பேசுகையில், விவசாயம் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. தென்பண்னை ஆறு - பாலாறு இணைப்பு நடவடிக்கை வேலை நடைபெற்று வருகிறது. 60 ஆயிரம் கோடி திட்டத்தில் கோதாவரி - காவேரி நதி இணைப்பு திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இந்த திட்டத்தை நடைமுறைபடுத்த, அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கும் என்றார். வேந்தர் கோ.விசுவநாதன் பேசுகையில், திருவள்ளூவர் விவசாயம் பற்றி 10 குறள்கள் எழுதியுள்ளார். சிந்துசமவெளி நாகரிகத்துக்கு முன்பே நாம் விவசாயம் செய்துள்ள பெருமை நமக்கு உண்டு. தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே விவசாய நாடுதான். காந்தி கூறியுள்ளபடி இந்தியா கிராமத்தில்தான் வாழ்கிறது. 70 விழுக்காடு மக்கள் விவசாயத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் சார்ந்துதான் வாழ்கிறார்கள் என்றார். இதில் சட்டமன்ற எதிர்க் கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.