tamilnadu

மணல் கொள்ளையைத் தடுக்க மேலும் ஒரு சிறப்புப் படை

வேலூர், மே 18-வேலூர் மாவட்டத்தில் மணல் கொள்ளையைத் தடுக்க ஏற்கெனவே ஒரு தனிப்படை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்புப் படையும் அமைக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் பாலாற்றில் அதிகரித்து வரும் மணல் கொள்ளையைத் தடுக்க வருவாய்த் துறை அதிகாரிகளும், காவல் துறையினரும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். எனினும், மணல் கொள்ளை தொடர்ந்து அதிக அளவில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, ஆற்றுப்படுகைகளில் மணல் அள்ள மாட்டு வண்டி களுக்கு அனுமதியளிக்கப்படுகிறது. ஆனால், பல இடங்களில் அனுமதி பெறாமலும், ஏற்கெனவே பெற்ற அனுமதியைக் கொண்டே மாட்டு வண்டிகளில் மணல் அள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறு மாட்டு வண்டிகளின் மூலம் அள்ளப்படும் மணல், ஓரிடத்தில் குவிக்கப்பட்டு, பின்னர் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, மாவட்டம் முழுவதும் அதிகரித்து வரும் மணல் கொள்ளையைத் தடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. எனினும், மணல் கொள்ளை தொடர்ந்து அதிகரித்து வருவதாக மாவட்டக் காவல் துறைக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அத்துடன், மணல் கொள்ளையில் ஈடுபடுவோரால் சட்ட ஒழுங்கு பிரச்னைகளும் ஏற்பட்டு வருவதை அடுத்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் ஒரு உதவி ஆய்வாளர், 10 ஆயுதப்படை காவலர்கள் அடங்கிய சிறப்புப் படையை அமைத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். இந்த சிறப்புப் படை மாவட்டம் முழுவதும் மணல் கொள்ளை நடைபெறும் இடங்களைக் கண்காணிப்பதுடன், அவ்வாறு மணல் கொள்ளையில் ஈடுபடுவோரைத் தடுத்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்று மாவட்டக் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.