tamilnadu

img

விவசாயிகள் சங்கத் தலைவர்களை சிறையிலடைப்பதா?

தமிழக அரசுக்கு சிபிஎம் கண்டனம்

சென்னை, செப்.14- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: பவர்கிரிட்  நிறுவனத்தின் சார்பில் தாராபுரம் அருகே புகலூர் முதல் கேரள மாநிலம் திருச்சூர் வரை அமைக்கப்பட உள்ள 400 கிலோவாட் உயர்மின் கோபுரம் திட்டத்திற்காக, திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், சின்னாரிபாளையம் கிராமத்தில் எந்த முன்னறிவிப்புமின்றி, முன்நுழைவு அனுமதியின்றி பவர்கிரிட், வருவாய்துறை, காவல்துறை இணைந்து வெள்ளிக்கிழமை உழவர்களின்  நிலங்க ளுக்குள் அராஜகமாக நுழைந்தனர். அத்து மீறி நிலத்தை அளக்க முயன்றபோது  அதனை எதிர்த்த விவசாயிகள் ஆண்கள் - பெண்கள் உட்பட 66 பேர் கைது செய்யப் பட்டு இரவு விடுதலை செய்யப்பட்டனர்.  அதேசமயம், உயர்மின் கோபுர எதிர்ப்பு விவசாயிகள் கூட்டமைப்பைச் சேர்ந்த முன்னணி நிர்வாகிகளைப் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு குண்டடம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, முன்னணித் தலைவர்களான  வழக்கறிஞர்  ஈசன்,  சண்முக சுந்தரம்,  முத்துவிசுவநாதன்,  பார்த்தசாரதி, தங்கமுத்து ஆகிய ஐந்து பேர் மீதும் காவல்துறை பொய் வழக்குப் போட்டு கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளது.

நில உரிமைக்காகப் போராடும் விவசாயிகள் மீது தமிழக அரசு கடும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.  உயர்மின் கோபுரம் அமைக்கப்படுவதால் வாழ்வாதாரத்தை இழக்கும் விவசாயிகளை தமிழக அரசு அழைத்துப்பேசி உரிய இழப்பீடு வழங்கவேண்டும். மேலும், காலாவதியாகிப் போன 1885 ஆம் ஆண்டு தந்திச் சட்டத்தைப் பயன்படுத்தி உயர்மின் கோபுரங்கள் அமைப்பதையும், அதற்காக அத்துமீறி நில அளவை செய்வதையும் எவ்வித நிபந்தனையும் இன்றி உடனடியாக நிறுத்த வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் புதிய சட்டம் இயற்ற வேண்டும். ஈசன் உட்பட ஐந்து தலைவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கைத் திரும்பப் பெறுவதோடு, கோவைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐந்து பேரையும்  எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்யவேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பெ.சண்முகம் கண்டனம்

இந்நிலையில் செப்டம்பர் 14 சனிக் கிழமையும் வடக்கு சின்னசின்னாரி பாளையம் கிராமத்தில் விவசாயிகளின் நிலத்தில் அளவீடு செய்திட அதிகாரிகள் சென்றபோது விவசாயிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளை கைது செய்து மண்டபத்தில் வைத்துள்ளனர். இவ்விரண்டு கைது சம்பவங்களையும் வன்மையாக கண்டித்துள்ள தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பெ.சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில், “விவசாயிகளின் நிலத்தில் அவர்களின் ஒப்புதல் இல்லாமல் உயர்மின் கோபுரம் அமைக்கப்படுவதை தொடர்ந்து எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை தமிழக அரசு காவல்துறையினர் மூலம் அடக்கிவிடலாம் என்று செயல்படுவதை வன்மையாக கண்டிக்கிறோம். பாதிக்கப்பட்ட விவசாயிகளை முறையாக அழைத்து பேசி உரிய இழப்பீடும், வாடகையும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.

13.9.2019 அன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐந்து பேரையும் உடனடியாக விடுதலை செய்திட வேண்டும், விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். அதே போல் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகளையும் உடனே விடுதலை செய்ய வேண்டும். தமிழக அரசு விவசாயிகளிடம் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.