நோபல் பரிசுத்தொகை இதுவரை ரூ7.33 கோடி வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 8.12கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
டைனமைட் வெடிகுண்டை கண்டுபிடித்த ஆல்ப்ரட் நோபல் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த பெரும் பணக்காரர் ஆவார். இவர் மரணத்தின் போது 31 மில்லியன் கிரவுன்களை விட்டுச் சென்றார். அதன் இப்போதைய மதிப்பு 180 கோடி கிரவுன் ஆகும்.
அந்த பணத்தை வைத்து ஒவ்வொரு ஆண்டும் அறிவியல், அமைதி, பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நோபல் பரிசும் ரொக்கப்பணமும் வழங்கப்படும். இதுவரை நோபல் பரிசுடன் வழங்கப்பட்ட தொகை பல்வேறு காலகட்டங்களில் மாற்றப்பட்டுள்ளது. அதுபோல் தற்போதும் முன்பை விட செலவுகளும், மூலதனமும் நிலையாக இருப்பதால் கூடுதல் தொகையை பரிசாக அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக நோபல் ஃபவுண்டேஷன் தலைவர் லார்ஸ் ஹெய்கென்ஸ்டென் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நோபல் அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
2012-ம் ஆண்டு முதல் நோபல் அறக்கட்டளையின் முதலீட்டு மூலதனம் ரூ.2,438 கோடியில் இருந்து ரூ.3,737 கோடியாக அதிகரித்து உள்ளது. அதிலிருந்து சுமார் 9 சதவீத வட்டி வருவாய் கிடைத்து வருகிறது.
நோபல் அறக்கட்டளையின் நிதி நிலையை வலுப்படுத்துவதற்காக கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக தற்போது நோபல் பரிசின் பண இருப்பை அதிகரிக்க முடிந்தது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நோபல் அறக்கட்டளையின் நிதி நிலையை மேம்படுத்துவதற்காக முன்பு சிக்கன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கடந்த 2011-ம் ஆண்டு நோபல் பரிசு தொகை ரூ.8.12 கோடியில் இருந்து ரூ.6.50 கோடியாக குறைக்கப்பட்டது.
இந்த ஆண்டு பல்வேறு பிரிவுகளுக்கான நோபல் பரிசு வரும் அக்டோபர் 5-ந்தேதி முதல் அறிவிக்கப்படுகிறது. இதில் அந்தந்த பிரிவுகளுக்கான பரிசு பற்றிய விவரம் இடம் பெறும்.