tamilnadu

img

இந்நாள் இதற்கு முன்னால்

1494 - புதிய உலகத்தை போர்ச்சுகீசியப் பேரரசும், ஸ்பெயினின் கேஸ்டைல் முடியரசும் பங்கிட்டுக்கொண்ட டோர்டசில்லாஸ் உடன்படிக்கை உருவானது. ஐரோப்பாவுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட நிலப்பகுதிகளைத்தான் (அமெரிக்கக் கண்டங்கள்) புதிய உலகம் என்று அழைத்து, இரு நாடுகளும் தங்களுக்குள் பங்குபிரித்தன. 1470இல் இத்தாலிய வானவியலாளர் டோஸ்கேனல்லி, மேற்கு நோக்கிப் பயணித்தால் இந்தியாவை அடைவது எளிதாக இருக்கும் என்று கூறினார். அதன்படி, ‘பெருங்கடல் கடல்’ என்றழைக்கப்பட்ட அட்லாண்ட்டிக் வழியே பயணித்து, ‘ஓரியண்ட்’ என்றழைக்கப்பட்ட கீழை நாடுகளை அடையும் கொலம்பசின் திட்டத்தை, போர்ச்சுகீசின் இரண்டாம் ஜான் அரசர் ஏற்கவில்லை. 1488இல் பார்த்தலேமு டயஸ் நன்னம்பிக்கை முனையை அடைந்தது இந்தியாவை அடையும் பயணத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக அமைந்தது. இதனால், கேஸ்டைல் அரசி இரண்டாம் எலிசபெத், ஆரகானின் அரசர் இரண்டாம் ஃபெர்டினாண்ட் ஆகியோருடன் 1492இல் சாண்ட்டாஃபி சரணாகதிகள் ஒப்பந்தத்தைச் செய்துகொண்டு பயணித்த கொலம்பஸ், முதல் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பும்போது முதலில் போர்ச்சுகல்லுக்கு வந்து இரண்டாம் ஜான் அரசரிடம் தான் கண்டுபிடித்த புதிய நிலப்பரப்புகளைப்பற்றித் தெரிவித்தார். உடனே ஜான், 1479இல் ஏற்பட்ட ஆல்காகோவாஸ் ஒப்பந்தத்தின்படி கேனரி தீவுகளுக்குத் தெற்கே கண்டுபிடிக்கப்படும் அனைத்து நிலப்பரப்புகளும் போர்ச்சுகல்லுக்குத்தான் சொந்தம் என்று எச்சரித்து அனைத்து கத்தோலிக்க அரசர்களுக்கும் கடிதம் அனுப்பினார். அட்லாண்ட்டிக் கடலில் போர்ச்சுகல்லே பலம்வாய்ந்த நாடாக இருந்ததால், பிரச்சனையை சுமுகமாக முடிக்க மற்ற நாடுகள் போப்பை நாடின. அசோரஸ் தீவுகள் அல்லது வெர்டே முனைக்கு மேற்கில் 100 லீக் வரையுள்ள அனைத்தும் கேஸ்டைலுக்குச் சொந்தம் என்னும் இண்ட்டர் கேட்டரா உத்தரவை 1493இல் போப் பிறப்பித்தார். (லீக் என்பது பழங்கால அளவை. ஒரு மனிதன் ஒரு மணி நேரத்தில் நடக்கும் தொலைவு!) இதில் உடன்பாடில்லாத ஜான், மற்ற அரசர்களுடன் நேரடியாகப் பேசி, 270 லீக்வரை என்று மாற்றியமைத்ததே இந்த டோர்டசில்லாஸ் உடன்படிக்கை. தெளிவற்ற வரையறை என்று இருதரப்புக்குமே தெரிந்திருந்தபோதும், மற்றவர் ஏமாந்ததாக நம்பினர்! இந்தக் கோட்டிலிருந்து எதுவரை என்பதற்கான ‘எதிர்க்கோடு’, 1529இல் ஸரகோஸா ஒப்பந்தத்தில் வரையறுக்கப்பட்டது.